'சார்பட்டா பரம்பரை' - கலைக்கும் அரசியல் விருப்பத்துக்குமான இடைவெளி

-சுகுணாதிவாகர்

தமிழ் சினிமாக்களில் தலித் அரசியலை முன்வைப்பவர் என்றவகையிலும் சினிமாவைத் தாண்டியும் கலை அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்பவர் என்ற வகையிலும் பா.இரஞ்சித்தின் திரைப்படங்களுக்கென்று ஓர் எதிர்பார்ப்பிருக்கிறது. அந்தவகையில் 'சார்பட்டா பரம்பரை' குறித்தும் மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது.

குத்துச்சண்டையை மையமாக வைத்து இதற்குமுன் சமீபகாலங்களில் வெளியான இரு படங்கள் 'இறுதிச்சுற்று', 'பூலோகம்'. மணிரத்னத்தின் உதவியாளரான சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச்சுற்று' நாயகி பாத்திரம் சென்னை மீனவக்குப்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எதார்த்தத்தில் இருந்து முற்றிலும் விலகி மணிரத்னம் பாணி படங்களை ரசிக்கும் மேல்தட்டு ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தது. ஜனநாதன் வசனத்தில் கல்யாண் இயக்கிய. 'பூலோகம்' படம் எதார்த்தத்துடன் அதிகம் நெருக்கமாக இருந்ததுடன் மூலதன வர்த்தக அரசியலின் தந்திரங்களையும் பேசியது. எனவே 'சார்பட்டா பரம்பரை' படம் குறித்த எதிர்பார்ப்புடன் மேற்கண்ட இருபடங்கள் குறித்த ஒப்புமை மனநிலையும் உருவாகியிருந்தது. மேலும் 'சார்பட்டா' ட்ரெய்லர் வெளியானபோது பசுபதியின் தோரணையில் 'ஆடுகளம்' பேட்டைக்காரன் தெரிந்தார். ஆனால் மேற்கண்ட படங்களில் இருந்து முற்றிலும் விலகி வேறுமாதிரியான கதைக்களம், வேறுமாதிரியான மனிதர்களை முன்வைத்து 'சார்பட்டா பரம்பரை'யை உருவாக்கியிருந்தார் இரஞ்சித்.


இரஞ்சித்தின் தனித்துவங்களில் ஒன்று கதைசொல்லல் முறையும் பாத்திரச்சித்திரிப்புகளும். பெரும்பாலான தமிழ்மக்கள் பெரும்பான்மை தமிழ் சினிமாக்களில் பார்க்காத மனிதர்களைத் திரையில் கொண்டுவந்து அதைக் கலைநேர்த்தியுடன் படைப்பார். எம்.ஆர்.ராதா, ரஜினி, சத்யராஜ், வடிவேலு என்று தனித்துவமான உடல்மொழியால் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட நடிகர்கள் உண்டு. ஆனால் அவர்கள் எல்லாம் தாங்களே தனக்கான உடல்மொழியை உருவாக்கித் தனித்துவப்படுத்திக்கொண்டவர்கள். ஆனால் பா.இரஞ்சித்தோ ஓர் இயக்குநராகத் தனித்துவமான உடல்மொழியைக் கொண்ட பாத்திரங்களை உருவாக்கி நிலைநிறுத்துகிறார் என்பது முக்கியமானது. 'மெட்ராஸ்' ஜானி முதல் 'சார்பட்டா' டான்ஸிங் ரோஸ் வரை விதவிதமான மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை மற்றும் தனித்துவ உடல்மொழிகள் இரஞ்சித்தின் பெரும்பலம். இன்னும் பல சினிமாக்களில் பதிவுசெய்வதற்கு அவருக்கு மனிதர்களும் வாழ்க்கையும் இருக்கின்றன.

