தியோ ஆஞ்சலோபொலோஸின் சினிமா அழகியல் : யமுனா ராஜேந்திரன், அம்சவள்ளி உரையாடல்
- by தொகுப்பு-தினேஷ்
- 31 October 2021
தொகுப்பு : தினேஷ்
தி ட்ராவலிங் ப்ளேயர்ஸ் (The travelling players), தியோ ஆஞ்சலோபெலோஸ் இயக்கத்தில் 1975ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். மூன்று மணிநேரம், நாற்பத்திரண்டு நிமிடங்கள் கால அளவு கொண்ட, ட்ராவல்லிங் ப்ளேயர்ஸ் மொத்தமே, எண்பது லாங் ஷாட்கள் கொண்ட படம். ட்ராவலிங் ப்ளேயர்ஸ், கான் திரைப்பட விழாவில் க்ரிடிக்ட் விருது (International Film Critics Award (FIPRESCI)) வாங்கியிருக்கிறது. 1998ல் வெளியான அவரது எடர்னிடி அண்ட் எ டே (Eternity and a Day) திரைப்படம், பால்ம் தியோர் விருது வாங்கியிருக்கிறது.
சினிமா உருவாக்கத்திற்கென்று தனித்த இலக்கண வரையறைகள் கிடையாது. பிற கலைகளோடு ஒப்பிட, மிக இளவயது கொண்ட, அறிமுகமாகி நூற்றியிருபது வருடங்களே ஆன சினிமாவை, உலகின் ஒவ்வொரு இயக்குனரும், தன் சூழல், தனக்குள்ள புரிதல், தனது அனுபவம் என்பதன் அடிப்படையில் இக்கலையை அணுகுகின்றனர். எனவே, இப்படித்தான் சினிமா எடுக்கப்பட வேண்டும், இசை இப்படித்தான் பயன்படுத்தப்பட வேண்டும், படத்தொகுப்பு இன்னின்ன இலக்கணங்களைப் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் வரைமுறைகளை உருவாக்கினாலும், இந்த இலக்கண வரையறைக்குள் சிக்காத படங்களும் வெளியாகி, அதுவும் பரவலான மக்களைச் சென்றடைந்துகொண்டுதான் இருக்கிறது. ஷாட்கள் குறிப்பிட்ட நீளத்திற்குமேல் சென்றால், அது காட்சியில் தொய்வு ஏற்படுத்தும், திரைப்படங்களின் கால அளவு இரண்டரை மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும் என்றெல்லாம் சில கற்பிதங்கள் இருக்கின்றன.
ப்லிப்பைன் திரைப்பட இயக்குனர் லவ் தியாஸின் படங்கள், ஒன்பது மணி நேரம், பன்னிரண்டு மணி நேரம் ஓடக்கூடிய கால அளவு கொண்ட படங்களாக இருக்கும். அவரிடம் சென்று இதுகுறித்துக் கேட்கையில், “படம் மிக நீண்ட நேரம் ஓடக்கூடியதாக இருந்தாலென்ன? குறுகிய கால அளவு கொண்டதாக இருந்தாலென்ன? அதுவொரு திரைப்படம், அவ்வளவுதான். திரைப்படத்தின் கால அளவை மட்டும் பார்க்காதீர்கள், ஒரு திரைப்படத்தை, திரைப்படமாக பாருங்கள்” என்கிறார் லவ் தியாஸ். இன்றைக்கு, லாங் ஷாட்ஸ் கொண்ட படங்கள் என்று பார்த்தால், உலக சினிமாவில், தார்க்கோவ்ஸ்கி, தியோ ஆஞ்சலோபெலாஸ், லவ் தியாஸ், போன்றோரைச் சொல்லலாம்.
”வாழ்க்கையை எந்தவிதமான இடையீடோ, இடையூறோ இல்லாமல், தொடர்ந்து அதன் பல்வேறு பரிமாணங்களோடு பார்ப்பது என்பது லாங் ஷாட்ஸ்களில்தான் சாத்தியம்”, என்று தார்க்கோவ்ஸ்கி சொல்கிறார். கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிம்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தியல் சார்புகள், இது படத்தொகுப்பு செய்யப்பட்ட படங்களில்தான் கூடுதலாக இருக்கிறதென்பது தார்க்கோவ்ஸ்கியின் வாதம். இவர்கள், வாழ்க்கையினுடைய எல்லா அம்சங்களோடும், எந்தவிதமான இடையீடும் இல்லாமல், திரைப்படத்தை உருவாக்குவதற்கான வழிமுறையையாக லாங் ஷாட்ஸைக் கைக்கொள்கின்றனர்.
Theo angelopoulos
இந்த அடிப்படையோடு, தியோ ஆஞ்சலோபெலோஸின் மேலும் மூன்று பரிமாணங்களை எடுத்துக்கொள்ளலாம். ஒன்று, அவருடைய படங்கள் எல்லாமே லாங் ஷாட்கள். அற்புதமாக படம்பிடிக்கப்பட்ட ஒரு காட்சியினுடைய சகலவிதமான புற அழகுகள், புற அசைவுகள், அதேபோல, ஒரு மனிதனுடைய அக அசைவுகள், அகவுலகு போன்றவற்றையும் தழுவி, லாங் ஷாட்களை தியோ ஆஞ்சலோபெலாஸ் பாவிக்கிறார். ட்ராவலிங் ப்ளேயர்ஸ், எலக்ட்ராவினுடைய சகோதரர் இறந்துவிடுவார். அவரைப் பார்க்க எலக்ட்ரா சிறைச்சாலைக்கு வருவார். அந்தக் காட்சியைப் பார்த்தால், கடல், கடல் அருகில் இருக்கிற சிறை, சிறை மதில், அந்த சிறை மதில் மேல் நான்கைந்து காவலாளிகள் நின்றுகொண்டிருப்பார்கள். தூரத்திலிருந்து எலக்ட்ரா நடந்து வருவார். கேமரா அப்படியே படம்பிடித்து வரும். முழு சிறையையும் கேமரா காண்பிக்கும். பார்வையாளர்களுக்கு முழுமையான சித்திரம் கிடைக்கும். சிறையினுடைய, பாதுகாப்பு அரண், தனிமை, என்பதையெல்லாம் காண்பிக்கும்போது, அற்புதமான இசை, முஹாரி ராகம் போல வெளிப்படும். அந்தக் காட்சி உணர்வு என்ற அளவில் முழுமையை உருவாக்கும். இதுபோன்றுதான், தியோ ஆஞ்சலேபெலாஸ் காட்சிகளைக் கட்டமைக்கிறார்.
ஷாங் ஷாட்களின் மூலம், புறவுலகு, புறவுலகை அகலிக்கிற மாதிரியான சித்திரம், அகவுலகு, அகவுலகை அகலிக்கிற மாதிரியான சித்திரம், இது ஒரு பரிமாணம். இன்னொரு பரிமாணம், இந்த முழு படத்திலும் பார்த்தீர்களேயானால், நான்கே நான்கு இசைக்கருவிகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒன்று, அக்கார்டியோ, ஹார்மோனியம், வெண்கல மணி போன்ற ஓசையெழுப்பும் கருவி, இன்னொரு இசைக்கருவி. இந்தப் படம், நாடகக் குழுவைப் பற்றியது. ஊர்விட்டு ஊர்செல்லும் நாடகக் கலைஞர்களைப் பற்றிய கதை. இந்த மூன்றரை மணி நேரப் படத்தில், உண்மையாகவே, இசை என்று பயன்படுத்திய சீக்வென்ஸை மட்டும் எடுத்துக்கொண்டால், பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள்வரைதான் இருக்கும். மிச்ச காட்சிகளில் எல்லாமே அமைதிதான் இடம்பெற்றிருக்கும். அவருடைய சினிமாவினுடைய ஒரு முக்கியமான அம்சம் அமைதி.
