கிரீஷ் காசரவள்ளி: முப்படத் தொகுதி மூலம் முன்வைக்கும் பெண்சார் அவதானிப்புகள்
- by தமிழில்-லதா-ராமகிருஷ்ணன்
- 01 December 2019
-எச்.என். நரஹரி ராவ்
கர்நாடகத்தின் மிகச் சிறந்த திரைப்படக் கலைஞரான கிரிஷ் காசரவள்ளியின் சமீபத்திய படைப்பான `ஹசீனா` `தாயி சாஹேபா` மற்றும் `த்வீபா`ஆகிய இரண்டு படங்களையடுத்து அவற்றின் தொடர் கண்ணியாய் அமைந்துள்ள மற்றுமொரு படைப்பு. இந்த மூன்று படங்களிலும் ஆணாதிக்கச் சூழலில் பெண்களின் பிரச்சனைகளும், அவலங்களும் தீவிரத்தன்மையோடு அலசப்பட்டுள்ளன. இந்த மையக்கருவையே மேற்குறிப்பிட்ட மூன்று படங்களிலும் ஆணாதிக்கச் சூழலில் பெண்களின் பிரச்னைகளும், அவலங்களும் தீவிரதன்மையோடு அலசப்பட்டுள்ளன. இந்த மையக்கருவையே மேற்குறிப்பிட்ட மூன்று படங்களும் கையாண்டுள்ளன. அப்படித்தான் அமைய வேண்டும் என்பது அவருடைய பிரக்ஞாபூர்வமான திட்டமிடலா என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. ஆனால், அவருடைய படங்களைக் கூர்ந்து கவனித்து வருபவர் என்ற அளவில் எனக்கு இந்த முறை படங்களையும் ஒரு மையக்கருவின் நீள்தொடர்ச்சியாகப் பார்ப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது. இந்த மூன்றுத் திரைப்படங்களும் கன்னட வெள்ளித்திரைக்கு ஒரு கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளன. இடிபாடுகளுக்கு நடுவே உறுதியாக நிலைத்திருக்கும் பாறை போன்ற ஒரு, திரைப்படக் கலையின்பால் ஆழ்ந்த பற்றுறுதி கொண்ட கலைஞனால் செய்யப்படுள்ள பங்களிப்பு இது. நமக்கெல்லாம், அவரும் அவரொத்த வெகு சிலரும் ஒரு வறண்ட பாலையில் எதிர்ப்படும் சோலை போன்று நம்பிக்கையூட்டி வருகிறார்கள். மேற்குறிப்பிட்ட மூன்று திரை படங்கள் பற்றியும், இந்த மூன்று படங்களுமாக, தேர்ந்த பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பேசும் திறனாய்வொன்று இங்கே முன் வைக்கப்படுகிறது.
`தாயி சாஹேபா` என்ற பெயர் நிலச்சுவாந்தாரிய சமூக அமைப்பைச் சேர்ந்த மிகவும் மதிப்பார்ந்த பெண்மணியைக் குறிக்கும். கடந்த நூற்றாண்டின் ஆரம்பக் பகுதியில் இந்த சமூக அமைப்பு கர்நாடகாவில் புழக்கத்திலிருந்தது. இந்தத் திரைப்படத்தில் இடப்பெறும் கதை, இந்தியா சுதந்திரம் அடையும் தறுவாயில் இருக்கும் காலகட்டத்தைச் சேர்ந்தது. அப்பா சாஹேப், ஒரு நிலச்சுவாந்தார்.`தாயி சாஹேபா` வாகிய நர்மதா பாயின் கணவராகிய அவர் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் நடைபெற்றுவந்த விடுதலை போராட்ட இயக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றுக் கொண்டிருப்பவர். நாட்டின் விடுதலைக்காகச் சிறையிலிருப்பதைக் பெரிய கெளரவமாகக் கருதுபவர் அவர். இந்த திரைப்படம் `விடுதலை` என்பதன் பொருளை வெவ்வேறு மட்டங்களில் அணுகி, அலசி ஆராய முற்படுகிறது.
`அப்பா சாஹேப்பின் வாழ்க்கையில் மூன்று பெண்கள் இடம்பெறுகிறார்கள். அவருடைய முதல் மனைவி குழந்தையற்றவள், உலக வாழ்க்கையை முழு முற்றுமாகத் துறந்து ஒரு சந்நியாசினியைப் போல் வாழ்ந்து வருவதில் நிறைவுணர்கிறாள். ஒரு கோயிலில், கடவுள் பக்தியைத் தவிர வேறு நினைப்பே இல்லாதவளாய், உலக நடப்புகளிலிருந்து தன்னை முழுமொத்தமாக விலக்கிக்கொண்டவளாய் வாழ்ந்து வருகிறாள் அவள். இரண்டாவது பெண் தாயி சாஹேபா. அவள்தான் வீட்டு நிர்வாகத்திற்கு தலைமை தாங்குபவள்.
