யதார்த்தமான கதைக்களங்களை விரும்புகிறேன்
- by gமுரளி
- 01 May 2020
சென்ற இதழின் தொடர்ச்சி...
மிகவும் நெருக்கமான குடியிருப்புப் பகுதி மும்பையின் தாராவி. அதிக நெருக்கடியான இட அமைப்புள்ள, தாராவிக்குச் சென்று பார்த்தால், அதன் உண்மை நிலை புரியும். அந்த நிலப்பரப்பை நாம் காட்சியில் பதிவுசெய்ய வேண்டும். அந்த இடத்தை பறவைக்கோணத்தில் காட்டுவதென்பது, ஒரு டைரக்டோரியலாக, அதை வெளியிலிருந்துப் பார்க்கிற மனோபாவத்தைத் தொடர்ந்து உருவாக்கிக்கொண்டேயிருக்க வேண்டிய தேவையிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இடம் சார்ந்த நெருக்கடியை எங்கெங்கெல்லாம் சொல்லலாம்? ஒரு ஹ்யூமன் நெருக்கடிகளுக்குள்ளிருந்து சொல்வது, ஒரு கிராஃபாக சொல்வதென்றாலும், அதில் பெரும் இறுக்கங்கள் உள் இருக்கின்றன. வெறுமனே எஸ்டாபிளிஸ்மெண்ட் ஷாட்களாக அது இல்லாமல், தொடர்ச்சியாக அந்த இடம் சார்ந்த விஷயங்களுக்குள் அது பயணிக்க வேண்டுமென்பதால், ஏரியல் ஷாட் அதிகமாகப் பயன்படுத்தியிருப்போம். அந்த ஷாட் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, என்பதாக உணரவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு அது அளவுக்கதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அடுத்தடுத்த படங்களில் அந்த ஷாட் பயன்படுத்தப்படும் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
இதெல்லாம் தேவை கருதி இயங்குவது. ஒரு சண்டைக்காட்சியை எவ்வளவு தூரம் ரசிக்கும்படியாக மாற்றுவதென்பது முக்கியம். அதே சண்டைக்காட்சியில் ரஜினி சாருக்குப் பதிலாக வேறு யாராவது நடித்திருந்தால், ஸ்லோ மோஷனைத் தவிர்த்து வேறு மாதிரியாக படம் பிடித்திருப்பார்கள். அந்த ஸ்டைல், அவர் குடையைச் சுற்றுவது, நடந்து வருவது, அவர் குடையைப் பயன்படுத்தும் விதம் என எல்லாமே ஒரு ஸ்டைல் தன்மையோடு வெளிப்படுகிறது. இந்தப் படம் மட்டுமல்ல, அவரது எல்லா படங்களுக்குமே, ரஜினி சாருக்கு உண்டான ஸ்டைல் வெளிப்படும். அவருக்கென ஒரு தனியான பாணியை, அவர் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். அவரது பாணிக்குள்ளிருந்துதான், நாம் ’காலா’ என்ற ஒரு படத்தை எடுக்கப்போகிறோம். எனவே, அங்கிருந்து முற்றிலுமாக ஒன்றை உடைத்து, படம் எடுப்பதற்கான சுதந்திரங்கள் குறைவாகத்தான் இருக்கும். ஆக, இங்கு ரஜினி சாரின் படத்திற்கு நடுவில், நம்முடைய கருத்துக்களையும், பார்வையையும் எப்படி நிறுவுவது என்பதே முக்கியம். அதுதான் நமக்கான சவால். எனவே, அவருக்கான சண்டைக்காட்சியைத்தான் நாம் படம்பிடிக்கிறோம்.
