டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: காணக்கிடைக்காத விடுதலை ஒளி
- by யாழன்-ஆதி
- 10 March 2020
அடர்ந்த வனத்தில் பசியோடு அலைகின்ற சிங்கத்தைப் போல, சாதியக் கோட்பாடுகளால் இறுகக் கட்டப்பட்ட ஒரு சமூகத்தில் சாதியை ஒழித்து மனித மாண்பை வலியுறுத்தும் போராட்டத்தை இடையறாது நடத்தி தன் குடும்பம், படிப்பு, வாழ்க்கை அனைத்தையும் அர்ப்பணித்த ஒரு மாமனிதர் அம்பேத்கர்.
1928-ல் இந்தியாவின் சட்டவரைவியலுக்காக ஆங்கில அரசு அமைத்த சைமன் குழு காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்ட பிறகு இந்தியாவிலிருக்கும் அனைத்துத் தரப்பினையும் அழைத்துப் பேச இலண்டனில் வட்டமேசை மாநாட்டை 1930-ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 1931 ஜனவரி 19 வரை நடத்தியது இங்கிலாந்து அரசு. அந்த மாநாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அம்மாநாட்டில் ஆங்கில அரசால் அழைக்கப்பட்ட இந்து மகாசபையின் தலைவர் டாக்டர் மூஞ்சே, இந்து மிதவாதக் கட்சித்தலைவர்களான ரைட் ஆனரபில் சீனிவாச சாஸ்திரி, சர். தேஜ் பகதூர் சாப்ரூ, எம்.ஆர்.ஜெயகர், தாழ்த்தப்பட்டோர்களின் பிரதிநிதிகளாக அம்பேத்கர், ரெட்டமலை சீனிவாசன் மற்றும் இசுலாமியர்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பி.எச்.சி பட்டம் பெற்றவர் அம்பேத்கர் மட்டுமே. அவர் மூன்று கண்டங்களில் படித்தவர். அவருடைய படிப்பும் அறிவும் அவருக்கு மட்டுமே அவர் பயன்படுத்தியிருப்பாரே என்றால் அவர்தான் இந்தியாவின் முதல் செல்வந்தராகக் கூட அவருக்கு வாய்ப்பிருந்திருக்கும்.
ஆனால் யார் ஒருவர் தன்னுடைய திறமையையும் கல்வியையும் நேரத்தையும் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்னும் கருத்து அவருக்குள் இருந்ததால் அவர் தன்னுடைய அறிவை தன் மக்களுக்காக பயன்படுத்தினார். அவர் ஒருவரின் போராட்டமும் அறிவுசார்ந்த செயல்பாடுகளும்தான் இன்று கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்டவர்களை ஓரளவு தலைநிமிரச் செய்திருக்கின்றது. இந்தியாவின் அறிவுலகத்திற்கு அம்பேத்கர் ஒரு அடையாளமாக இருந்தார்.
வழக்கத்தைப் போலவே இந்தியாவில் அம்பேத்கரும் மிகத் தாமதமாகவே புரிந்துகொள்ளப்பட்டு வருகின்றார். காலத்தின் நீண்ட வற்புறுத்தலாலும் தேவையினாலும் அம்பேத்கரின் பணியும் அவரின் எழுத்தும் இன்றைய அறிவாளர்களால் அரசியல் இயக்கங்களால் தேடப்படுகின்றன. இந்தச் சூழலின் பின்புலத்தில்தான் அம்பேத்கர் திரைப்படத்தை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்பது இந்தியாவில் நிலவும் சாதிகளை ஒழிக்கும் வரலாறு. ‘விசாவுக்காக காத்திருத்தல்’ என்று அம்பேத்கரால் எழுதப்பட்ட கட்டுரையில் அவர் குழந்தைப்பருவத்தில் அடைந்த சாதிய ஒடுக்குமுறைதான் அவர் படித்து முடித்த பிறகும் தொடர்ந்தது. தன் பணியினை தன் வாழ்விலிருந்தே தருவித்துக் கொண்டவர் அவர்.
காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த கருத்தியல் ரீதியான வேறுபாடு அனைவரும் அறிந்ததே. காந்தியின் தேசமாகயிருக்கும் இங்கிருந்து அம்பேத்கர் என்னும் ஆளுமையின் வரலாற்றை சரியாக பதிவாக்குவார்களா என்னும் அய்யம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் இயக்குனர் ஜாபர் பட்டேல் அந்த அய்யத்தினை தன்னுடைய சிறந்த இயக்கத்தால் போக்கினார் என்பதுதான் உண்மை. ஃப்ரீ பிரஸ் ஜர்னலின் முன்னாள் ஆசிரியர் அரு சாது, அம்பேத்கரியல் ஆய்வாளர் ஒய்.டி. பாட்கே ஆகியோர் திரைக்கதை உருவாக்கத்தில் பங்காற்றியது கூட இந்தப் படத்தின் கூடுதல் பலமாகக் கருதப்பட்டது.
அம்பேத்கரின் நூற்றாண்டு நினைவாக (1891 – 1956) தேசிய திரைப்பட வளர்ச்சிகழகம் இத்திரைப்படத்தைத் தயாரித்தது. இப்படத்திற்காக 1991-ம் ஆண்டு மகாராஷ்டிர அரசு 7.75 கோடிகளை வழங்கியது. 1999-ல் ஆங்கிலத்தில் நேரிடையாக எடுக்கப்பட்ட இப்படம் ஆங்கிலத்திலும் 2000-ல் இந்தியிலும் வெளியிடப்பட்டது, பிற இந்திய மொழிகளிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 1999-ல் வெளிவந்த போது அப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. அவ்வாண்டின் சிறந்த நடிகராக மம்முட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆங்கிலத்தில் வந்த சிறந்த திரைப்படம் என்னும் விருதினைப் பெற்றது. படத்தில் கலை இயக்குனராகப் பணியாற்றிய நிதின் சந்திரகாந்த் தேசாய் சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருதினைப் பெற்றார்.
இத்தகைய படம் தமிழில் வருவதற்குப் பட்டபாடே ஒரு படமாக இருக்கும்போல. 2000-ல் இந்தியில் வந்த ‘அம்பேத்கர்’ திரைப்படம் 2010 டிசம்பரில்தான் தமிழில் வருகின்றது.
பத்தாண்டுகளுக்குப்பின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழில் வெளிவந்திருக்கின்றது. பகுத்தறிவு மேலோங்கிய மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் அம்பேத்கரைப் பற்றிய புரிதல் அவருடைய நூற்றாண்டுக்குப் பிறகுதான் அதிகரிக்கின்றது. அதற்குமுன்பு வரை தலித் இயக்கங்களின் அரசியலாக மட்டுமே அம்பேத்கர் இருந்தார். பெரியார் அம்பேத்கரை தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டதாக அறிவித்துக் கூட அவருக்குப் பின்வந்த திராவிட இயக்கத்தவர்கள் அதை மறைத்ததால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் புறக்கணிப்புக்கு அம்பேத்கர் ஆளானார். அதனால் தான் அம்பேத்கர் சிலை இருக்கும் இடம் சேரி என்னும் அடையாளம் கிடைத்திருக்கின்றது. இந்த அரசியல் நிலை கூட அம்பேத்கர் திரைப்படம் தாமதமாக வந்ததற்கான காரணமாக நாம் கருதலாம். எழுத்தாளர் வே.மதிமாறன் மற்றும் அவருடைய தோழர்கள் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வரவில்லையே என யோசித்து தொடங்கிய வேலைகள் இப்படம் வருவதற்கு ஆதார சுருதியாக இருந்திருக்கின்றன. சென்னையிலுள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் அவர்கள் நிகழ்த்திய உரையாடலின் விளைவாக அப்படம் யாரிடத்தில் இருந்தது என்பதை அறிய முடிந்தது.
விஸ்வாஸ் சுந்தர் என்னும் விநியோகஸ்தர் அம்பேத்கர் திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளார். ஆனால் படத்தை வாங்கிவந்த சுந்தர் அதனை வெளியே சொல்லாமலேயே கமுக்கமாக வைத்திருந்திருக்கின்றார். இதனால் பல தலித் இயக்கங்கள் படத்தை வெளியிடக் கோரி போராட்டத்தில் இறங்கின. டாக்டர் சேதுராமனின் கட்சிகூட படத்தை வெளியிட வேண்டிய தீர்மானம் நிறைவேற்றியது. இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியபோது படத்தின் மொழி மாற்றத்திற்காய் பத்து லட்சம் தருவதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி 2007ஆம் ஆண்டு மே 7ம் நாள் அறிவித்திருந்தார். படம் வெளியாகவில்லை காரணம் இன்னும் அதிகமான பணத்தை அபகரிக்க வேண்டும் என்னும் சுந்தரின் எண்ணம். படத்தை பல்வேறு தலித் தலைவர்களிடமும் விலைபேசியிருக்கின்றார். விலை படியாததால் அது அப்படியே கிடப்பில் போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2010 செப்டம்பரில் விஸ்வாஸ் சுந்தருக்கான மூன்றாண்டு ஒப்பந்த உரிமம் முடிகின்றது.