மூன்றாவது பரிமாணம், அவருடைய தீம்கள் பெரும்பாலும் ஒரு கோரியோகிராஃபி போல இருக்கும். ஒரு திட்டமிட்ட, ஸ்பேஸை எடுத்துக்கொண்டு, அந்த ஸ்பேஸில் கதாபாத்திரங்கள் எங்கு நிற்க வேண்டும், எப்படி நகர வேண்டும், என்ன பேச வேண்டும், என்றெல்லாம் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நடன லயம் கொண்ட விதமாக, காட்சிகள் நடந்தேறும். அகிரா குரசோவாவினுடைய ஆக்ஷன் திரைப்படங்களில் பார்த்தால், அந்த இடவெளி, அந்த ஸ்பேஸில் கதாபாத்திரங்கள் நிற்கிற விதம், வாளை எடுப்பது, எதிரியை நோக்கி முன்னகர்வது இதெல்லாம் கோரியோகிராஃபி போல அமைந்திருக்கும். அதேபோல, அமெரிக்காவின் ஹாலிவுட் வெஸ்டர்ன் படங்களில் பார்த்தீர்களேயானால், கெளபாய்களுக்கிடையே நடக்கிற சண்டையில் இதுபோன்ற கோரியோகிராஃபியைப் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்படி, படத்தை கோரியோகிராஃபிக்கலாகச் செய்வது, வேறு வேறு இயக்குனர்களின் பண்புகளாகவும் இருக்கிறது. இசை தொடர்பாக, தியோ ஆஞ்சலோபெலோஸிற்கு இருந்த பண்பு, சத்யஜித் ரேவிடமும் இருந்திருக்கிறது. எந்தெந்த இடங்களில் இசையைப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த இடங்களில் அமைதி பிரதானமாக இடம்பெற வேண்டும், என்ற வரையறையை அவரே உருவாக்குவார். ரே, ”படத்தில் எந்த இடத்தில் இசை வரக்கூடாது”, என்று ஒரு சினிமாக் கலைஞனுக்குத் தெரிய வேண்டும் என்கிறார். இந்த புரிதல் தியோ ஆஞ்சலோபெலோஸிற்கும் இருக்கிறது.
இவருடைய படங்களில் க்ளோஸ் அப் ஷாட்கள் அநேகமாக இல்லையென்றே சொல்லலாம். அல்லது மிகக் குறைவான க்ளோஸ் அப் ஷாட்களே பயன்படுத்தியிருப்பார். அவருடைய ஷாட்களில், இயற்கை, அதன் சூழல் பிரதானமாக இடம்பிடித்திருக்கும். அதைக் காட்சிக்குள் கொண்டுவந்திருப்பார். இசையை, ஓவியத்தைப் பார்க்கும்போது, எப்படி உங்கள் மனம் மனோரதிய நிலையை அடைகிறதோ, அந்த உணர்வு தியோ ஆஞ்சலோபெலோஸின் காட்சிகளிலும் இருக்கும். உதாரணமாக, முதன் முதல் இந்த நாடகக் குழுவினர் ஒரு ஊருக்குள் வருகிறார்கள். பெரிய கட்டிடத்தின் முன் நிற்கிறார்கள். எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். டிராமா ஆரம்பமாகிறது. இதேபோல, மன விகர்சிப்பு, ஆச்சரியம் ஒரு கிராமத்திற்குள் இவர்கள் பாட்டு பாடிக்கொண்டு நடந்து வருவார்கள். கோழி பிடிக்கிற காட்சி. இப்படி மகிழ்ச்சியை உருவாக்குவதுபோல, இந்த கான்வாஸ் பெரிய துயரத்தையும் படம் பார்ப்பவர்கள் மத்தியில் உருவாக்கும். நீராவிப் படகு கடற்கரையோரத்தில் நிற்கும்போது, மூன்று பேரும் பார்க்கிற காட்சி. எலட்ரா சிறைக்குச் செல்கிற காட்சி இதற்கான உதாரணங்கள்.
உரஸ்ட்ரியா இறந்துகிடக்கிற காட்சியைக் கூட பாருங்கள். அந்த அறையை எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்று பாருங்கள். ஒரேயொரு விளக்கு வெளிச்சம்தான் அங்கு இருக்கும். மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். இதுதான், தியோ ஆஞ்சலோபெலோஸின் தனித்துவமான திரைமொழி. மற்றது, அவருடைய சட்டகங்களில், இயற்கை எந்தளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறதோ, அந்தளவிற்கு மனிதர்களும், மனிதக்கூட்டமும் அதிக முக்கியத்துவம் பெறும். எப்பொழுதுமே, கேமராச் சட்டகங்கள் மக்களால் நிரப்பப்படும். மக்கள் மீதும், மக்களின் உணர்வுகள் மீது நேசம் கொண்ட ஒரு கலைஞன்தான் இதுபோன்று கேமராச் சட்டகத்தைப் பாவிக்க முடியும். தார்க்கோவ்ஸ்கி படங்களில் கூட, தனிநபர் சார்ந்ததாகவும், அண்மைக் காட்சி கொண்டவையாகவும் இருக்கும். ஆனால், தியோ ஆஞ்சலோபெலோஸின் படத்தில் பெரும்பாலும், ஒரு தனிநபர், இன்னொரு தனிநபருடன் சேர்ந்துதான் இருப்பார். தனிநபருக்கு அதிக முக்கியத்துவம் தராமல், மனிதக் கூட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் தியோ.
தனிமனிதனுடைய விடுதலை, மக்களின் விடுதலை, அந்நாட்டினுடைய விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் சார்பில் அவரது படங்கள் நிற்கின்றன. சினிமாவை ஒரு கலையாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் புரிந்துகொண்ட எத்தனையோ சினிமாக்காரர்கள் இருக்கிற சூழலில், சினிமாவை மனித விடுதலைக்கான ஒரு உலகமாக பாவிப்பவர் தியோ ஆஞ்செலோபெலோஸ். அவருடைய எல்லா படங்களிலும் இந்தப் பண்புகள் இருக்கும். பொறுப்புணர்வு மிக்க, உறுதியான கலைஞன் அவர். இன்றைக்கிருக்கிற பல இயக்குனர்களுக்கு, தியோ ஆஞ்சலோபெலோஸ் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார். அதேபோல, தொழில்நுட்ப ரீதியாக, இந்தக் குறிப்பிட்ட ட்ராவலிங் ப்ளேயர்ஸினுடைய கதை சொல்லல் தனித்து நிற்கிறது. ட்ராவலிங் பளேயர்ஸில் இருக்கிற மிக முக்கியமான விஷயம், காலத்தை அவர் கடத்துகிறார். 1939 லிருந்து 1952 வரை நிகழ்கிற கதையை, வரலாற்றுச் சம்பவங்களோடு இணைத்து வெளிப்படுத்துவது அசாதாரணமானது.
காட்சி, எந்தக் காலத்தில் நடக்கிறது என்பதை காலம் போவதை வைத்துத்தான் பார்வையாளர்கள் முடிவு செய்ய முடியும். வரலாற்றில், இந்த ஒடுக்குமுறையாளன், அதற்கு எதிராக போராடுகிறவர்கள், மக்கள் திரள், எப்போது, பாசிசம் உச்சநிலையை அடைகிறது என்பதை இந்தப் படம் சொல்கிறது. பாசிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையில், க்ளப்பில் ஒரு விவாதம் நடக்கும். பாசிஸ்டுகள் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு, கம்யூனிஸ்டுகளைக் கொல்லவேண்டும் என்று பேசிக்கொண்டிருப்பார்கள். மறுபக்கம், அவர்கள் அழகழகான வண்ண உடைகளை அணிந்துகொண்டு, மகிழ்ச்சியாகப் பாடல்கள் பாடிக்கொண்டிருப்பார்கள், மக்கள் சுதந்திரம் அடைய வேண்டும், மகிழ்வாக வாழ வேண்டும் என்று பேசுவார்கள். இறுதியில், பாசிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், கம்யூனிஸ்டுகள் அங்கிருந்து வெளியேறுவார்கள். அதற்குப் பிறகு, பாசிஸ்டுகள் அணி நடையாக, அப்படியே நடந்து செல்வார்கள். இது 1947 லிருந்து 1949-க்குள் நடக்கிற காட்சி. பாசிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே நடந்த உரையாடலின் சாரம், இந்த வருடங்களுக்குள்தான் நடந்திருக்கிறது. அணி நடையாக அவர்கள் நடந்துசென்று, ஒரு கூட்டத்திற்குள் நுழைவார்கள், பாசிஸ்டுகள் பெரிய ஆரவமாக கோஷம் போட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். இந்தக் காட்சி நடப்பது, 1952.
1949லிருந்து பாசிஸ்ட் சென்சிபிளிட்டி 1952ல் அங்கேயிருக்கிற, ஒரு நேஷனலிஸ்ட் அரசின், அதே அரசியல் சென்சிபிளிட்டியோடு நுழைகிறது. இந்தக் காலங்கள் மாறினாலும், வருடங்கள் மாறினாலும், அந்த பாசிச அணுகுமுறை தொடர்ந்துகொண்டேயிருக்கிறது என்பதை அழகாகக் காட்சியின்மூலம் வெளிப்படுத்துகிறார். பாசிஸ்ட் கண்ணோட்டம், எப்படி முதல் உலகப்போரில் தொடர்ந்து இருந்ததோ, இரண்டாம் உலகப்போரிலும் தொடர்ந்து இருந்ததோ, 1952 வரைக்கும், தொடர்கிறது என்று காட்சிகளால் வெளிப்படுத்துகிறார்.