தமிழ்ப்பிரபாவின் பங்களிப்பும் இதில் இருக்கும் என்று நினைக்கிறேன். அவரது 'பேட்டை' தமிழின் முக்கியமான அதேநேரம் சுவாரஸ்யமான நாவல். அந்த நாவலின் பெரும்பலம் அதில் வரும் மனிதர்களும் அவர்களின் உடல்மொழியைத் தமிழ்ப்பிரபா சித்திரித்திருக்கும் விதமும். மனிதர்களையும் அவர்கள் உடல்கள் இயங்கும்முறையையும் கவனிப்பதில் பிரபாவுக்கும் இரஞ்சித்திக்கும் அலைவரிசை பொருந்தியிருக்கிறது. அது சார்பட்டாவின் கூடுதல் பலம்.

1974 காலகட்டத்து மனிதர்கள், வாழ்வியல், பாக்ஸிங் இவற்றுக்கிடையில் பொருந்தாமல் தெரிந்த இரண்டு அம்சங்கள் ஆர்யாவும் அவர் அம்மா பாத்திரமும். மற்றவர்கள் எல்லாம் அந்தக் காலத்திலும் இடத்திலும் கரைந்துபோக ஆர்யா மட்டும் 'பாஸ் என்கிற பாஸ்கரன் - பார்ட் டூ'வுக்கு நடித்துக்கொண்டிருந்ததைப் போல் ஒரு பிரமை. உடலைச் செதுக்கிய அளவுக்கு உடல்மொழியையும் பேச்சுமொழியையும் ஆர்யா மாற்றிக்கொள்ளவில்லை. அதேபோல் அந்த அம்மா பாத்திரம். ஊரெல்லாம் சண்டை போடும் முரட்டு மகனின் மணிக்கட்டில் கயிறுகட்டி ''இனிமேல் யாரையும் அடிக்கக்கூடாது" என்று சத்தியம் வாங்கும் ரஜினி படத்து அம்மா. கபிலன் அப்பா கொல்லப்படும் காட்சியெல்லாம் எதற்கு இவ்வளவு விரிவாக என்று தெரியவில்லை. இந்த இரண்டு அம்சங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒரு சினிமாவாக 'சார்பட்டா பரம்பரை' முக்கியமானது. வழக்கமாக இரஞ்சித் படங்களில் பெண்பாத்திர சித்திரிப்புகளுக்கு முக்கியத்துவமிருக்கும். 'சார்பட்டா'விலும் மாரியம்மா, வெற்றிச்செல்வனின் மனைவி என்று தனித்துவமான பெண்பாத்திரங்கள் முக்கியமானவை.


அடுத்து அதன் அரசியல் சித்திரிப்பு. தமிழில் அரசியல் கட்சிகள் பற்றிய சினிமாக்கள் வந்திருந்தாலும் அவற்றில் நேரடியான சித்திரிப்பு இருந்ததில்லை. மலையாள சினிமாக்களுடன் ஒப்பிடும்போது நேரடி அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் நினைவுபடுத்தும்படியான காட்சிகள் உள்ள சினிமாக்களே தமிழில் அதிகம். அந்தவகையில் வெற்றிமாறனின்  'வடசென்னை'யில் ராதாரவி அ.தி.மு.க.காரர் என்ற நேரடி சித்திரிப்பு இருந்தாலும் அவை ஒட்டுமொத்தப்படத்தில் சிலநிமிடங்களில் வந்துபோகும் காட்சிகள் மட்டுமே. ஆனால் 'சார்பட்டா பரம்பரை'யில் தி.மு.க, அ.தி.மு.க காரர்கள் படம் முழுக்க வருகிறார்கள். அந்தவகையில் முக்கியமான முயற்சி. அதேநேரத்தில் இதில் சில பிரச்னைகளும் போதாமைகளும் இருக்கின்றன.
ரங்கனின் அரசியல் ஈடுபாடு, அவரின் பாக்ஸிங் ஆர்வம், சக மனிதர்களுடனான அவர் உறவு எல்லாம் தனித்தனியாக நிற்கின்றன. பாக்ஸிங்கில் மீரானும் கபிலனும் அணியும் உதயசூரியன் ஜெர்சி - வேம்புலி அணியும் காங்கிரஸ் ஜெர்சி - இறுதியில் கபிலன் அணியும் நீல ஜெர்சி என அவையும் குறியீடுகளாக மட்டுமே துருத்தி நிற்கின்றன. ரங்கனைத்தாண்டி வடசென்னை மக்களுக்கும் தி.மு,க.வுக்குமான உறவு என்பதோ இந்திய குடியரசுக்கட்சிக்கும் தலித் மக்களுக்குமான உறவோ சித்திரிக்கப்படவில்லை.