மூன்றாமவள் சந்திரி. `அப்பா சாஹேப்`பின் ஆசைநாயகியான அவளுக்கு மஞ்சரி என்ற ஒரு மகள் இருக்கிறாள். சம்பிரதாய வழக்கப்படி பார்த்தால் தாயி சாஹேபா வீட்டைவிட்டு வெளியே தலைகாட்டவே கூடாது. இதைக் குறிப்பாலுயர்த்துவதாய் அவர்கள் வீட்டிற்குள் பல கதவுகள் ஒன்றையடுத்து ஒன்றாய் உள்நோக்கி தொடர்சியாக அமைந்திருப்பதாய்க் காட்டப்படும். வீடு, ஏறத்தாழ ஒரு பாதுகாப்பு அரண் கூடிய கோட்டை போல் இருக்கும். அப்பா சாஹேப், வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தை பார்த்துவிட்டு விர அனுமதிக்கப்பட்டு சிறையிலிருந்து வரும்போது, நேரே தனது ஆசைநாயகியான சந்திரியையும், புதியதாகப் பிறந்திருக்கும் குழந்தை மஞ்சரியையும் பார்க்கக் செல்கிறார். இங்கு தான் தாயி சாஹேபாவின் உயர்குணம் நமக்குக் கோடிகாட்டப்படுகிறது. சந்திரியைப் பார்க்கச் சென்ற கணவன் தன்னைப் பார்க்கச் சென்ற கணவன் தன்னைப் பார்க்கவரும் வரை காத்திருக்கிறாள் அவள். அவன் நேரே தன்னைப் பார்க்க வராத்தால் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை அவள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அதற்கு பதிலாக, ஒரு உணமையான மரபார்ந்த மனைவியாய் அவனுக்கு இதமளிக்க முற்படுகிறாள். அவருடைய முதல் மனைவியின் சகோதரனாகிய வெங்கோபராவின் மகனான `நாணு`வைத் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்று பேசப் படுவதைக் கூட அவள் பெருந் தன்மையாக ஏற்றுக்கொள்கிறாள் அவள். அப்பொழுதுகூட அவள் நிலைகுலைவதில்லை. மாறாக, அந்தக் குழந்தையைக் கையிலெடுத்துக்கொண்டு ஒரு உண்மையான தாய் தரக்கூடிய அத்தனை வசதிகளையும் அந்தக் குழந்தைக்கு ஏற்படுத்தித்தருகிறாள். அப்பா சாஹேப்பின் குடும்ப வாரிசாகிவிட்ட நாணு, சந்திரியின் மகள் மஞ்சரியிடம் காதல் வயப்படும்போது தான் பிரச்னை ஆரம்பமாகிறது. அவன் அப்பா சாஹேப்பின் தத்துப் பிள்ளையாகிவிட்ட பிறகு மஞ்சரிக்கு சாகோதரன் முறையில் ஆகிவிடுகிறான். வெங்கோபராவ் தான் அப்பா சாஹேப்பின் சொத்து நிர்வாகத்தைப் பராமரித்து வருபவர். தன் மகன் நாணு வேறு ஏதாவது பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் குடும்ப வாரிசான அவன் மூலம் தன் கைக்கு சொத்து வந்துவிடும் என்ற கணக்கில் தன் மகனை வேறு பெண்ணுக்குத் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் அவர். அந்த சமயத்தில், மீண்டும் தாயி சாஹேபாவின் பெருந்தன்மையும், உறுதியும் வெளிப்படுகின்றன. எதற்கும் அஞ்சாமல், நாணுவையும், மஞ்சரியையும் ஒன்றுசேர்க்கத் தடையாக இருந்த சட்ட விதிகளையெல்லாம் தைரியமாக எதிர்த்துப் போராடி அவர்களை ஒன்றுசேர்க்கிறாள் அவள்.
இந்த படம் விடுதலை என்பதன் மெய்ப்பொருளைக் கண்டடைய உண்மையான முயற்சி மேற்கொள்கிறது. அப்பா சாஹேப் நாடு சுதந்திரமடைவதற்காய் தனது வாழ் நாளெல்லாம் சிறையில் கழிக்கிறார். நாடு சுதந்திரம் பெறும் நாளில் அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். தனது கிராமத்தில் , நாடு சுதந்திரம் பெறும் மகிழ்ச்சியைக் கொண்டாட நள்ளிரவில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார்.