க்ரீஸின் மேல், இத்தாலி முதல் ஆக்கிரமிப்பைச் செய்கிறார்கள். அதற்கடுத்து, ஜெர்மன்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். ஜெர்மன் ஆக்கிரமிப்பு செய்யும்போது, அங்கிருக்கிற தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகள், பிரிட்டன், அமெரிக்கா, ப்ரான்ஸ் இவர்களெல்லாம் சேர்ந்து எதிர்கொள்கிறார்கள். ஹிட்லரை தோற்கடிக்கிறார்கள். அதற்குப் பிறகு, அமெரிக்காவும், பிரிட்டனும், ப்ரான்சும் அந்த நாட்டிற்குள் இருக்கிறது. அதற்குப் பிறகு 1944-ல் ஹிட்லரை முறியடிக்கிறார்கள். 1947லிருந்து 1949வரை என்ன நடக்கிறதென்றால், அந்த க்ரீஸிற்குள், ஒரு நேஷனலிஸ்ட் அரசாங்கம் இருக்கிறது. யுனிட்டி கவர்மெண்ட், கம்யூனிஸ்டுகளும் மற்றவர்களும் கொண்ட அரசுதான் உருவாக்கப்படுகிறது. பிரெஞ்சுக்காரர்களும், பிரிட்டிஷ்காரர்களும், அமெரிக்கக்காரர்களும் மேற்பார்வை செய்கிறார்கள். ஆனால், அந்த தேசியவாதிகள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்றால், கம்யூனிஸ்டுகளை ஒழிக்க வேண்டும், அவர்களைக் கொலை செய்யவேண்டும் என்பதில், 33 நாட்கள், பெரிய போராட்டங்கள் அங்கு நடக்கின்றன. படத்தில் எலெக்ட்ரா, இதை கேமராவைப் பார்த்துச் சொல்வார். 33 நாட்கள் நடந்த போராட்டத்தில் 200 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னும் நிறைய பேர் காயமடைந்திருக்கிறார்கள். அப்போதுதான், ’பேட்டில் ஆஃப் ஏதென்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்.
அம்சவள்ளி: தியோ ஆஞ்சலோபெலோஸ் சினிமாவை அணுகும் விதம் மற்றும் திரைமொழி குறித்தும், அவரது அரசியல் நிலை குறித்தும், இவ்விரு நிலைகளிலிருந்தும் அணுக வேண்டும்.
இந்த வகையில்தான்., லாங் ஷாட்டில், அரசியலையும், கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் பின்பற்றவேண்டாம் என்ற நிலைப்பாட்டைப் புறந்தள்ளி, அரசியல், சித்தாந்த ரீதியிலும் லாங் ஷாட்ஸ்களை தியோ ஆஞ்சலோபெலோஸ், லவ் தியாஸ் போன்றோர் சாதிக்கின்றனர். இந்த வகையில்தான், அவர் தனித்துவமிக்க கலைஞனாக அங்கீகரிக்கப்படுகிறார்.
அடுத்து, அவருடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு வருவோம். அவருடைய எல்லா படங்களிலும் பார்த்தீர்களேயானால், க்ரீக்கின் வரலாற்றில் பல்வேறு காலங்களில் நடந்த நிகழ்வுகளை எடுத்துக்கொள்கிறார். அவருடைய படங்கள், க்ரீக் மித்தாலிஜியை எடுத்துக்கொள்கிறது. அதனால், க்ரீக் மக்களுக்கு மிகப்பெரிய தொடர்பாடலை ஏற்படுத்தக்கூடிய படங்களாக அவை இருக்கின்றன. அதனுடைய நெடும் வரலாற்றிலிருந்து, ஆயிரக்கணக்கான வரலாற்றிலிருந்து கதாபாத்திரங்களை இவர் எடுத்துக்கொள்கிறார். காப்பியங்கள் பேசுகிற துயர், துரோகம், அன்பு, காதல் இதுபோன்ற விஷயங்களை வரலாற்று ரீதியில் தொடர்புபடுத்தி, அவர் பயன்படுத்துகிறார்.
இந்த ட்ராவலிங் ப்ளேயர்ஸ் படம்கூட, பல்வேறு மக்களால் பார்க்கப்பட்டு, அதிக வசூல் செய்த படம்தான். இன்றைக்கு நீங்கள் பார்த்தாலும், அதன் காட்சியழகில் அப்படியே மனம் பரிதவிக்கிறோம், அப்படியே ஈர்க்கப்படுகிறோம். அவருடைய அரசியல் என்பது, மிக நீண்ட நெடிய வரலாற்றை மக்களோடு தொடர்புபடுத்துகிறது. சமகாலத்தில் இருக்கிற மக்களின் அரசியலோடு தொடர்புபடுத்துகிறது. இந்த வகையில்தான், அவருடைய அரசியல், கிரீக்கின் வரலாற்றில் இருந்த, பல்வேறு நாடுகளினுடைய ஆக்கிரமிப்பு, அதற்கு எதிராக, லிபரல்களும், கம்யூனிஸ்டுகளும் எவ்வாறு போராடினார்கள் என்ற விஷயம், அதைப்போலவே, கிரீக்கில் இருந்து பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற மக்களின் துயரம், பின்னர் க்ரீஸிற்கு அகதிகளாக வந்து குடியேறிய பல்வேறு மக்களின் துன்பக்கதைகள், போரினால் பாதிக்கப்பட்ட கணவனை, மகனை, காதலனை இழந்த பெண்களின் துயர், இவற்றையெல்லாம்தான் அவரது படங்கள் பேசுகின்றன. ஆகவே, ஒரு வரலாற்றின், சாட்சியாகவும், அதனுடைய மனசாட்சியாகவும் இருந்து, பேசுகிற அதே நேரத்தில், கலை, கலைக்கேயுரிய அந்த இலக்கணங்கள், உச்சங்களைத் தன் காட்சிமொழியில் கொண்டுவருகிறார். இந்தவகையில், தியோ ஆஞ்சலோபெலோஸ் எவராலும் எட்டப்பட முடியாத, ஒரு நிலையில் இருக்கிறார்.
அவருடைய படங்களில், ஒரு ஃப்ரேம் கூட, தனி மனிதனுடைய க்ளோஸ் அப், தனி மனிதனை முக்கியப்படுத்திப் பார்க்க முடியாது. இது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அது, சுற்றுப்புறம் சார்ந்த, இயற்கை சார்ந்த, அவனைச் சுற்றிலும் இருக்கிற பல்வேறு புறப்பொருட்கள் சார்ந்த ஒரு மனிதனாகத்தான், அவர் மனிதனைச் சித்தரிப்பார். மூன்று, நான்கு மனிதர்கள் இல்லாமல், காட்சியே இருக்காது. காட்சியின் மையமாக ஒருவர்தான் இருப்பாரேயானாலும், அந்த ஒருவரை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், இந்த மற்றவர்களைப் பற்றி, இவர் எப்படி தன்னுடைய உணர்வில் உணர்கிறார் என்ற விஷயத்தை அவருடைய ஃப்ரேம் சொல்லும். இது தியோ ஆஞ்சலோபெலோஸின் திரைமொழியில் இன்னொரு முக்கியமான அம்சம்.
அதேபோல, இவருடைய படங்களில், எல்லா காட்சியமைப்புகளும், கோரியோகிராஃபி போல இருக்கும். நடன லயம் கொண்ட விஷயங்கள் இருக்கும். அகிரா குரசோவாவின் சாமுராய் படங்களில் அமைந்த கோரியோகிராஃபி போலயிருக்கும். சார்லி சாப்ளினின் நடிப்புகூட ஒரு வகையில் கோரியோஃகிராபிதான். எல்லாமே நடன லயமாகவேதான் இருக்கும். ஆனால், அதில் சாப்ளின் எனும் தனிமனிதனுடைய நடன லயம் என்றளவில் இருக்கும். ஆஞ்சலோபெலோஸின் படங்களில், இது மக்கள் கூட்டத்தினுடைய நடன லயம். தனிமனிதருக்கும் - இன்னொரு தனிமனிதருக்கும், தனி மனிதருக்கும் - மக்கள் கூட்டத்திற்கும், தனி மனிதருக்கும் இயற்கைக்கும் இடையேயான சூழலைத்தான், அவரது சட்டகங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆகவே, மக்களைப் பற்றி, மக்களினுடைய உறவுகளைப் பற்றி, அவர்கள் வரலாற்றில் எவ்வாறு வைக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் வரலாற்றை எவ்வாறு நீந்திக் கடந்தார்கள், வரலாற்றுச் சூழலை எப்படி எதிர்கொண்டார்கள், போன்ற விஷயங்களை தியோ ஆஞ்சலோபெலோஸ் கதைக்களனாக்குகிறார். ஒரே சொல்லில் சொன்னால், சினிமா என்ற கலையினுடைய, உச்சபட்சமான சாத்தியங்களை உள்வாங்கிக்கொண்டு, மனித குலத்தினுடைய பிரச்சினைகள் சார்ந்து, தெளிவான தத்துவ தரிசனத்தோடு அவருடைய எல்லா படங்களும் கொண்டிருக்கின்றன. அவருடைய முதல் படத்திலிருந்து, கடைசிப் படம் வரைக்கும், இந்த தத்துவ தரிசனத்தைக் காணலாம். இந்த, விஷயம், உண்மையிலேயே உலக சினிமாவில் எவராலும் சாதிக்கப்படமுடியாதது என்று சொல்வேன். செவ்வியல் தன்மை, எதிர்காலம் தொடர்பான பார்வை, சமகால மதிப்பீடுகள் இந்த மூன்றையும் கொண்ட ஒரு மகத்தான கலைஞன் என்றால் என்னுடைய அனுபவத்தில் தியோ ஆஞ்சலோபெலோஸ்தான். இந்த நூற்றியிருபது ஆண்டு சினிமா வரலாற்றில், ஒரேயொருவரைச் சொல்லுங்கள் என்று, இப்போதைக்கிருக்கிற திரைப்பட இயக்குனர்களையே கேட்கிறபோது, அவர்கள் என்ன சொல்வார்களென்றால், சார்லி சாப்ளின் என்று சொல்வார்கள். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு இயக்குனர் என்ற அளவில், இந்த நூறாண்டு சினிமாவில், ஒரேயொரு உன்னதமான திரைக்கலைஞர் என்று யாரைக் கருதுவீர்கள் என்று கேட்டால், என்னுடைய பார்வையனுபவத்திலிருந்து நான் தியோ ஆஞ்சலோபெலோஸைத்தான் குறிப்பிடுவேன்.