ரங்கனும்கூட முரசொலி படிப்பது, திமுக மற்றும் தி.கவினருடன் உரையாடுவது என்கிற அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறாரே தவிர, ஒரு கட்சிக்காரர் என்றமுறையில் அந்தப் பகுதி மக்களுக்கும் அவருக்குமான உறவைச் சித்திரிக்கும் ஒரு காட்சிகூட இல்லை. இத்தனைக்கும் ஆளுங்கட்சிக்காரர் என்றமுறையில் அவரை மக்கள் அணுகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். "நடிகர் கட்சியில் சேரக்கூடாது" என்று உரையாற்றும் ரங்கன் வாத்தியாரின் மகனே எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்தபிறகும் ரங்கன் வாத்தியாரிடம் எந்தவிதமான எதிர்வினைகளும் இல்லை. 'காம்ரேட் இன் அமெரிக்கா' மலையாளப் படத்தில் துல்கர் சல்மான் சி.பி.எம். அவர் தந்தை காங்கிரஸ். இருவரும் வீட்டில் ஜாலியாகப் பேசிக்கொள்வார்கள். அதேநேரத்தில் அரசியல் முரண்பாடும் சித்திரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படியான அப்பாவுக்கும் மகனுக்குமான அரசியல் முரண் குறித்த காட்சிகள் 'சார்பட்டா'வில் இல்லை.


கலைஞரின் மீது பற்றுகொண்ட, 'செங்கோட்டை தூள்தூளாகும்' என்று முழங்கும் ரங்கன், கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது, தமிழகத்திலும் எமெர்ஜென்சி எந்தத் தடையுமின்றித் தன் கொடுங்கரங்களை நுழைத்துவிட்டது என்று அறிந்தும் அதற்கு அதிர்ச்சியடையாமல் குத்துச்சண்டையைத் தொடர்ந்து நடப்பதில் ஆர்வம் காட்டுகிறார். 'கட்சியைவிட, அரசியல் உணர்வைவிட சார்பட்டா பரம்பரைதான் ரங்கனுக்கு முக்கியம்' என்று எடுத்துக்கொள்ளலாமா என்று தெரியவில்லை. ரங்கனும் கட்சிக்காரர்களும் ''தலைவர்", "கழகத்தலைவர்" என்கிறார்களே தவிர 'கலைஞர்' என்ற வார்த்தையை உச்சரிப்பதில்லை. கலைஞர் படம், உதயசூரியன், திமுக துண்டுவரை சித்திரித்தவர்கள் ஏன் இந்த வார்த்தையை விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை. கருணாநிதி என்ற பெயரை போலீஸ்காரரும் டாடியும் மட்டும்தான் உச்சரிக்கிறார்கள். ஒரு குத்துச்சண்டை வாத்தியாராக ரங்கனின் பாத்திரம் முழுமையடைந்திருக்கிறதே தவிர, ஒரு கட்சிக்காரராக பாத்திரம் முழுமையடையவில்லை.