அந்த விழா கூட்டம் நடைபெற நல்ல நேரம் பார்த்துச் சொல்லும்படி ஒரு ஜோதிடர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். தாயி சாஹேபாவும், அவருடைய குடும்பமும் ஏன், எதற்கு என்று எதுவுமே கேட்காமல் அப்பா சாஹேப் என்ன சொல்கிறாரோ அதைச் செய்கிறார்கள். எதனால் நள்ளிரவில் விழா ஏற்பாடாகியிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் அப்பா சாஹேப் சொல்படி நடக்கிறார்கள். கிராமத்தார் ஒன்று கூடுகின்றனர். நாடு சுதந்திரமடைந்திருக்கும் வெற்றியின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளாமலே அங்கு நடைபெறும் கொடியேற்று விழாவுக்கு மெளனக் பார்வையாளர்களாக நிற்கின்றனர். நாட்டின் விடுதலை அப்பா சாஹேபிற்கு எந்த மீட்சியையும் கொண்டுவரவில்லை. அவர் மீண்டும் சிறையில் வாட நேர்கிறது. இந்த முறை விவசாயிகள் குறித்த அவரது முற்போக்கு சிந்தனைகளுக்காக சிறை செல்லும்படி ஆகிறது. இவையனைத்தும் ஒருமட்டத்தில் நடந்தேறுகின்றன. குடும்ப அளவில், தாயி சாஹேபா ஒரு விசுவாசமான மனைவியாக இயங்கிவருகிறார். சந்திரியை, தனது கெளரவத்திற்கு எந்த பங்கமும் ஏற்படாமல் கவனமாக பார்த்துக்கொள்கிறார். தன்னுடைய தத்து பிள்ளையான நாணுவை சட்டத்தின் செயற்கை தளைகளிருந்து விடுவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு அவனுடைய காதலி, மஞ்சரியை அவன் திருமணம் செய்ய உதவுகிறார். இப்போது தாயி சாஹேபா சுதந்திரமாக இயங்கத் தொடங்குகிறார். குடும்ப மரபு சம்பிரதாயங்களை மீறி, தனது கணவனை தேடிக்கொண்டு பல இடங்களுக்கு செல்கிறார்.
சில ஆவணக்களில் தாயி சாஹேபா கையெழுத்துயிடுவதால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும் என்று சந்திரி அச்சம் தெர்விக்கும்போது கூட அதை பற்றி தாயி சாஹேபா சிறிதும் கவலைபடுவதில்லை. மாறாக, அவர், புன்முறுவலோடு செய்கிறார். சொல்வதை மேற்கோள் காட்டி, "விடுதலையடைய ஒருவர் சிறைக்கு செல்லத்தான் வேண்டும்", என்று கூறுகிறார் . "நாணுவுக்கு விடுதலை கிடைக்க நான் சிறைக்கு செல்ல தயார்", என்கிறார்.
இந்தப் படம் நம் மனதில் ஒரு சிந்தனை ஓட்டத்தை வரவாக்குகிறது. "விடுதலை எது? சிறை எது?" தாயி சாஹேபாவாக வேடமேற்றிருக்கும் ஜெயமாலா.
நுட்பமான அந்த கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான தங்கத் தாமரை விருது கிடைத்தது. மிகவும் பொருத்தமானதுதான். வெங்கோப ராவாக நடித்த 'ஷிவராம்' தேசிய அளவில் சிறந்த துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் வெவ்வேறு திரைப்பட விழாக்களிலும் இப்படம் தேர்ந்த பார்வையாளர்கள் விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. த்வீபா கிரீஷினுடைய அடுத்தபடம். அதுவும் சிறந்த திரைப்படத்திற்கான 'தங்கத் தாமரை' விருது பெற்றது. இந்த படம் உண்மையில் இரண்டு ஆண் கதாபாத்திரங்களில் ஆதிக்கத்திற்கு உட்பட்ட சூழமைவில் ஒரு பெண்ணின் அவலநிலையையும், அலைக்கழிப்பையும் தொடர்ந்து ஊடுருவித்துலாவுகிறது. அவளுடைய கணவனும் மாமனாரும் தங்களுடைய ஆணாதிக்க மனப்போக்கின் தளைகளின் சிக்குண்டியிருப்பவர்கள். இந்த படத்தின் கதை சுருக்கமாக பிரசுவிக்கப்பட்டது. தவறான புரிதலுக்கு இட்டுச்செல்லக்கூடிய அளவில் இருக்கிறது. அணைக்கட்டுகள் கட்டப்படும்போது இடப்பெயர்க்கபடும் மக்களின் பிரச்சனைகளையும் வாழ்வு நெருக்கடிகளையும் பேசுவதல்ல இந்த படத்தின் கருப்பொருள். இந்த படம் நாயகியின் மனஉறுதியையும் வைராக்யத்தையும் தியாகத்தையும் பிரதிபலிப்பது. தனது குடும்பத்தை அழிவிலிருந்து காப்பாற்ற தனது எல்லாவற்றையும் தியாகம் செய்த ஒரு பெண்ணை பற்றிய கதை இது. சிதிலங்கள் அழிவுகள் அவமானங்களுக்கிடையே பாறைபோல் உறுதியாய் நின்றாள் அவள். குடும்பத்தின் தலைவரான துக்காஜா நாகியின் மாமனார் முதிய தலை முறையை சேர்ந்தவர்.