1939லிருந்த பாசிஸ்டுகள், 1944ஆம் ஆண்டும் இருந்தார்கள். 1944ஆம் ஆண்டு இருந்த பாசிஸ்டுகள் 1952ஆம் ஆண்டும் இருந்தார்கள். காலத்தைத் தாண்டி, அந்த அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களும், அதை ஆதரித்த ஒரு கூட்டமும் இருக்கிறது. இந்தப் படம், 1975ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் எடுக்கிற காலகட்டத்திலும் ராணுவ சர்வாதிகார ஆட்சிதான் நாட்டில் இருந்தது.
அம்சவள்ளி: இந்தப் படம் கூட, கடும் நெருக்கடிக்கு மத்தியில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. இதை தியோ ஆஞ்சலோபெலோஸும் குறிப்பிடுகிறார்.
ராணுவ அதிகாரத்திடம், ஆஞ்சலோபெலோஸ், ”இந்த மித்தாலஜியைத்தான் நான் படமாக எடுக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு, தன் படவேலைகளை ஆரம்பிக்கிறார். படம் முடிந்து வெளியாகும்போது, ராணுவ ஆட்சி இல்லாமல் ஆனதால், படம் வெளியில் வருகிறது. இப்படித்தான், அந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இந்த சென்சிபிளிட்டியோடுதான், தியோ அந்த வரலாறு, மித்தாலஜி மற்ற விஷயங்களோடு இணைத்து, ராணுவ ஆட்சிக்கு சவாலாகவும் இருந்து, இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார். ஏன், அவருடைய காலத்தாவுதல் என்பது அவருடைய படங்களில் நடக்கிறது. ஏன், அது தெளிவாக, வெளிப்படையாகத் திரையில் குறிப்பிடப்படாமல் இருக்கிறது என்றால், பாசிஸ்டுகள், இரண்டாம் உலகப்போருக்கு முன்பாகவும் இருந்தார்கள். இரண்டாம் உலகப்போர் காலத்திலும் இருந்தார்கள். இந்தப்படம் எடுத்துக்கொள்கிற 1952ஆம் ஆண்டும் இருந்தார்கள். 1975ஆம் ஆண்டில், இந்தப் படம் உருவாக்கப்படும்போதும் இருந்தார்கள். ஆகவே, இந்த மக்கள், காலத்தைக் கடந்து, ஆண்டுகளைக் கடந்து, இந்த நில வெளிகளைக் கடந்து, தத்துவார்த்த போராட்டத்திற்குள், இந்த நடைமுறை அரசியல் போராட்டத்திற்குள், நகர்ந்து கொண்டும், ஊர்வலம் போய்க்கொண்டும், மோதிக்கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும், வெற்றிவாகை சூடிக்கொண்டும், கொடிகளை அசைத்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறது.
ஒரு காட்சி, சொல்கிறேன். 1947 - 1949 கம்யூனிஸ்டுகளுக்கும் அங்கிருக்கிற தேசியவாதிகளுக்கும் இடையே சண்டை நடக்கிறது. தேசியவாதிகள் ஒரே நேரத்தில் அமெரிக்காவை வியந்தோதி பாடல்கள் பாடுகிறார்கள். அதேபோல, நாஜிக்களையும் வியந்தோதி பாடல்கள் பாடுகின்றனர்.கூடவே, தேசபக்தி பாடல்களையும் பாடுகிறார்கள். ஆனால், கம்யூனிஸ்டுகளையும், ரஷ்யர்களையும் கொல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்குப் பிறகு, ஊர்வலம் செல்கின்றனர். 1947-49 நாஜிக்கள் ஊர்வலம் நடக்கிறது. பயங்கர வன்முறையான பாடலைப் பாடிச்செல்கின்றனர். அப்படியே நடந்துசென்று, இன்னொரு கூட்டமான பிரச்சாரக் கூட்டத்திற்குள் நுழைகிறார்கள். இது 1952ஆம் ஆண்டு. 1949லிருந்து இந்தக் காட்சி, இந்த நிலப்பரப்பு, ஒரே நிலப்பரப்பு, 1952ற்குள் செல்கிறது. இப்படியான காட்சிகள் படத்தில் நிறைய இருக்கின்றன. காலங்கள் மாறினாலும், நிலப்பரப்பையும், அந்த மனிதர்களின் உணர்வுகளையும் இணைக்கக்கூடியதாக, நாசிசம், பாசிசம், அது எப்படி இடதுசாரிகளுக்கு, மார்க்சிஸ்டுகளுக்கு எதிராக இருக்கிறது என்ற வரலாற்று உண்மை, ஏறக்குறைய 1939-1952-ஆம் ஆண்டு வரைக்குமான, பதினைந்து ஆண்டு கால உணர்வுதான், உங்களுக்கு காலத்தாவலாக நீள்கிறது. உண்மையிலேயே, திரைப்பட நுட்பம் என்றளவில், சினிமாவிற்கு காலத்தாவுதல் என்பது அற்புதமான நுட்பம். ஆனால், இதை அரசியல் ரீதியாகப் பார்த்தோமானால், ஒரு ஐம்பது வருட அரசியல் தன்னுணர்வில், பாசிசம் நிரந்தரமாக இருக்கிறது என்ற விஷயத்தை, 1975 வரைக்கும் நீட்டிக்கிறார். 1939 லிருந்து 1952 வரையிலான சூழலை படம் பதிவுசெய்திருந்தாலும்கூட, 1975ஆம் ஆண்டு என்று சொல்வதன்மூலம், ஏறக்குறைய முப்பத்தாறு ஆண்டுகாலமாக பாசிச நிலை இருக்கிறது என்பதை பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்துகிறார். இதுதான் தியோ ஆஞ்சலோபெலோஸின் மேதைமை.