இதேபோல் இந்தியக் குடியரசுக்கட்சிக் காரர்களும் கபிலன் கெலித்தவுடன் மாலையிட வருகிறார்கள். இறுதியில் கபிலனுக்கு நீல ஜெர்சி தருகிறார்கள். மற்றபடி தி.மு.க.வும் இந்தியக்குடியரசுக் கட்சியும் மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித்தீவில் இயங்குகின்றன. தி.மு.க.வும் அ.தி.மு.கவும் திராவிடக் கட்சிகள் என்று சொல்லப்பட்டாலும் இரண்டுக்குமான வித்தியாசங்கள் ஏராளம். இந்திய தேசிய எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு போன்ற பல கருத்தியல் அடிப்படைகளைக் கைவிட்ட, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, திராவிட அடையாளம் மட்டுமே சுமந்த கட்சியாகவே அ.தி.மு.க. உருவாகித் தொடர்கிறது. திராவிட அரசியலுக்கு மாறாக எம்.ஜி.ஆர் தன் கட்சிக்கு அனைத்திந்திய அடையாளம் கொடுத்தார். பார்ப்பனரல்லாதார் அரசியலின் நீட்சியாக உருவான திராவிட இயக்கத்தில் பார்ப்பனத் தலைமைக்கு இடம் கொடுத்ததுடன் பார்ப்பனிய, இந்துத்துவ கருத்தியலுக்குத் துணைபோன கட்சியாகவே அ.தி.மு.க மாறிப்போனது. பகுத்தறிவு, கடவுள் மறுப்பு ஆகியவையும் நீக்கம் செய்யப்பட்ட அரசியல் கட்சியே அ.தி.மு.க. அந்தவகையில் அ.தி.மு.க.வைவிட தி.மு.க.வை சாதகமாகச் சித்திரித்தது 'சார்பட்டா பரம்பரை'யின் வரவேற்கத்தக்க அம்சம். அ.தி.மு,க. வருகையின்மூலம் கபிலனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சீரழிவுகளைத் தமிழக அரசியலில் ஏற்பட்ட சீரழிவுகளுக்கான குறியீடுகளாகவே பார்க்கலாம். அதேநேரத்தில் தி.மு.க.வை விமர்சனபூர்வமாக அணுகும் காட்சிகளில் போதாமை இருக்கிறது.

கபிலன் இறுதியில் நீல ஜெர்சியை அணிவதையும் ரங்கன் சிறையிலிருந்து வெளிவரும் காட்சியையும் இணைத்து, 'மிசா கொண்டுவந்த இந்திராகாந்தியுடனே கூட்டுவைத்து தி.மு.க. லட்சியவாதத்தை இழந்துவிட்டது. அதனால்தான் பதிலீடாக தலித் அரசியலை இரஞ்சித் முன்வைக்கிறார்' என்று ஒரு வாசிப்பு முன்வைக்கப்படுகிறது.

ரங்கன் சிறையைவிட்டு வெளியே வரும் காலம் 1977. அப்போது ஜனதா கூட்டணியில்தான் தி.மு.க. இருக்கிறது. இந்திராவை எம்.ஜி.ஆர் ஆதரிப்பதும் படத்தில் காட்டப்படுகிறது. 1980ல்தான் இந்திரா காங்கிரஸும் தி.மு.க.வும் கூட்டணி வைத்தன. நெருக்கடிநிலை காலத்தில்தான் தி.மு.க. கடும் சவால்களைச் சந்தித்தது. யார் யார் சிறையில் இருக்கிறார்கள் என்றே தெரியாத நிலை. முரசொலிக்கும் தணிக்கை. 'அண்ணா நினைவுநாளில் அஞ்சலி செலுத்த வர இயலாதவர்கள்' என்று தந்திரமாக 'முரசொலி'யில் கலைஞர், மிசாவில் கைதானவர்களின் பட்டியலை வெளியிட்டார். கலைஞர் குடும்பப்பெண்கள் சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டனர். ஸ்டாலின் மீதான தாக்குதலைத் தடுக்க முயன்றதில் சிட்டிபாபு மரணமடைந்தார். ஆற்காடு வீராசாமிக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்திலோ ரங்கன் கொஞ்சம் கசங்காமல் சிறையைவிட்டு வெளியேவருகிறார்.


நெருக்கடிநிலைக்குப் பயந்து கட்சிக்காரர்களில் சிலர் 'எனக்கும் தி.மு.க.வுக்கும் தொடர்பில்லை' என்று எழுதிக்கொடுத்து வெளியேறினார்கள். கலைஞரின் கார் டிரைவரே ஓடிப்போனார். கண்ணப்பன் 'காரோட்டி' ஆனார். ஆனால் சார்பட்டாவிலோ மிசாவில் கைதாகி சிறையிலிருந்து வெளிவரும் ரங்கன் வாத்தியாரை மேளதாளத்துடன் வரவேற்கின்றனர். சற்றும் பொருத்தமில்லாத சூழல்.