அவருடைய அணுகுமுறை அழுந்த மூடிய மனதைப் பிரதிபலிப்பது. மொத்த கிராமமுமே இன்னும் சில நாட்களில் மூழ்கிவிடப்போகிறது என்ற நிலைமை பட்டவர்த்தனமாகத் தெளிவாகியும் கூட பிடிவாதமாக அந்த இடத்தைவிட்டு நீங்க மாட்டேன் என்று மறுக்கிறார் அவர். நாகியின் கணவான கானப்பா சுயபுத்தி இல்லாத கோழை. அப்பா என்ன சொல்கிறாரோ அதன் படியே நடப்பவன். அவன் தனதேயான ஒரு உலகத்தில் வாழ்ந்துவருகிறான். சமய சந்தர்ப்பங்கள் தாம் அவனை முன்னகர்த்தி செல்கின்றனவே தவிர அவனாக ஒரு தீர்மானத்தை ஒருபோது மேற்கொள்வதில்லை. அவனுக்கு ஒரு பெண்ணின் தேவைகளை பற்றியா புரிதலே இல்லை . ஆனாலும் இயந்திரகதியில் இயங்கும் அவர்களுடைய வாழ்வு சூழலில் கிருஷ்ணா சிறிது உயிர்ப்பை சாத்தியமாக்கும் போது அவனுக்கு கிருஷ்ணா மேல் பொறாமை ஏற்படுகிறது. கிருஷ்ணாவின் வருகைக்கு பிறகுதான் நாகி முதல் முறையாக சிரிக்கிறாள். சந்தோசமாக சிரிக்கிறாள். கிருஷ்ணாவின் அருகாமையில் காலம் சிறகடித்து பறப்பதாய் தோன்றுகிறது அவளுக்கு. அது அவள் வாழ்வில் ஒரு வசந்த காலம் போல் அமைகிறது. என்றாலும் சாடற்றென்று அந்த சந்தோசம் பறிபோய்விடுகிறது.
கிருஷ்ணாவுடன் அவள் கொண்டிருந்த நெருக்கம் தான் கானப்பாவின் எரிச்சலுக்கு காரணம். நீர்துயிலிலிருந்து மீண்டெழுபவனாய் அவனை முயூடியுள்ள போர்வையிலிருந்து வெளியே வந்து தான் ஏதோ ஒரு போரில் வெற்றிகண்டுவிட்டதைப்போல் பெருமித புன்னைகையில் விகசித்துப்போகிறான்.
பாவம் நாகி! அவனிடம் நியாயம் கேட்பதாய் வினவுகிறாள். நானல்லவா அந்த புலியை நம்மை அண்டவிடாமல் செய்தது? நன்றி கேட்ட அந்த கணவன் கூறுகிறான். "நிச்சயமாக இல்லை, நீ எதையும் செய்யவில்லை உன்னுடையது வெறும் 'ஒப்புக்கு சப்பாணி பங்களிப்புதான் கடவுளின் விருப்பமும், கருணையும்தான் நம்மை காத்தது. நம்மை காத்த கடவுளுக்கு நாம் நன்றி பாராட்டவேண்டும். அவரிடம் நன்றியோடு இருக்கவேண்டும்". இந்த இடத்தில்தான், இந்த முக்கியமான கட்டத்தில் கிரீஷ் இந்த பாணியிலான தனது மூன்றாவது திரைப்படத்திலும், தனது தேடலை தொடர்கிறார். இம்முறை ஹசீனாவில், வாழ்க்கை சூழல் சற்றுவித்தியாசமாக வேறொரு காலகட்டத்தை சேர்ந்ததாக இருந்தாலும்கூட இந்தப் படமும் ஒரு சிலந்தி வலை போன்ற வாழ்வில் மாட்டிக் கொண்டு மீள முடியாமல் தவிக்கும் பெண்ணின் அவசங்களையும் நெருக்கடிகளையும் அலசி ஆராய்கிறது. பானு முஷ்டாக் என்பவர் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது.
பானு முஷ்டக் தொழில்முறையில் ஒரு வழக்கறிஞர். இஸ்லாமியப் பெண்ணான ஹசீனா ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனராக யாகூப் என்பவருக்கு மனமுடிக்கப்பட்டிருந்தாள். யாகூப் தனது மதத்தை மிகத் தீவிரமாய் கடைப்பிடித்தவன். தினம் தவறாமல் குறித்த நேரத்தில் தொழுகை செய்து வருவான். அவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தன. மூன்றும் பெண் குழந்தைகள். முதல் பெண் தனது கண் பார்வையை இழந்துவிட்டது. இப்பொழுது அவர்கள் தங்களுடைய நான்காவது குழந்தையின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அது ஆண்குழந்தையாகவே பிறக்கும் என்று நம்பினார்கள். பிரசவ நாள் வரை பொறுமையோடு காத்திருக்க இயலாதவனாய் ஸ்கேனிங் மூலம் கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிய முயற்சி மேற்கொள்கிறான். கருவிலிருப்பது பெண் குழந்தையே என்று தெரிய வர, அது முதல் ஹசீனாவிடம் மிகக் குரோதமானப் பகைமை கொள்கிறான் யாகூப். தனது தாயினால் தைரியம் கூடிய நிலையில் அவன் தனது கருவுற்ற மனைவியையும், குழந்தைகளையும் அப்பட்டமான வன்மத்தோடும், புறக்கணிப்போடும் நடத்தத் தொடங்குகிறான். தனது குடும்பத்தை கைவிட்டு விலகிவிடுகிறான். வீட்டிற்கு வருவதை நிறுத்திகொண்டு வருகிறான். வேறொரு பெண்ணை யாகூப் மணக்கப் போவதை அறிந்து கொண்ட ஹசீனா, படிப்படியாகத் தனது நிலைமையை ஏற்றுக் கொண்டவளாய், வாழ்ந்து வரத் தொடங்குகிறாள். வேலை செய்து சம்பாதித்து மூத்த மகளின் கண் பார்வையை மீட்டெடுக்கத் தேவையான அறுவை சிகிச்சையைச் செய்து விடலாம் என்ற நம்பிக்கையையும், மனஉறுதியையும் கைக்கொண்டு செயல்படுகிறாள். அவளும், அவளுடைய குழந்தைகளும் இரவு பகலாக உழைத்து ஊதுபத்திகள் தயாரித்து வருகிறார்கள். ஹசீனா ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்கு செல்கிறாள். அந்த வீட்டின் உரிமையாளரான ஜீலேக்கா மிகவும் வசதி படைத்தவள், விவாகரத்தானவள். இஸ்லாமியத் தனிச் சட்டத்தைக் கரைத்துக் குடித்திருப்பவர். அவளுடைய ஆலோசனையின்படி ஹசீனா தனது கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கோரி வழக்குத் தொடுக்கிறாள்.