யமுனா ராஜேந்திரன்: கிரேக்க வரலாறை எடுத்துக்கொண்டால், அங்கிருக்கிற வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையேயான போராட்டம் நடந்துகொண்டேயிருக்கும். உண்மையிலேயே மாற்றங்கள் ஒரு நாளில் நடந்துமுடிகிற மாற்றங்கள் இல்லை. இராணுவ சர்வாதிகாரம் அங்கு வெளிப்படையாகயில்லாவிட்டாலும், அந்த அமைப்பில், அதே பழைய சிந்தனையைத் தாங்கியவர்கள் பதவியில்தான் இருப்பார்கள். ”இந்தியாவின் வறுமையை ஏலம்போட்டு வெளிநாடுகளுக்கு விற்கிறார். இது தேசவிரோதம், எனவே சத்யஜித் ராயின் படங்களை, வெளிநாடுகளுக்கு, சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பக் கூடாது” என்று எதிர்ப்புகள் வந்தன. தாராளவாதியாக அறியப்பெற்ற நர்கீஸ் தத் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். தேசபக்தி என்ற பெயரில், தங்கள் நாட்டினுடைய துயர்மிகு கடந்தகாலம், ஏழ்மையை வெளிப்படுத்த விரும்பாத நிர்வாகம் அன்றைக்கும் இருந்தது, இன்றைக்கும்கூட இருக்கிறது. அதனால்தான், அங்கு, எங்கள்மீது ஐரோப்பிய யூனியன் மிகப்பெரிய பொருளாதார சுமையைச் சுமத்துகிறது. இதிலிருந்து விடுபடவேண்டுமென்று, பெரும்பாலான மக்கள் இடதுசாரிகளுக்கு வாக்களித்தால்கூட, ஐரோப்பியன் இந்நிலைப்பாட்டை ஒப்புக்கொள்ளவில்லை. அந்நாட்டினுடைய இறையாண்மைக்கு மாறாக, ஐரோப்பிய யூனியனின் பொருளாதார விஷயங்களை அம்மக்கள் மீது இன்றுவரை சுமத்திக்கொண்டிருக்கிறார்கள். எனவே, கிரேக்க நாட்டின் வரலாறு என்பது, அங்கிருக்கிற வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையிலான போராட்டமாக, தொடர்ந்து ஐம்பது, அறுபது ஆண்டுகளாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, தியோ ஆஞ்செலோபெலோஸின் படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு, அந்நாட்டின் அரசு அனுப்ப விரும்பாததற்கான காரணத்தை இதிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம். போலவே, ஈரானில் எடுக்கிற பல படங்களை, சீனாவில் எடுக்கிற சில இயக்குனர்களது படங்களை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பமுடிவதில்லை. ஏனெனில், தங்கள் நாட்டைப் பற்றி மகோன்னதமான சித்திரத்தை, வெளிநாட்டவர்களுக்குத் தரவேண்டும். அப்படியான படங்களைத்தான் எடுக்க வேண்டுமென நிர்வாகம் மறைமுகமாக நிர்ப்பந்திக்கிறது. ஆனால், அப்படியெல்லாம் ஒரு கலைஞன் செயல்படமுடியாது. ஒரு கலைஞன், அரசியல் கட்சிகளுக்கும், அரசுக்கும் நேர்மையாகயிருக்க முடியாது. அவன் உண்மைக்கும், மக்களுக்கும்தான் நேர்மையாகயிருக்க வேண்டும். அதனடிப்படையில்தான் ஒரு கலைஞனாக தியோ ஆஞ்சலோபெலோஸ் தன் திரைப்படங்களை உருவாக்குகிறார்.
யமுனா ராஜேந்திரன்: தொடர்ந்து சித்திரவதைகளுக்கு ஆளாகுதல், சிறை, வன்முறைக்கு ஆளாகுதல் போன்ற விஷயங்கள், ஒரு மனிதரை மிகவும் விரக்திநிலையை அடைய வைக்கும். இந்தத் துயரமான நிலையை மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து அனுபவித்து வந்திருக்கிறார்கள். ஒன்று 1917 உருவாக்கிய லட்சியம். அந்த லட்சியம் நடைமுறையில் சாத்தியமா? என்ற கேள்வியை, ஐரோப்பிய மார்க்சியர்கள் எல்லோருமே தொடர்ந்து கேட்டுவருகின்றனர். சோவியத் யூனியன் வீழ்ந்தபோது, தியோ ஆஞ்சலோபெலோஸ் இதே விஷயத்தைத்தான் சொல்கிறார். ”ஒரு கனவு, அந்தக் கனவைக் கண்டோம், அந்தக் கனவு நிறைவேறவில்லை. பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இருந்தாலும், அந்தக் கனவில் என்னுடைய கடப்பாட்டை விடமுடியவில்லை” என்று சொல்கிறார். 1917 அக்டோபர் புரட்சி தொடர்பான விமர்சனம், ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு மத்தியில், தொடர்ந்து இருந்துவருகிறது.
நீங்கள் அந்தோனியோ கிராம்சி, ரோஸா லக்ஸம்பெர்க், ட்ராட்ஸ்கி போன்றவர்களைப் பார்த்தீர்களேயானால், சோவியத் யூனியன் என்பது, பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரம் அல்லது உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரம் அல்லாமல், ஒரு அதிகாரவர்க்க சர்வாதிகாரமும், ஒரு ஸ்டேட் கேபிட்டலிசமாக ஆனது, என்பது சம்பந்தமாக ஒரு விமர்சனம் இருக்கும். மற்றது ஊடகம் தொடர்பான விடுதலை. மாற்றுக்கருத்து பேசுகிறவர்களுக்கான சுதந்திரம் எல்லாம் இந்த நாடுகளில் இல்லை என்பதுபோன்ற கருத்துக்களையே, பெரும்பாலான சிந்தனையாளர்களும், கலைஞர்களும் சொல்கிறார்கள். ஆக, இந்த மரபில் வந்தவர்தான் தியோ ஆஞ்சலோபெலோஸ்.
கடுமையான ஒடுக்குமுறைகளை, கம்யூனிஸ்டுகள் உள்நாட்டில் எதிர்கொள்கிறார்கள். ரோஸா லக்ஸம்பெர்க் சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்படுகிறார். அந்தோனியோ கிராம்சி சிறையிலடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மரணமுறுகிறார். மிகப்பெரிய விலை கொடுத்து, வாழ்க்கையை அர்ப்பணித்து, போராடப்போகிறார்கள். உடலுக்குச் சித்திரவதை, மனதிற்கு சித்திரவதை என்று ஒருபுறம் இது. இன்னொரு புறம், நாங்கள் நினைத்த அந்த லட்சியம் சரியாகயிருக்கிறதா? என்பது தொடர்பான, அந்த விமர்சன உணர்வு. இந்த இரண்டும் சேர்ந்து, இதுபோல ஒருவிதமான, லட்சியத்தையும் கைவிடமுடியாமல், கனவுகளையும் விட்டுக்கொடுக்கமுடியாமல், அதேநேரத்தில் தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்களும் சார்ந்து, ஒருவிதமான விரக்தி மனநிலையில் இருப்பதும் சிலநேரம் வாய்க்கிறது. இந்நிலை தியோ ஆஞ்சலோபெலோஸின் படங்களில் திரும்பத் திரும்ப இடம்பெறும்.
1917ஐ ஒரு கனவாகவும், அதேநேரத்தில் அது நிறைவேறியதா என்பது தொடர்பான விமர்சன உணர்வோடும், சமகாலத்தில் தாங்கள் எதிர்கொண்ட சித்திரவதைகளை வைத்து, மார்க்சிய, கம்யூனிச அனுபவத்தைப் பேசுவதென்பது, தியோ ஆஞ்சலோபெலோஸின் படங்களின் ஒரு அம்சம். யுலிசியஸில் (ulysses gaze), முழுப்படத்திலும் அவர் இதைத்தான் விவாதித்திருக்கிறார். அதில் மிகமுக்கியமான ஒரு பிம்பம், பெயர்த்தெடுக்கப்பட்ட லெனினின் சிலை, பிரம்மாண்ட படகில் கொண்டுவரப்படும். அந்தக் காட்சியை, ஆஞ்சலோபெலோஸ் மிகவும் விஸ்தாரமாகக் காண்பித்துக்கொண்டு செல்வார். அந்தப் படமே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்நாடுகள் எவ்வாறாகயிருந்தன என்பதை ஒரு திரைப்படக் கலைஞனின் பார்வையில் சொல்லக்கூடியதாகயிருந்தது. படத்தில் மட்டுமல்ல, இது தொடர்பான கட்டுரையையும் அவர் எழுதியிருக்கிறார். ”இந்தப் பின்னடைவு, வீழ்ச்சியென்பது மக்களுக்கு துயரளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், அதுவொரு அடையத்தக்க கனவு, லட்சியம். அந்த லட்சியத்தின் மீதான, கடப்பாடு இன்னும் அப்படியேதான் இருக்கிறது” என்கிறார்.
இந்தப் படத்திலும், கதாபாத்திரங்கள் பல்வேறு துயர்களுக்கு ஆளாகிறார்கள். எலெக்ட்ராவின் தங்கை, நாஜிக்களுடன், அமெரிக்கர்களுடன், பாசிஸ்டுகளுடன் செல்கிறார். ஆனால் அவரது மகன், புரட்சியாளனாக மாறுகிறான். பல்வேறு ஆட்கள் கொல்லப்படுகிறார்கள். அத்தனைக்குப் பிறகும், எலெக்ட்ரா மீண்டு எழுகிறார். நாடோடிக் கலைஞர்களாக, அந்தக் கலையை தங்களுடன் வைத்திருக்கவேண்டும் என்பதற்கான மறு வளர்ச்சி. அதேபோல, இந்த அனுபவங்களினூடாக, பெற்ற புரட்சிகர சிந்தனையின் மறு வளர்ச்சி. ஒரே நேரத்தில் இது கலைஞர்களின் வளர்ச்சியாகவும், அரசியல் வளர்ச்சியாகவும் அமைகிறது.