'தி.மு.க.வின் முதலியார் அரசியலை' விமர்சிக்கலாம்தான். ஆனால் அதற்கான காலம் மிசாகாலகட்டம் அல்ல. முதலியார்கள் என்ன மிசா காலத்தில்தான் திமுகவுக்குப் படையெடுத்து வந்தார்களா என்ன? பலரும் கட்சியைவிட்டு பயந்து வெளியேறி, ஆட்சியை இழந்து கடும் சோதனைக்காலத்தைத் திமுக சந்தித்தபோது இந்தக் காட்சி பொருத்தமற்றது. வேலூர் முதலியாரை மாலை போட்டு வரவேற்கும் சூழலில் அன்றைய தி.மு.க. இல்லை என்பதே எதார்த்தம். படம் முழுமையான தி.மு.க. ஆதரவுப் படமாகப் புரிந்துகொள்ளப்படுமோ என்ற தயக்கமும் தலித் அரசியல் பார்வையிலிருந்து தி.மு.க. மீது விமர்சனத்தை முன்வைத்தாக வேண்டுமே என்ற முனைப்பும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்குப் பொருத்தமான காட்சி இதுவல்ல.

தி,மு,கவில் முதலியார் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது, அதனால்தான் இரஞ்சித் தலித் அரசியலைச் சுட்டிக்காட்டுகிறார் என்றும் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. படத்தில் ரங்கன் வாத்தியார் தலித்தா என்பது குறித்த உறுதியான சித்திரிப்புகள் இல்லை. தணிகை, கபிலன், மீரான்மைதீன், டாடி ஆகியோரின் அடையாளங்கள் குறித்துமட்டுமே சித்திரிப்புகள் உள்ளன. தணிகை தலித் அல்லாத ஆதிக்கச்சாதி என்பது மட்டும் புலப்படுகிறது. ''மாடு செத்தா சொல்லிவிடறேன். புறவாசலில வந்து தூக்கிட்டுப்போகட்டும்'னு தணிகை கபிலனைப் பார்த்து சொல்வதாக வசனம் வருகிறது. இத்தகைய தீண்டாமை 74 காலகட்டத்தில் சென்னையில் இருந்ததில்லை.


மேலும் தி.மு.க. லட்சியவாதத்தில் இருந்து விலகிவிட்டது என்று லட்சியவாதத்தின் அடிப்படையில் திமுக X இந்திய குடியரசுக்கட்சி என்றும் நிறுத்திவிட முடியாது. சக்திதாசன் போன்ற அர்ப்பணிப்புமிக்க தலைவர்கள் இந்திய குடியரசுக்கட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் வெகுமக்களுக்கு 'இந்திய குடியரசுக்கட்சி' என்றதும் நினைவுக்கு வரும் முகம் செ.கு.தமிழரசன். அவர் அ.தி.மு.க.வின் தொங்குசதையாக இருந்து ஜெயலலிதாவின் ஊழல்களையும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் நியாயப்படுத்தியவர். இந்திய குடியரசுக்கட்சியின் இன்னொரு பிரிவான ராமதாஸ் அத்வாலே பிரிவு, பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) பிரிவின் சார்பில் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் பவர்ஸ்டார் சீனிவாசன். எனவே இதுவும் பொருத்தமற்ற வாதம்.
தென்மாவட்டங்களிலும் வடமாவட்டங்களிலும் சுயமரியாதை உணர்வுடன் 'திருப்பி அடி' முழக்கத்துடன் தலித் எழுச்சி ஏற்பட்டது. திராவிடக் கட்சிகள், இடதுசாரிக்கட்சிகள் ஆகியவை தலித் பிரச்னைகளுக்குப் போதிய முக்கியத்துவம் தரவில்லை, போதுமான தலித் பிரதிநிதித்துவம் தருவதில்லை என்ற மன உணர்வுடன் தலித் இளைஞர்கள் இந்த இயக்கங்களில் இணைந்தனர். சென்னையைப் பொறுத்தவரை ஒடுக்கும்சாதி என்று ஒரு குறிப்பிட்ட சாதியைச் சொல்லிவிட முடியாது. எனவே நேரடியான சாதி ஒடுக்குமுறை, அதற்கு எதிர்வினையாக இயக்கங்கள் என்றில்லாமல் அம்பேத்கர், பௌத்த அடையாளங்களின்வழி தலித் அரசியல் எழுச்சி உருவானது. ஆனால் 'சார்பட்டா'வில் கபிலன் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சரிவையும் சந்தித்தவனாகவும் பாக்ஸிங் மீதான ஆர்வம் கொண்டவனாகவும் காட்டப்படுகிறானே தவிர அவனது அரசியல் உணர்வு குறித்த சித்திரிப்புகள் இல்லை. திராவிட அரசியல் ஏமாற்றுவதால் தலித் அரசியல் உணர்வு கொள்வதற்கான அடிப்படைகளும் இல்லை. ஏனெனில் அதற்கான சம்பவங்களும் படத்தில் இல்லை.  