படம் இப்போழுது ஒரு புதிய கட்டத்தை எட்டுகிறது. மதம் என்ற பெயரில் இஸ்லாமியப் பெண்களின் மீது குவிக்கப்பட்டிருக்கும், பிறப்பிலிருந்தே உள்ளார்ந்து வருவதான குரூரமும், வன்முறையும் ஒவ்வொரு அடுக்காக இழைபிரித்துக் காட்டப்படுகிறது. தேர்ந்தெடுக்கப் பட்ட மதத் தலைவரான ‘முத்தாவல்லிய்’ இடம் அவள் கைப்பட எழுதிய புகாரை அளிக்கிறாள். தனக்கு நியாயம் கோரி அவள் அந்தப் புகாரை அளிக்கச் செய்தவன் பயனாய் அவருடைய மனைவியின் பரிச்சியம் ஹசீனாவுக்குக் கிடைக்கிறது. அந்தப் பெண்மணியும் ‘ஷரியத்’ சட்டத்தால் பாதிக்கப்பட்டவள் என்று தெரியவருகிறது. உடல்நலனைப் பொறுத்தவரையில் அவள் நாளும் நாள் நலிவடைந்துகொண்டே போகிறாள். ஒரு இயந்திரம் போல் வருடாவருடம், இடை வெளியில்லாமல் பிள்ளையைப் பெற்றுப் போட்டுக் கொண்டே இருப்பதில், அவள் உடல் மிகவும் சீர்கெட்டு விடுகிறது. கருத்தடை செய்து கொண்டு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அவள் விரும்பினாலும், அவளுடைய கணவன், அவர்களுடைய சமூகத்தின் தலைவராக இருக்கின்ற காரணத்தால் அதற்கு ஒப்புக்கொள்வதில்லை. தன் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அதன் விளைவாய் தான் பதவியிழக்க வேண்டி வரும் என்ற பயம் அவனுக்கு. இந்த இனத்தின் மத ரீதியான நடைமுறையிலிருந்து வரும், கட்டுமானத்திற்குள் இன்னும் ஆழமாக ஊடுருவுகிறது இந்தத் திரைப்படம். முத்தாவல்லிலின் எதிரியான ஹனீக்ப், ஹசீனாவின் பிரச்சனையைக் கையிலெடுத்துக் கொண்டு அவளுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய முன்வரும் போது மேற்குறிப்பிட்ட ‘நடைமுறைகள்’ வெளிச்சத்திற்கு வருகின்றன. ஹசீனாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது அந்த எதிரி தரப்பினரின் நோக்கமல்ல. அவளுடைய பிரச்னையைப் பயன்படுத்தி முத்தாவல்லியைப் பழிவாங்குவது தான் அவர்களுடைய குறிக்கோள். இந்தப் பதவிப் போட்டியிலும், பழிதீர்க்கும் படலத்திலுமாய் ஹசீனா அங்குமிங்குமாய், நியாயத்திற்காய் ஓடும்படியாகி, பெரிதும் அலைக்கழிக்கப்படுகிறாள்.