அம்சவள்ளி: இந்தப் படத்திற்குள் வருகிற கதாபாத்திரங்களைக் குறிப்பாக, அகதிகளாகத்தான் அர்த்தப்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல், அவர்கள் இந்த ஒரே நாடகத்தை, பல்வேறு இடங்களில் அரங்கேற்றுகின்றனர். எலெக்ட்ராவின் அண்ணனைப் புதைக்கும்போது, பெரிய கைதட்டல்களோடு புதைக்கின்றனர். மீண்டும், டாஸூஸாக, தங்கையின் பையனே நடிக்க வருகிறான். படத்தின் ஆரம்பக் காட்சியும், இறுதிக்காட்சியும் ஒரேமாதிரி இருக்கிறது. முழுச்சுற்று முடித்து, அவர்கள் வாழ்க்கை மீண்டும் ஆரம்பத்திலிருந்தே துவங்குகிறது என்பதைத்தான் இந்தக் காட்சிகள் உணர்த்துகின்றனவா?
யமுனா ராஜேந்திரன்: 1944இல் தேசியவாதிகளுக்கும் இவர்களுக்கும் இடையில் நடக்கிற சண்டை பற்றியதுதான் அந்தக் காட்சி. இந்தக் காட்சியில் மட்டுமல்ல, பெரும்பாலான காட்சிகளில், மக்கள் கூட்டம் இருக்கும். இன்னொரு காட்சியில், சதுக்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சிக்கொடிகளை, இன்ன பிற கொடிகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தாக்குதல் நடக்கும். இந்த கூட்டம், அதன் எக்காளம் அங்கும் இருக்கும். அதேபோல, இன்னொரு காட்சியில், இடதுபக்கமிருந்து இடதுசாரிகள் வருவார்கள், வலதுபுறமிருந்து வலதுசாரிகள் வருவார்கள். ஆரம்பத்தில் வெறுமனே சத்தம்போடுவார்கள், கோஷம் போடுவார்கள். துப்பாக்கியை மட்டும் வைத்துக்கொண்டிருப்பார்கள். அதற்குப்பிறகு, வலதுசாரிகளுக்குப் பின்னால் இராணுவ வாகனங்கள் வரும். இது உணர்த்துகிற விஷயம் என்னவென்றால், வலதுசாரிகளுக்குப் பின்னால், அவர்களுக்குப் பக்கபலமாக அரசும் இராணுவமும் இருக்கிறது. அவற்றிற்கு எதிராக வெகுமக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே, அது வெகுமக்களினுடைய போராட்டம், வெகுமக்களினுடைய ஒன்றிணைந்த எழுச்சி, வெகுமக்களின் ஒன்றிணைந்த சந்தோஷம் என்ற விஷயத்தை, பல்வேறு காட்சிகள் உணர்த்துகின்றன. நீங்கள் சொல்கிற காட்சி, 1944இல் நடக்கிறது. குதிரையில் வருகிறார்கள், நாஜி கொடியை கடலில் வீசுகிறார்கள். இதுவும் ஒரே ஷாட். ஒரு கோரியோஃகிராபி போல எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சதுக்கத்தில் இரு தரப்பினர் கோஷமிடுவதும், சண்டை போடுவதும், தாக்குதல் தொடுப்பதும் ஒரே ஷாட்டில்தான் உள்ளது. தாக்குதல் முடிந்து எல்லோரும் களைந்துசென்றபிறகு, அதுவரை இறந்ததுபோலக் கிடந்த ஒருவர் எழுந்துசெல்வார். மிக அற்புதமான காட்சி.
மக்கள் கூட்டம் மீண்டும் மீண்டும் இப்படத்தில் இடம்பெறுவதற்கான காரணம், அந்தக் கூட்டுணர்வு, தோழமை, அது மக்களோடு இணையும்போது, எப்படி கொண்டாட்டமாக வெளிப்படுகிறது? இதை மிகையீல் பெக்கின் வார்த்தைகளில் சொன்னால், இதுவொரு ’ஒடுக்கப்பட்ட மக்களின் திருவிழா’. மாவோவின் பாஷையில் சொல்லவேண்டுமானால், ‘புரட்சி என்பது வெகுமக்களின் திருவிழாதான்’. இந்த திருவிழா கொண்டாட்டத்தை, தி ட்ராவலிங் ப்ளேயர்ஸ் கொண்டிருக்கிறது.
சிறு சிறு மக்கள் கூட்டங்களாக இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் மலையின் பிற்பகுதியிலிருந்து ஓடிவருகிறார்கள், பின்பு குதிரைகள் வருகிறது. மக்கள் கூட்டம் ஒன்றிணைகிறது. பின்பு, அந்த நாஜிக்கொடியை மலையுச்சிக்கு கொண்டுசென்று, அங்கிருந்து கடலில் வீசுகிறார்கள். இக்காட்சி, மக்கள் கிளர்ச்சியை அழகாக வெளிப்படுத்துகிறது. மக்கள், மக்கள் கூட்டம், மக்களின் புரட்சிக் களியாட்டம் தொடர்பான ஓர்மையுணர்வாகத்தான் இந்தக் காட்சியைப் பார்க்கிறேன்.
அடுத்து, நீங்கள் குறிப்பிட்ட காட்சி. அவர் இராணுவத்தில் சேர்ந்துவிட்டேன் என்கிறபோது, அவர் மனைவி கேலியாகச் சிரிக்கிற காட்சி. உரையாடல் இல்லாமல், உடல்மொழி வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஆஞ்செலோபெலோஸின் பல படங்களில், உரையாடல்களைத் தவிர்த்து, ஓரு காட்சியின் மைய உணர்வை, கதாபாத்திரங்களின் சிறு உடல்மொழி வாயிலாகவே வெளிப்படுத்தியிருப்பதைப் பார்க்கமுடியும். உதாரணமாக, எலெக்ட்ராவின் அம்மா, திருமணம் தாண்டிய உறவில், இன்னொருவருடன் நெருக்கமாக இருப்பதை, எலெக்ட்ரா பார்த்துவிடுகிறார். அதன்பிறகு, கீழே வந்து, வருத்தப்படுகிறார். அழுகிறார். ஆனால், உரையாடல்களோ, சப்தமோ இல்லாமல்தான் இந்தக் காட்சி நகர்கிறது. பின்பு, எலெக்ட்ராவின் அம்மா, அறையிலிருந்து வெளியே வந்து, யாரும் பார்த்துவிடாமல், எச்சரிக்கையாக தனது அறைக்குச் செல்கிறார். இதுவும் நீண்ட கால அளவு கொண்ட ஷாட்டாகவே எடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்று அமைதியான முறையில், உரையாடல்களைத் தவிர்த்து, ஒரு உணர்வைக் கடத்துகிற காட்சிகள், ஆஞ்செலோபெலோஸின் படங்களில் அதிகமாகயிருக்கும். உணர்வு மூலமாகவே, விருப்பு வெறுப்பு மற்ற எல்லாவிஷயங்களையும், காட்சிகளின் வழி உணர்த்துகிறார்.
இந்தக் குழு, பனிபடர்ந்த நிலப்பிரதேசத்தில், பாடல் பாடியபடி மகிழ்ச்சியாக நடந்துவருகிறார்கள். ஒரு இடத்தில் அமைதியாக அப்படியே நின்று, சுற்றுமுற்றும் பார்க்கின்றனர். கேமரா நகர்கிறது. ஒரு மரம். அதில் பிணங்கள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கேமரா காண்பிக்கிறது. தூக்கில் தொங்குகிறவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது. அவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களா? போராளிகளா? என்ற விவரங்கள் இல்லை. இதுவும் முழுக்க உரையாடலின்றி, நிசப்தமாகப் படமாக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற, அமைதியான காட்சிகள், தியோ ஆஞ்சலோபெலோஸின் பெரும்பாலான படங்களில் இருக்கும்.
பரந்த நிலப்பரப்பு, அது ஆற்றங்கரையோரமானாலும் சரி, மணல்பரப்பானாலும் சரி, அதில் ஒரு மனிதர் சிறு உருவமாக நடந்துவருவதுபோல, பல்வேறு ஜீவராசிகள் நகர்வதுபோல, ரம்மியமான காட்சியனுபவத்தைத் தருவதுபோல இருக்கும். கணவர்களை இழந்த பெண்கள், ஒவ்வொருவராக வருவார்கள், அவர்கள் ஒன்றுகூடுவதற்கேற்ப, கேமரா பின்னால் சென்றுகொண்டேயிருக்கும். முழுக்க கருப்பு ஆடையணிந்த பெண்கள், தலையை மூடியபடி, அங்கு கூடுவார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, காகங்கள் ஒன்றிணைந்து அரற்றி அழுமல்லவா, அதுபோன்ற உணர்வு எனக்குத்தோன்றியது.