அவனுக்குத் திராவிட மற்றும் தலித் அரசியல் குறித்த எந்த அடையாளங்களுமே இல்லை என்னும்போது திடீரென்று நீலத்துண்டு, நீல ஜெர்சி என்பது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.   நீலத்துண்டு, நீல ஜெர்சி இருந்தாலும் அடிவாங்கிய கபிலனை ஆறுதல்படுத்தி, அவனை வெல்ல வைப்பது கறுப்பு-சிவப்பு ரங்கன் வாத்தியார்தான். கபிலனும் வென்றபிறகு 'ரங்கன் வாத்தியார் சிஷ்யன்டா' என்றுதான் பெருமையுடன் கூறுகிறான். எனவே இதை வெறும் வண்ணங்களின் அரசியல் மாற்றமாக மட்டும் புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

மேலும் தணிகை மட்டும் சாதிவெறிகொண்டவராக சித்திரிக்கப்பட்டிருக்கிறாரே தவிர 'பரம்பரை'களில் சாதியுணர்வும் அதுதொடர்பான முரண்களும் இருந்தனவா என்றும் காட்டப்படவில்லை. எனவே சாதி ஒடுக்குமுறையின் காரணமாகத்தான் கபிலன் நீலத்தைத் தேர்ந்தெடுக்கிறானா என்றும் அறிய முடியவில்லை.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற எமெர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் பல தியாகங்களைச் செய்திருந்தாலும் எவ்வளவோ விலை கொடுத்தாலும் தமிழக மக்கள் அதைப்பொருட்படுத்தவில்லை. எமெர்ஜென்சி கொண்டுவந்த இந்திராவைத் தோற்கடித்து ஜனதா கட்சி 1977ல் மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் தமிழகத்தில் 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர்தான் வென்றார். எமெர்ஜென்சியை எதிர்த்த தி.மு.க. தோற்றது.  அதற்குப்பிறகுதான் கலைஞர் 1980ல் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைக்கிறார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கலைஞருக்கு 13 ஆண்டுகால வனவாசம். தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆர் கவர்ச்சி வென்றது என்றாலும் அது தோற்றுப்போன இடம் சென்னை.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும் சென்னை, தி.மு.க.வின் கோட்டையாகவே விளங்கியது. "கருணாநிதியை மெட்ராஸை விட்டு வெளியில நிக்கச் சொல்லுய்யா" என்று அ.தி.மு.ககாரர்களும் "எம்.ஜி.ஆரு ஏன்யா ஆண்டிப்பட்டிக்கு ஓடுறாரு? மெட்ராஸ்ல நிக்கச் சொல்லு" என்று தி.மு.ககாரர்களும் வாக்குவாதம் நடத்துவது அப்போதெல்லாம் இயல்பு. "படிச்சவங்க அதிகம் இருக்கிறதாலதான் மெட்ராஸ்ல திமுகவுக்கு ஓட்டு அதிகம் விழுது" என்று சென்னைக்கு வெளியே உள்ள ஊர்களில் பேசிக்கொள்வோம். அதில் ஓரளவுக்கு உண்மையும் உள்ளது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் திமுகவுக்குக் கணிசமான வாக்குவங்கி இருந்தது. இன்றும் திமுக படுதோல்வி அடையும் தேர்தல்களில்கூட தபால் ஓட்டுகளில் திமுக முன்னிலையில் வருவதைப் பார்க்கலாம்.