இறுதியில், தனக்கு நியாயம் கிடைக்கும் வரை தன் குழந்தைகளோடு மசூதியிலே உட்கார்ந்து கொண்டிருப்பதென்று முடிவு செய்கிறாள் ஹசீனா. அவளுடைய கணவன் அவளை விட்டுப் பிரிந்தாலும் அவள் கவலைப்படப் போவதில்லை. இப்பொழுது அவளுக்கு வாழ்க்கையிலிருக்கும் ஒரே நம்பிக்கை ஏதாவது ஜீவனாம்சம் அல்லது நஷ்டஈடு கிடைக்க வழிவகை செய்து கொண்டு அதன் மூலம் முன்னிக்குத் தேவையான அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதுதான். இந்தப் படத்தில் மத ரீதியாய் பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறை அதன் உச்சபட்ச அளவில் காண்பிக்கப்படுகிறது. அரக்கத்தனமாய் யாகூப் அவளை, மௌல்விக்கள், மற்ற மதத் தலைவர்கள் அனைவரின் முன்னிலையிலும் எட்டியுதைத்து. மிதித்துத் தள்ளி துவம்சம் செய்கிறான். அதுவும் மசூதியின் எதிரில். படத்தின் முடிவு மிகவும் துயரார்ந்ததாக, அவலம் நிறைந்ததாக இருக்கிறது. ஹசீனாவுக்கு பதிலாய் முன்னி அந்த அடியுதைகளைப் பெற்றுக்கொண்டு, மிதித்துத் துவைக்கப்பட்டு அந்த இடத்திலேயே மாண்டு போகிறாள்.
ஒருக்கால், முன்னியின் மரணத்தை விதியின் கருணையான சமிக்ஞையாகக்கூடக் கொள்ள முடியும்.ஏனெனில், ஒரு வகையில் அது ஹசீனாவின் எல்லையற்ற துன்பத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருகிறது! ஆனாலும், மசூதியின் தொழுகை எப்பொழுதும் போல் குறித்த நேரத்தில் தொடர்ந்து நடந்துவருகிறது. இது நன்மை அவலமாய் உணர வைக்கிறது. யாகூபின் குரூரம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாய், அதிபயங்கரமாய் இருக்கிறது. நல்ல வேளையாக, நமக்கு அவை நேரடியாகக் காட்சிப்படுத்தப்படுவதில்லை. அந்த ரத்தம் உறைய வைக்கும் சம்பவங்கள் காமிராவிலிருந்து மறைக்கப்பட்டு அவற்றின் ஓலங்களும், தலைப்பு வரிகளும் மட்டுமே நம்மை எட்டுகின்றன. இங்கும், மொத்த விஷயத்தைப் பற்றியும் ஒரு முரண்சுவை கூடிய இறுக்கமான அணுகுமுறை அல்லது பார்வை நமக்கு உணரக் கிடைக்கிறது. ஒவ்வொரு குரூர செய்கைக்கும் பிறகு மசூதியிலிருந்து தொழுகை ஒலிக்கிறது. படம், இஸ்லாமியர்களின் காலைத் தொழுகையான fazr ஒலிக்க ஆரம்பிக்கிறது. பின், மதியத் தொழுகைக்கான jehr இடம்பெறுகிறது. அதன்பிறகு, asr என்ற மாலைத்தொழுகை, magrib எனப்படும் அந்தி வேளையிலான தொழுகை இவ்வாறாய் படம் isham எனப்படும் இரவுத் தொழுகையோடு முடிகிறது.
படத்தில் இடம்பெறும் மதத் தலைவர்கள் எல்லோரும், யாகூபும்கூட இந்தத் தொழுகைகளில் தவறாமல் கலந்துகொள்கிறார்கள். ஆனாலும் பெண்களை அவர்கள் நடத்தும் விதத்தில் ஒரு துளியும் கருணையோ, அன்போ இல்லை. மதம் என்ற பெயரில் அப்பாவி, ஏழைப்பெண்கள் மீது எத்தகைய அரக்கத்தனமும், சுரண்டலும் பிரயோகிக்கப்படுகின்றன என்பதை இந்தப்படம் முகத்திலறைவதாய் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையில் ஹசீனாவுக்கு இருந்த ஒரே நம்பிக்கையும், பிடிப்பும் கூட முன்னியின் மரணத்தால் சுக்குநூறாகப் போய்விடுகிறது. கடைசிக் காட்சியில் இடம்பெறும் கலவரத்திலும், களேபரத்திலுமாய் ஹசீனாவின் நியாயங்ககளை எடுத்துரைக்கும் சட்ட நுணுக்கங்கள் எழுதப்பட்டிருக்கும் பக்கங்கள், ஜீலேகாவால் எழுதித்தரப்பட்டவை, கிழித்தெறியப்பட்டு காற்றில் பறக்க விடப்படுகின்றன. அந்தக்காகிதத் துண்டங்களும் அவற்றில் குறிக்கப்பட்டிருக்கும் சட்ட விதிமுறைகளும் நூற்றுக்கணக்கான ஹசீனாக்களின் கைகளை எட்ட, அவர்கள் அவற்றைப் படித்து பல விதமாய் எதிர்வினையாற்றுகிறார்கள். சிலர் தங்களுடைய பர்தாக்களைத் திறந்து போடுகிறார்கள்; சிலர் இழுந்து மூடிக்கொள்கிறார்கள். தங்களை ஒடுக்கி வரும் சந்தர்ப்பவாத பிணந்தின்னிக் கழுகுகளுக்கு எதிராகப் பெண்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து குறியீடாக மேற்படிக் காட்சியாக்கம் அமைகிறது.
அமீனாவும் கூட தனது கணவன் முத்தாவல்லிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்துகிறாள்.