எலெக்ட்ராவின் சகோதரன் இறந்தபிறகு, அந்தப் பிணத்தைப் பார்ப்பதற்கு, அவர்கள் வருவது, அதைச் சிறையமைப்பிலிருந்து காண்பிப்பது, என அந்தக் காட்சியைக் கூட, எப்படிப் படம்பிடித்திருக்கிறார் என்று பாருங்கள். ஒரு பரந்த காட்சியில், ஜீசஸ் படுத்திருப்பதுபோலவும், அவர் அம்மா, அங்குவந்து அவரைப் பார்ப்பதுபோன்ற பிம்பம்தான், அந்தக் காட்சியில் உருவாகிறது. இது அவரது பாணி.
அம்சவள்ளி: இதேபோன்ற ஒரு மினிமலிஸ்டிக் ஷாட் என்னவென்றால், கெரில்லாக்கள் எல்லோரையும் பிடித்துவிட்டார்கள் என்று சொல்லும்போது, இராணுவத்தினர், இரண்டு கெரில்லாக்களின் தலையை வெட்டி, ஊர்வலமாக எடுத்துவரும்போது, எலெக்ட்ரா மற்றும் மற்ற கெரில்லாக்களின் உறவினர்கள், நண்பர்கள் பார்த்துப் பதற்றமடைகிற காட்சி. மிகப்பெரிய அழுத்தத்தைத் தரக்கூடிய இந்தக் காட்சியில், உரையாடல்களும் இல்லை, இசை கூட அந்தளவிற்குப் பிரதானமாகப் பயன்படுத்தப்படவில்லை.
இரண்டாவது மோனலாக், எலக்ட்ராவினுடையது. எலெக்ட்ராவை, நாஜிப்படையினர் கடத்திச்சென்று, பாலியல் வல்லுறவு செய்து வெளியில் அனுப்புகின்றனர். அந்தச் சூழலைத்தான் எலெக்ட்ரா விவரிக்கிறார். மோனலாக்கில் இருக்கிற விஷயம் என்னவென்றால், எலெக்ட்ராவின் தந்தை, பாசிச காலகட்டத்திற்கு முன்னாடியான வரலாற்றுச் சம்பவங்களைச் சுருக்கமாகச் சொல்கிறார். எலெக்ட்ரா, பாசிச காலம், பாசிச காலத்திற்குப் பிந்தைய வரலாற்றுச் சம்பவங்களை மோனலாக்கில் சொல்கிறார். அகதிப் பிரச்சினை, அப்போதிருந்த ஒடுக்குமுறை எப்படி முதல் மோனலாக்கில் வருகிறதோ, அதேபோல எலெக்ட்ரா சொல்கிற மோனலாக்கில், அதே பாசிச காலகட்டங்கள், தேசியவாதிகளோடு சேர்ந்து எப்படி இடதுசாரிகளுக்கு எதிராக வேட்டையாடுதல்களை நடத்துகிறார்கள், என்ற விஷயத்தை இந்த மோனலாக்கில் கொண்டுவருகிறார்கள். மற்றும் இன்னொரு விஷயம், கதை மிகவும் தர்க்க ரீதியில், உணர்வுப்பூர்வமாக, யதார்த்தத் தன்மையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்தக் கதையின் போக்கில் இடையிடையே இடம்பெறுகிற மோனலாக்குகள் பார்வையாளர்களிடையே எந்தவிதமான உணர்வுகளை உருவாக்குகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
மோனலாக் என்ன சொல்கிறதென்றால், நாங்கள் வரலாற்று அடிப்படையில் கதை சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதில் நாங்கள் நடித்துக்கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் நாங்கள் நிஜத்தில் சாதாரண மனிதர்கள். அதனால், நிஜ மனிதர்களாக, நாங்கள் உங்களுடன், உணர்வு மற்றும் கதை எல்லாவற்றையும் கடந்து, வரலாற்றுச் சாராம்சத்தை நேரடியாகச் சொல்கிறோம். இதில் என்னவிஷயம் என்றால், சில படங்களைப் பார்த்தீர்களேயானால், காட்சிகள் அப்படியே நம்மை அழவைக்கும். இன்னும் சில படங்களைப் பார்க்கையில், அதில் வருகிற வன்முறைக் காட்சிகள், நமக்கு மயிர்க்கூச்செறிய வைக்கும். த்ரில்லர் காட்சியில், அதீத ஆர்வத்தோடு அமர்ந்திருப்போம். அப்போதெல்லாம் நமக்கு அறிவுணர்வு வேலை செய்யாது. காட்சி எங்கு நிகழ்கிறது? ஏன் நிகழ்கிறது? என்ன காரணம்? இப்படியான, சமகால நடப்பு உலகிலிருக்கிற கேள்விகளுக்குள் அப்போது நமது மூளை செல்லாது. அதனால்தான், கதைக்கு இடையில் வருகிற மோனலாக், பார்வையாளர்களை இடைநிறுத்தி, இதுவரை நீங்கள் பார்த்தது வரலாற்று அடிப்படையிலான கதை, இதை நாங்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடித்துக்கொண்டிருந்தோம் என்று சொல்லி, உண்மையில் வரலாற்றில் என்ன நடந்தது? என்பதை அதே பார்வையாளர்களுக்கு விவரிக்கிறார்கள்.
அந்தப் பெண்ணை, வன்புணர்வு செய்து வெளியேற்றியிருப்பார்கள். எழுந்து அமர்வார். அவருக்கு ஒரு க்ளோஸ் அப் ஷாட் வைக்கப்படும். அப்போது, அவர் தன் முகத்திற்குப் பூசியிருக்கிற ஒப்பனைகளைக் களைவார். உதட்டுச் சாயங்களைத் துடைப்பார். பார்வையாளர்களைப் பார்த்து, “இதுவரைக்கும் நடந்தது ஒப்பனை, எல்லாம் நடிப்பு, இப்போதுதான் நான் உண்மையிலேயே பேசுகிறேன்” என்ற விஷயத்தை, நேரடியாக, பார்வையாளர்களைப் பார்த்துச் சொல்கிறார். நாம் திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, உண்மைக்கும், புனைவிற்கும் இடையேயான வித்தியாசம் அறுபடுகிறது. இதை உடைத்து, அந்த சினிமா என்ற புனைவிலிருந்து அந்நியப்படுத்தி, யதார்த்த உலகத்திற்குப் பார்வையாளர்களைக் கொண்டுவந்து, அவர்களை யோசிக்கவைப்பதுதான் இந்த மோனலாக் பயன்படுத்தப்படுவதன் நோக்கம். நாடகாசிரியர் ப்ரெக்ட் இதை அந்நியப்படுத்துதல் என்பார். ஒரு பிம்பம் உங்களை அந்நியப்படுத்தும். ஆகவே, ஒரு இலக்கியம், கலை, கதை, கவிதை எல்லாமே ’அந்நியப்படுதலில்’ இருந்து வெளிப்படுகிற விஷயம்.
என் வாழ்வில், நான் என் தந்தையை இழந்தபிறகு, அவரது வேட்டி போன்ற உடைகளை எடுத்துவந்து இங்கு வைத்திருக்கிறேன். அதுபோல, அம்மா, அப்பாவின் சருமத்திற்கு ஒரு மனம் இருக்கிறதல்லவா, அந்த மனத்தை உடைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஏகாதிபத்தியச் சக்திகளுக்கு எதிராக நடந்த போராட்டம். அதேபோல, தங்களோடு ஒன்றுபட்டு, பாசிசத்தை முறியடித்த, அந்த தேசியவாதிகளுக்கு, தேசியவாத பாசிஸ்டுகளுக்கு எதிராக நடந்த போராட்டம். விவாசயம் தொடர்பான போராட்டத்திற்கு க்ரெட்டா துன்பர்க் ஆதரவளித்திருக்கிறார். பாடகி ரெஹெனாவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு, சர்வதேசிய அளவில், பல்வேறு கலைஞர்கள், போராடுகிற விவசாயிகளுக்கு உலகம்பூராவிலுமிருந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். என்னுடைய நினைவில், இந்தியாவில் நடந்த மிகப்பெரிய வெகுமக்கள் எழுச்சிப் போராட்டங்களில் ஒன்று, தமிழகத்தில் நடந்த தை எழுச்சி. முழு தமிழக மக்களும் தெருவுக்கு இறங்கிவந்து, அந்தந்த நகரங்களில், தன்னெழுச்சியாகக் கலந்துகொண்ட ஒரு போராட்டம். பத்து நாட்களுக்கும் மேலாக அந்தப் போராட்டம் நடந்தது. ஒடுக்குமுறையின் மூலம், அந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதைப்போலவே, இந்த விவசாயிகளின் போராட்டம், சரியான அரசியல் தலைமைகொண்ட, சரியான இலக்கு கொண்ட தன்னெழுச்சியான போராட்டம். இந்தப் போராட்டத்தின் எதிரியைப் போலத்தான் அரசாங்கம் நடந்துகொள்கிறது. அவர்கள் மீது பல்வேறு விதங்களில் ஒடுக்குமுறைகளை ஏவிவிடுகிறது. எழுபது, எண்பது வயது முதியவர்களெல்லாம் கைதுசெய்யப்படுகிறார்கள். ஆகவேதான், உலகத்திலிருக்கிற கலைஞர்களின் மனசாட்சியை, இச்சம்பவம் உலுக்குவதாக அமைகிறது. இவ்வளவு நாள் நடந்த போராட்டத்திற்கு எப்படி எதிர்வினை வருகிறதோ, அதேபோல, கிரீஸின் வரலாற்றில், நாட்டினுடைய இறையாண்மைக்காக, தங்களுடைய உரிமைக்காக, தொழிலாளிகளுடைய, விவசாயிகளுடைய, வறிய மக்களினுடைய உரிமைகளுக்காக, தங்களுடைய அடிப்படை அரசியல் சுதந்திரத்திற்காக, நடந்த மிகப்பெரும் எழுச்சியாக, அந்த 31நாள், பேட்டில் ஆஃப் ஏதென்ஸ் இருக்கிறது. அந்தச் சதுக்கத்தில் எல்லோரும் கூடிநின்று நடத்திய போராட்டம் வன்முறையால் கலைக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டார்கள். ஆகவே, இது வரலாற்றில் மிகமுக்கியமான போராட்டமாக இருக்கிறது. ஆகவேதான், மோனலாக்கில், அதிலிருக்கிற அரசியல் மிகத்தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அருகிலிருந்த ஹோட்டலிலிருந்து, அமெரிக்கத் தூதரகத்தைச் சார்ந்தவர்களும், பிரிட்டன் தூதரகத்தைச் சார்ந்தவர்களும், பிரெஞ்சு தூதரகம் சார்ந்தவர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்ற விஷயம் சொல்லப்படுகிறது.