சண்டைக்காட்சியில் ஒரு ஸ்லோமோஷன் டெக்னிக் என்பது, சண்டையை இன்னும் பரபரப்பாக நகர்த்துகிறது. அவர் அடிக்க வருகிற தோரணையிலேயே அவர்தான் வெற்றிபெறுவார் என்ற விஷயம் வெளிப்பட்டு விடுகிறது. அப்படியெனில், அவர் அடிக்கிற அடி என்பது குறைந்தபட்சம் எவ்வளவு ஸ்டைலாகவும், வலிமையாகவும் வெளிப்படுகிறது என்று பார்க்க வேண்டும். அதை பிரதானப்படுத்திக்காட்ட ஸ்லோமோஷனைப் பயன்படுத்துகிறோம். இதுபோன்ற உத்திகள் அந்தக் காட்சியை இன்னும் ஆற்றலோடு, படம் பார்க்கிறவர்களுக்கு இன்னும் அதிகமான கிளர்ச்சியை உண்டாக்குகிறது. அந்த மாதிரியான நோக்கத்திற்காகத்தான், காலாவில் சண்டைக்காட்சிகளில் ஸ்லோ மோஷன் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
க்ளோஸ் அப் ஷாட்கள் குறித்து என்ன பேசினோமோ, அதேபோலத்தான் ஸ்லோ மோஷனையும் பயன்படுத்துகிறோம். ஒன்றைக் கூர்ந்து கவனிப்பதற்கான தேவை ஒரு பார்வையாளனுக்கு, எங்கு தேவையாக இருக்கிறது? என்பதை அடிப்படையாக வைத்துதான், ஒரு க்ளோஸ் அப்பை, காட்சியில் வைக்கிறோம். அப்படியாக அசைவியக்கமாக ஓடிக்கொண்டிருக்கிற ஒரு படத்தில், அதில் எதுவந்து அதன் நகர்வியக்கத்தை, ரொம்ப டிராமாவாக, அல்லது இன்னும் ஸ்லோவாக, புரிந்துகொள்வதற்கான இடமாக மாற்றுகிறோமோ, எப்படி க்ளோஸ் அப் ஒன்றை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், கூர்ந்து கவனிப்பதற்குமான ஒரு இடமாக மாறுகிறதோ, அதேபோல, ஃப்லிமிற்குள் இருக்கிற மூவ்மெண்ட்ஸை, மிகவும் வலிமையாகப் புரிந்துகொள்வதற்கான தேவை என்னவாகயிருக்கிறதோ, அதைப்பொறுத்துதான், அந்த ஸ்லோமோஷன் ஷாட்களைப் பயன்படுத்த வேண்டும்.
கமர்ஷியல் சினிமாவில் அதைப் பயன்படுத்துவதென்பது, வியாபார நோக்கத்திற்காகவும், மேலும் அதை பொழுதுபோக்கு ஊடகமாக அணுகுவதற்குத்தான். அவரது கமர்ஷியல் ஆடியன்ஸ்க்கு மத்தியில், நமது சில கருத்துரீதியிலான யோசனைகளை அவர்களுக்குள் உருவாக்க முடியும். அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும். நாம் மிகத் தூய்மையாக ஒரு படத்தை முன்வைக்கிறபொழுது, நம் படத்திற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையானது குறைவாக இருக்கும். அப்படியாக ரஞ்சித்தின் நோக்கமுமே கூட, பெரும்பாலும் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நமக்கு அதிகம். அந்தப் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வதில் எவ்விதமான உள்நோக்கமும் கிடையாது. ஆக, பார்வையாளர்களை, நம் படத்திற்கு பார்க்க அழைத்து வருவதிலிருந்து சின்ன அசைவையாவது அவர்களுக்குள் உருவாக்க வேண்டும் என்பதுதான், மிக முக்கியமான விஷயம். அப்படியெனில், ரொம்ப ப்யூரான முயற்சிகளை ரஜினி சாரை வைத்துச் செய்யமுடியாது என்றே சொல்ல வருகிறேன். அந்த வேறுபாடுதான், அதில் பயன்படுத்தக்கூடிய கருவிகளும், ஊடகங்களும். அப்படி யோசித்தால்தான், அதில் பயன்படுத்தப்படுகிற ஏரியல் ஷாட், க்ளோஸ் அப், ஸ்லோமோஷன் அதிகமாக இருக்கிறது? என்ற கேள்விகளெல்லாம் வருகின்றன. இந்தப் படம் இது இரண்டும் மிக்ஸான வடிவம் என்றே சொல்கிறேன்.
’காலா’ படத்தைப் பொறுத்தவரை, ஐம்பது சதவீதம் கமர்ஷியல் மீதி ஐம்பது சதவீதம் யதார்த்தம் எனக் கொண்டால், மெட்ராஸ் எழுபத்தைந்து சதவீதம் யதார்த்தம் மீதி இருபத்தைந்து சதவீதம் கமர்ஷியல் தன்மைகளோடு செயல்பட்டிருப்போம். இந்த இரு எல்லைகளுக்கிருந்துதான் நாம் இயங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றே சொல்லவருகிறேன்.
ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும், இயக்குனருக்கும் இதுதான் என்னுடைய களம், இதில் நான் இறங்கிவிளையாடுவேன், ஏனெனில் இந்தக் களத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், இதுபோன்ற ஒரு கதைக்களத்தில்தான் நான் வேலைசெய்யவும் ஆசைப்படுகிறேன் என்ற எண்ணமிருக்கும்.
அதுபோல எனக்கு ஏற்ற களம் என்னவென்றால், நான் மிகவும் யதார்த்தமான கதைகளையும், அதற்கேற்ற கதைக்களத்தையும் தேடுகிறேன். மீண்டும் யதார்த்தத்தை ரீ-கிரியேட் செய்ய விரும்புகிறேன், நான் அதுபோன்ற வேலைகளை இயல்பாக நேசிப்பதால், அக்காட்சிகளைப் படம்பிடிப்பதும் எனக்கு மிக எளிதாகவே நிகழ்கிறது. ஆனால் அதேசமயம் எனக்கு மிகவும் Designed-ஆக ஒளிப்பதிவு செய்வதிலும் ஆர்வம். Highly-ஆன Design. கோவில் வாசலில் பார்த்தீர்களேயானால், கொடிப்பெண்கள், அதையொட்டிப் போகிற ஒரு கொடி, கொடிப்பெண்ணை நிறுவுவதோடு சேர்ந்து ஒரு டிசைனை உருவாக்கியிருப்பார்கள். நம் இந்திய நாட்டில் நிறைய water அடிப்படையிலான டிசைன் என்று சொல்வார்கள். அந்தத் தண்ணீரின் ஓட்டத்திற்கு ஏற்றபடி, அந்த டிசைன் செய்திருப்பார்கள். ஆக, இதுபோல ஒரு கலையை டிசைனாக மாற்றுவதென்பதுதான், உச்சமான வேலைப்பாடாக நான் கருதுகிறேன். அப்பொழுது அந்த உச்சத்தை நோக்கி நகர்வதென்பது என்னுடைய பயணத்தில் இருக்கக்கூடிய நோக்கம்.
அதேபோல, எனக்குக் கமர்ஷியல் சினிமாவிற்குள் ஒரு ஒளிப்பதிவாளராக, ஒரு இயக்குனரின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதற்கு, அந்த இயக்குனரின் நோக்கத்தை எவ்வளவு தூரம் சிதைக்காமல் பிரதிபலிக்க வேண்டும் என்பதும் என் இலக்காக இருக்கிறது. எனவே, எனக்கு மிகவும் Designed-ஆன படங்கள் உருவாக்குவதில் பெரிய சிரமங்கள் இருக்கிறது. மேலும், கருத்தியல் ரீதியான உடன்பாடுகள் சார்ந்த பிரச்சினைகளும் நிறைய இருக்கின்றன. அதிகக் கமர்ஷியலான ஒருசில விஷயங்களுக்குள் நான் உள்ளே செல்வதிலும் சில தயக்கங்கள் இருக்கின்றன. அதைத்தவிர்த்துவிட்டு, யதார்த்தத்தை ஒத்த, மிகவும் இயற்கையான அணுகுமுறை கொண்ட காட்சியமைப்பில், அல்லது இயற்கையான வடிவமைப்பைக் கொண்டிருக்கிற கதைகளைக் காட்சிகளாக உருவாக்குவதென்பது எனக்கு மிகவும் மகிழ்வூட்டக்கூடிய ஒன்று.
அப்பொழுது, என்னுடைய call என்னவாகயிருக்கிறது? என்றால், மிகவும் வாழ்வியலையும், வாழ்வியலைப் பிரதிபலிக்கக்கூடிய கதையம்சமும், அதை நேரடியான வடிவங்களாக உருவாக்கக்கூடிய ஆவணப்பதிவும்தான் எனக்கு இன்னும் அதிகமான மகிழ்ச்சியைத் தரக்கூடியது. எனவே நான், அம்மாதிரியான கதைகளைத் தேடித்தான் நகர்கிறேன்.