பெயர்பெற்ற கன்னட நடிகையான தாரா, ஹசீனா வேடத்தில் மிகச் சிறப்பாகப் பொருந்தியிருக்கிறார். இந்தப் படத்தில் அற்புதமாய் நடித்ததற்காய் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தத் திரைப்படம், தேசிய அளவில் குடும்ப நலன் பற்றிய சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. முன்னியாக நடித்த ‘போதினி பார்கவி’க்கு அவருடைய அற்புத நடிப்பிற்காய் பல விருதுகளும் புகழுரைகளும் கிடைத்தன. இந்தப் படம் நம் நாட்டின் உச்சபட்ச விருதான ‘தங்க தாமரை’ விருதைத் தவறவிட்டது. ஆச்சரியமாக இருக்கிறது.
கிரீஷ் ‘சமூகத்தில் பெண்களின் நிலை’ குறித்த தனது ஆழ்ந்த அவதானிப்புகளை ‘தாயி சாஹேபா’ படம் மூலம் ஆரம்பித்தார். அந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரமான ‘நர்மதா பாய்’ ஒரு வசதிபடைத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய தினசரி வாழ்க்கைக்கான தேவைகளை அடைவதில் அவளுக்கு எந்தக் கஷ்டமுமில்லை. என்றாலும், இங்கே அவளுடைய பிரச்சனை விடுதலைக்கான போராட்டமாக இருக்கிறது. அவளுடைய கணவன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவருடைய மனைவியான நர்மதா பாய் அரண்மனைக்குள் அடைபட்டுக் கிடக்கும் தன்னுடைய வாழ்க்கைக்கான ‘விடுதலைப் போராட்டத்தில்’ ஈடுபடுபவளாக இருக்கிறாள்.
காசரவள்ளியின் இரண்டாவது படத்தில் ‘த்வீபா’ அல்லலுறும், அலைக்கழியும் பெண்ணாக, பிரதான கதாபாத்திரமாக அமைகிறது. த்வீபா குடும்பத்திற்காக அயராது உழைத்து வருகிறாள். தனது வருத்தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையோடு போராடி வருகிறாள். குடும்பத்திற்காய் தான் பாடுபட்டுச் செய்து வரும் தொண்டுகள் குடும்பத்தாரால் அங்கீகரிக்கப்படும், மதிக்கப்படும் என்று மனதார நம்புகிறாள். குடும்ப நலனுக்காய் தனது சொந்த விருப்பு வெறுப்புகளைத் தான் தியாகம் செய்துவிடுவதைக் குடும்பத்தார் உணர்ந்து போற்றுவார்கள் என்ற அவளுடைய நம்பிக்கை பொய்த்துப்போய்விடுகிறது.
மூன்றாவது படமான ஹசீனாவின், கிரீஷ், இன்னும் அதிகத் துணிச்சலோடு, சமகால அளவில், இன்றும் தொடரும் இனஞ்சார் அடிப்படைவாதம் என்ற பிரச்னையைக் கையிலெடுத்துக்கொண்டிருக்கிறார். உலகெங்கும் லட்சக்கனக்கான பெண்கள் மத அடிப்படைவாதத்தின் பிடியில் சிக்குண்டு சித்திரவதைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று படங்களிலும் இடம்பெறும் மூன்று பிரதான பெண் பாத்திரங்களும் உலகிற்கு வெளிச்சம் தர தங்களைத் தாங்களே உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்திகளைப் போன்றவர்கள்.
இந்த மூன்று படங்களிலுமே பெண் பாத்திரங்களே மிக முக்கிய பங்களிப்பைச் செய்பவர்களாய் அமைந்திருக்கிறார்கள். இந்த மூன்று பெண் பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகைகளே அவரவர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களும்கூட என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
காசரவள்ளியின் கண்ணோட்டங்கள்
இந்த மூன்று படங்களும் ஒரு தொடரினைப்பாகக் கொள்ளத்தக்கன என்று நான் கிரீஷிடம் அபிப்பிராயம் தெரிவித்தபோது அவர் நான் சொன்னதை, சிறிது நேரம் அவதானித்துவிட்டு, பின், இது ஒரு நல்ல பார்வை என்றார்: அவருடைய எதிர்வினை பின்வருமாறு.
“காந்திஜியைப் பற்றி ‘ஆஷிஷ் நந்தி’ எழுதிய கட்டுரைகளில் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். மோதல், போராட்டம், வன்முறை என்பதான நியமங்களிலிருந்து காந்திஜி எவ்விதம் அரசியல் போராட்டத்தை வேறு வழிகளில், அகிம்சை, உண்மை, அமைதி, நல்லிணக்கம் என்பனவற்றைக் கொண்டதாய் மாற்றியமைத்தார் என்பதைப் பற்றி அந்தக் கட்டுரை விவரிக்கிறது. இந்தப் புதிய பரிமாணம், காந்திஜி முன்வைத்த புதிய அணுகுமுறை அரசியல் என்ற காலத்தோடு நின்று விடாமல் அதைத் தாண்டிச் சென்று நவீன வாழ்வுக்கான ஒரு மருந்தாக, வலிநிவாரணியாக உருவெடுத்திருக்கிறது. இந்த விஷயமே என்னுடைய மூன்று படங்களின் அடிப்படைக் கருவாகியிருக்கிறது.