ஆனால் சென்னையில் திமுக வெல்வதற்கு அரசு ஊழியர்கள் மட்டுமல்ல காரணம். தலித்துகள், மீனவர்கள் என சென்னையின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களும் காரணம். தென்மாவட்டங்களில் முக்குலத்தோர்கள், மேற்குமண்டலம், வட, தென்மாவட்டங்களில் தலித் மக்கள், நரிக்குறவர்கள், தாய்மார்களின் ஆதரவைப் பெற்ற எம்.ஜி.ஆரால் சென்னை மக்களைக் கவர முடியவில்லை. அப்படிப்பட்ட திமுகவின் கோட்டையாக விளங்கிய சென்னை மக்களுக்கும் திமுகவுக்குமான உறவு இந்தப் படத்தில் ரங்கன் வாத்தியாரோடு சுருங்கிப்போய்விட்டதுதான் துயரமானது.

கட்சி அடையாளமும் சாதி அடையாளமும் இல்லாமல் எடுத்திருந்தால்கூட இந்தப் படம் சுவாரஸ்யமான ஒன்றாக வந்திருக்கும். ஆனால் இரஞ்சித் படங்கள் தனக்கான அரசியலை முன்வைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்போது அதை நிறைவேற்ற வேண்டியவராக இரஞ்சித் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல படங்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கலை புனித பாவனையுடன் வெளியாகுபவை. ஆனால் அவை அதிகாரக் கருத்தியலுக்கு சேவை செய்பவையாகவே இருக்கின்றன. இன்னொருபுறம் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கலையைப் பலிகொடுத்துவிடும் பிரசாரப்படங்களும் இருக்கின்றன. இரஞ்சித்தின் படங்கள் கலையையும் அரசியலையும் சமநிலையுடன் இணைப்பவை. ஆனால் 'சார்பட்டா பரம்பரை'யோ கலைக்கும் அரசியல் விருப்பத்துக்குமான இடைவெளியில் தத்தளிக்கிறது.

ஜல்லிக்கட்டைப் போலவே பாக்ஸிங்கை ரொமான்டிசைஸ் செய்வதும் ஆபத்தானதுதான். யார் பங்குபெற்றாலும், என்னவிதமான கலாசார அடிப்படைகள் இருந்தாலும் இறுதியில் அது ஆண்கள் மட்டுமே பங்குகொள்ளும் வன்முறை விளையாட்டுதான். 'பூலோகம்' படத்தையும் 'சார்பட்டா'வையும் ஒப்பிட்டு திரைப்பட விமர்சகர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி ஃபேஸ்புக்கில் சார்பட்டாவே சிறந்தபடம் என்று எழுதியிருந்தார். அதற்கான காரணங்களில் ஒன்றாக, சென்னை குத்துச்சண்டையை பன்னாட்டு மூலதனம் பயன்படுத்துவதாக 'பூலோகம்' சித்திரித்திருப்பது உண்மைக்கு மாறானது என்று குற்றம் சாட்டியிருந்தார். அது கற்பனைதான் என்றாலும் பாரம்பரியத்தின் பெயரிலான விஷயங்களும் வணிகமயமாக்கப்படுவதை நாம் முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது. மேலும் பாக்ஸிங் உருவாக்கும் வீரமனநிலை மனிதர்களின் மென் உணர்வுகளைக் கொன்றுவிடுவதையும் 'பூலோகம்' முன்வைத்திருந்தது. ஆனால் 'சார்பட்டா பரம்பரை'யோ ஆண்மையே வீரம் என்னும் பழமைவாதக் கருத்தியலை ஏற்றுக்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வெற்றிமாறன், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்களின் படங்களில் தனித்துவமான பெண்பாத்திரச் சித்திரிப்புகள் இருந்தாலும் அவையும் இறுதியில் ஆண்மய்ய நாயக சினிமாக்களாகவே முடிந்துவிடுவதைப் பரிசீலனை செய்யவேண்டிய தருணமிது.