இந்நிலையில் சமூகநீதியில் அக்கறை கொண்ட வழக்கறிஞர் சு. சத்தியசந்திரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப் தர்மராவ். கே.கே.சசிதரன் ஆகியோர் விரைவில் படத்தைத் திரையிட தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திற்கு உத்தரவிட்டது.
படம் வெளியாவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்கள் மிகவும் பாராட்டுதலுக்குரியவை. இயக்குனர் எடிட்டர் லெனின் அவர்களின் பங்களிப்பும் அப்படியானதுதான்.
இப்படி எத்தனையோ பேரின் போராட்டங்களுக்குப் பிறகு படம் திரைக்கு டிசம்பர் 3-ம் நாள் வந்தது. ஆனால் திரைப்படக் குப்பைகளை எல்லாம் விளம்பரத்தினால் வெற்றி பெறவைக்கின்றவர்கள், ஆகச்சிறப்பாக எடுக்கப்பட்ட படத்தை எந்த மக்கள் பார்க்கவேண்டுமோ அம்மக்கள் பார்க்க முடியாத நேரங்களில்தான் திரையரங்குகளில் திரையிட்டனர். பெரும்பாலான திரையரங்குகளில் காலைக்காட்சியாகத்தான் படம் போடப்பட்டது. வேலைக்குச் செல்வோரால் படத்தைக் காணமுடியவில்லை.
அம்பேத்கர் படத்தின் தமிழ்ப் பதிப்பு அருமையாக வந்திருந்தது. பத்து வருடத்திற்கு முன்பான படம் என்னும் எண்ணத்தைப் போக்கி படம் புதிதாக இருந்தது. பெரியார் படம் என்பது அவரின் அரசியல் போராட்டங்களை முன்வைக்காமல் அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. ஆனால் அம்பேத்கர் படம் அவரின் அரசியலை, போராட்டத்தினை முன்வைத்தது. காந்திக்கு எதிரான கருத்துக்களை மிகத் தைரியமாக அவர் வாழ்ந்த காலத்திலேயே பேசியவர் அம்பேத்கர். அதை அப்படியே படத்தில் வைத்தது ஜாபர் பட்டேலின் மன உறுதி. எரவாட சிறை உண்ணாவிரதம் தலித்துகளின் வாழ்வுரிமையை அழிக்கக்கூடியது, ஆகையால் காந்தியின் உண்ணாவிரதம் தேவையற்றது என்னும் உணர்வினைப் பார்வையாளனுக்கு காட்சியின் மூலமாக கடத்தியிருக்கின்றது இப்படம். காந்திக்கு எதிரான வசனங்கள் கூர்மையானவையாக இருந்தன.
‘காந்திஜி, அடிக்கடி உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தைக் கையிலெடுக்காதீர்கள்’, ‘காந்தி எரிக்க வேண்டியது அவருக்குள் நிறைய இருக்கின்றது’ போன்ற வசனங்கள் இந்திய அரசியலின் இரண்டு துருவங்களாக அம்பேத்கரும் காந்தியும் இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.
தங்கள் வாழ்வின் வெளிச்சத்திற்கு வேரானவர்கள் யார் என்பது தெரியாமலே எந்தவிதமான சமூக அக்கறையும் இல்லாமல் வளர்ந்துகொண்டிருக்கும் தலைமுறைக்கு அம்பேத்கர் திரைப்படம் ஒரு பாடமாக அமைந்திருக்கின்றது. ஆனால் அப்படம் அவர்களைப் போய் சரியாகச் சேரவில்லை என்பதுதான் உண்மை.
தமிழக அரசு அம்பேத்கர் படத்திற்கு முழு வரி விலக்கு அளித்து அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் அப்படத்தினைப் பார்ப்பதற்கு வழிவகை செய்யவேண்டும். இல்லை என்றால் லெனின் சொல்வதைப் போல சமூக ஆர்வலர்கள் இப்படத்தை ஊர் ஊராகச் சென்று மக்களுக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டும்.
நன்றி:தீராநதி ஜனவரி 2011