‘தாயி சாஹேபா’வில் அப்பா சாஹேபா காந்தியடிகளின் மிக உண்மையான ஆதரவாளராக, அவரை மிகத் தீவிரமாகப் பின்பற்றுபவராக மாறுகிறார். ஆனாலும் குடும்ப மட்டத்தில் நேரிடும் பிரச்சனைகளையோ, குத்தகையுரிமைச் சட்டம் தொடர்பான இக்கட்டுரைகளையோ எதிர்கொள்ள நேரிடும்போது அவற்றை சமாளிக்கத் தேவையான தெளிவையும், உறுதியையும் அவர் வெளிப்படுத்துவதில்லை. அவர் எல்லாவற்றையும் வாய்திறவாமல் மௌனமாய் கவனித்துக் கொண்டிருக்கும் பார்வையாளராக மட்டுமே நின்றுவிடுகிறார்.
ஆனால், தாயி சாஹேபா, எத்தனையோ எதிர்ப்புகளுக்கும், இடையூறுகளுக்கும் மத்தியில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழி செய்கிறாள். மேலும், சாதி, வர்க்கம் தொடர்பான ஏற்றத்தாழ்வுகள், பிரச்சனைகள் எல்லாவற்றையும் மீறி நாணுவும், மஞ்சரியும் ஒன்றுசேர வழிவகுக்கிறாள். இந்த எல்லாவற்றையும் அவள் அதிகாரத்தின் மூலமோ, நிர்ப்பந்தத்தின் மூலமோ சாதிக்காமல் தனது அன்பினாலும், அக்கறையாலும் சாத்திய மாக்குகிறாள்.
‘த்வீபா’வில் நாகியும் அதே குறிக்கோளின் கீழ்தான் இயங்குகிறாள். வெள்ளத்தால் ஊரெல்லாம் மூழ்கப் போகும் அபாயம் வரப்போவதை அறிந்து கிராமங்களிலுள்ள மக்கள் வேறு இடங்களுக்குப் பாதுகாப்பாய் இடம்பெயரும்போது, நாகியின் குடும்பம் மட்டும் தங்கள் கிராமத்திலேயே தங்கியிருக்கத் தீர்மானிக்கிறது. துக்காஜா ஒரு வயதான பழைமைவாதி. கடந்த காலத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பவர். கிருஷ்ணா வெளியாள். கனவிலேயே வாழ்பவன். தண்ணீரைக் கண்டு அஞ்சுபவன். கணவன் காணப்பாவோ தனது தந்தையை அப்படியே பின்பற்றுபவன். கிருஷ்ணா வில் உள்ள ‘ஆவி’யைக் கண்டு அஞ்சுபவன். மிகவும் பயந்தாங் கொள்ளி. இந்த உறவினர்களுக்கு மத்தியில் நாகி தனி மனுஷி. தங்கள் குடும்பம் அங்கயே தங்கியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதும். நாகி, நிகழ்காலத்தில் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள், இயற்கையோடு இயைந்து வாழ்ந்துவரத் தீர்மானிக்கிறாள். மனிதர்களோடும், விலங்குகளோடும், மரம் செடி கொடிகளோடும் அங்கேயே இருந்துவருகிறாள். தனது அணுகுமுறையில் அவள் வெற்றி பெறுகிறாள்.
ஹசீனாவைப் பொறுத்தவரை மதம், ஆண் ஆகிய இரண்டின் உலகங்களும் அவளை அடக்குகின்றன; அச்சுறுத்துகின்றன. ஆனால் பொறுமையும், சமாதானவுணர்வும், அகிம்சையுமாய் அவள் அந்த அடக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கிறாள். அவளுடைய கணவன் கொடுமையே உருவானவனாய் திகழ்கிறான். அவளுடைய வாழ்க்கைப் பயணம் பல கட்டங்களைத் தாண்டி இறுதியில் அவளுடைய கணவனும், யாகூபும் அவளை உடல் ரீதியாய் அடித்துத் துவைப்பதில் வந்து முடிகிறது.
மாறாக யாகூபின் வன்முறைப் பயணம் முன்னியின் மரணதோடு முடிகிறது. ஹசீனா வந்முரைக்காளாகிறாள். ஆனால், சமூகத்தில் விழிப்புணர்வை உண்டாக்குவதில் அவள் வெற்றி பெறுகிறாள்.
தாயி சாஹேபா, நாகி, ஹசீனா – ஆகிய மூன்று முகங்களுமே தனித்தனியான அளவில் தோல்வியை உணர்த்தினாலும் சமூகத்தின் ஆழ் மனதில் அதிர்வுகளை உண்டாக்குவதில் வெற்றி பெறுகிறார்கள்.
நன்றி: film buff, 11a, municipal office lane, kolkata.
திரை