அம்சவள்ளி: படத்தின் காட்சிமொழி அழகியல் குறித்து
’எடெர்னடி அண்ட் எ டே’யில், முழுப்படமும் அப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கும். அக்காவும், தம்பியுமாக, அந்த இரு குழந்தைகளும் நடந்துபோகிற விதங்களெல்லாம், இந்த விதத்தில்தான் காட்சியாக்கப்பட்டிருக்கும். அவரது படங்கள் எல்லாமே, இயற்கையின்மீது நேசம்கொண்ட, இந்த இயற்கையினுள்ளே பிரவேசிக்கிற மனிதர்களை, பறவைக்கூட்டம் போல அனுபவிக்கிற, அழகிய மனநிலையைக் கொண்டிருக்கும்.
அழகியலின் ஒரு பகுதியாக, இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற இசை குறித்துப் பார்ப்போம். இது நாடகம் சம்பந்தமான படம். அதாவது, ஒரு நாடகத்தை நிகழ்த்துகிற நாடோடிக் கலைஞர்கள் குறித்த படம். நாடகங்களில் 1950களில் இருக்கிற பிரதானமான கருவிகள் என்றால், அதில் ஆர்மோனியப்பெட்டிதான் இருக்கும். நம் ஊர்களில், போடப்படுகிற நாடகங்களில் கூட ஆர்மோனியப்பெட்டியைப் பயன்படுத்தி எல்லாவிதமான உணர்ச்சிகளையும் கொண்டுவந்துவிடுவார்கள். அதேபோல, ’ட்ராவலிங் ப்ளேயர்ஸ்’ படத்திலும் ஆர்மோனியப்பெட்டி பிரதான வாத்தியக்கருவியாக இருக்கிறது. அதற்கடுத்தது பார்த்தீர்களேயானால், அக்கார்டியன் வாசிக்கிற ஒரு கலைஞன் அங்கிருக்கிறார். அடுத்து, போராளிகள் நாஜிக்களின் கொடியைக் கைப்பற்றி எரிகிற இடம், அடுத்து போராட்டச் சதுக்கத்தில் மக்கள் ஒன்றிணைந்து, செங்கொடி அசைத்து, பாடல்கள் பாடுகிறபோது, என இரண்டு இடங்களில் வெண்கல மணியோசை பயன்படுத்தப்பட்டிருக்கும். அதுதவிர, இந்தப் படத்தில் வேறுவிதமான இசைக்கருவிகளோ, இசைத் தருணங்களோ கிடையாது. இந்த மூன்றே முக்கால் மணி நேர கால அளவு கொண்ட படத்தில், உண்மையிலேயே இசையைப் பயன்படுத்திய காட்சிகள் என்று, நீங்கள் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்களுக்குமேல் சொல்லமுடியாது. மற்ற எல்லா இடங்களிலும் மெளனம்தான் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.
அதனால்தான் ஏஞ்சலோபெலோஸின் படங்களை, உண்மையில் மெளப்படங்கள் என்றே சொல்லலாம். ஏனெனில், அமைதி, மெளனம், பேசப்படாத தருணங்கள் என்பது மிகுந்த மிகுந்த அர்த்தம் வாய்ந்தது. இதை உணர்ந்த கலைஞன் அவர். அடுத்து, அவரது ஃப்ரேம்களில், வெற்றிடத்திற்கு அதிக இடமிருக்கும். அது மனிதர்களுக்கு ஒரு விடுதலையுணர்வை வழங்குகிறது. சினிமா என்றால் ”சைட் அண்ட் சவுண்ட் (Sight and Sound)”. இந்த இரண்டிலும் நீ எந்தளவிற்கு ஆளுமையுடன் இருக்கிறாய் என்பதை வைத்துத்தான், சினிமா மொழியைப் புரிந்துவைத்திருக்கும் உன் அனுபவமும் விரிவடையும். ஆஞ்சலோபெலோஸிற்கு இந்த இரண்டும் சார்ந்த புரிதல் மிக இயல்பாகவும், நுட்பமாகவும் வாய்த்திருக்கிறது.
யமுனா ராஜேந்திரன்: சத்யஜித் ரே எத்தனையோ படங்கள் எடுத்திருக்கிறார். ஆனால், அவரது முக்கியமான படங்களைப் பற்றிப் பேசவேண்டுமென்றால், என்னால் இரண்டு படங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். ஒன்று, சாருலதா மற்றொன்று பதேர் பாஞ்சாலி. குழந்தை உலகம் பற்றியும், வறுமை பற்றியும், ஆண் பெண் தொடர்பான நுட்பமான சிக்கல் பற்றியும்தான் ரே அதிகமாக எடுத்திருக்கிறார். அகிரா குரசோவாவை எடுத்துக்கொள்வோம். அவரது முக்கியமான படங்கள் என்றால், எல்லோரும் குறிப்பிடுவது ஒன்று, ரஷமோன், மற்றொன்று செவன் சாமுராய். ரஷமோன், மனித உணர்வுகள் தொடர்பான, அதற்குள்ளிருக்கிற சிடுக்குகள், முரண்கள், பல்வேறு பரிமாணங்கள் கொண்ட, உணர்வுரீதியிலான படம். செவன் சாமுராய் ஒரு ஆக்ஷன் கதைக்களம். ஒரு சமூக நன்மைக்காக, அல்லது மக்கள் கூட்டத்தின் விடுதலைக்காக, தன்னை அர்ப்பணித்துக்கொள்கிற, சாமுராய் வீரர்களின் மரபு பற்றியது. இது பற்றி குரசோவா நிறைய படங்கள் எடுத்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் பாதிப்பில் உருவான, ’ரான்’ வரை இந்தப் பட்டியல் நீளும். இந்த இரண்டு ஜானர்களில்தான், தன் கதையை, குரசோவா சோதித்துப் பார்த்திருக்கிறார். அதேபோலத்தான், ஒரு இயக்குனரின் அத்தனைக் கலைக்கூறுகளும் ஒருங்கே அமையப்பெற்ற படங்கள் என்று பார்க்கிறபோது, ஆஞ்செலோபெலோஸின் ட்ராவலிங் ப்ளேயர்ஸ் முக்கியமான படமாக இருக்கிறது. இவரது படங்களின் உன்னதம், அல்லது தனித்துவம் என்று என்னவெல்லாம் நினைக்கிறோமோ, அவையெல்லாம் இணைந்த, ஒரு படமாக, இந்த ட்ராவலிங் ப்ளேயர்ஸ் படம் இருக்கிறது. காலத்தைக் கடந்த படம், திரைப்படத்தினுடைய பல்வேறுவிதமான அழகியல் சாத்தியங்களைக் கொண்டிருக்கிற படம். அதேபோல, வரலாற்று நுண்ணுணர்வும், தத்துவார்வ போருக்கும் இடையில், வாழ்வு குறித்த தரிசனமும் கொண்ட, ஒரு கலைஞனுடைய படமாக இது அமைந்திருக்கிறது. அந்த வகையில் ட்ராவலிங் ப்ளேயர்ஸ், ஆஞ்செலோபெலோஸின் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்.