ஓவிய நிகழ்வு
- by க்ருஷாங்கினி-–-நாகராஜன்
- 10 March 2020
20ஆம் நூற்றாண்டின் கலை நிகழ்வுகளில் ஓவியம், சிற்பம் என்பனவற்றில் நடந்த குறுக்கு வெட்டுத் தோற்றம்.
FAUVISM
வனவிலங்கு
1905-ல் பாரீசில் ஒரு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஓவியர்களில் DERAIN, MATISSE, VLAMINCK போன்றவர்களும் அடங்குவர். இந்த ஓவியங்கள் எதிர் எதிர் வர்ணங்கள் (மஞ்சள், சிவப்பு, பச்சை போன்றவை ஆங்கிலத்தில், இதை Contrast of Colors என்று குறிப்பிடுவர்) கலப்பின்றி நேரடியாக பயன்படுத்தப்பட்டு ஒளிர்ந்தன. விமர்சகர் ஒருவர் இவர்களின் படைப்புகளை கேளிசெய்யும் நோக்கில் விளக்கம் கொடுத்தார். ‘LES FAUVES’ என்பதற்கு ’காட்டு விலங்கு’ என்று பொருள் கொள்ளலாம். (அதாவது கட்டற்ற மிருகம்). ஆனால் அது பின்னால் அந்த இயக்கத்தினைக் குறிக்கும் சொல்லாக மாறியது. MATISSE என்னும் ஓவியர் இந்த இயக்கத்தின் தலைவராகக் கருதப்படுகிறார்.
கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்குமான பாலம்
DIE BRUCKE
EXPRESSIONIST என்று அழைக்கப்படும் உணர்வுப் படைப்பு ஓவியர்களில் சிலரால் DRESDEN என்னும் நகரத்தில் (ஜெர்மனி) 1905-ல் இவ்வியக்கம் தொடங்கப்பட்டது. ஆங்கிலத்தில் ‘THE BRIDGE’என்னும் பொருள் தரும் பெயருக்கு ஒப்ப இவ்வோவியர்கள் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பாலமாக தங்கள் படைப்புகள் இணைப்பதாகக் கண்டனர். கட்டமைப்பு இல்லாத குழுவாக இருந்த இவர்கள் எழுச்சி தரும் வண்ணங்களை உபயோகித்தனர். இது இவர்களுக்கு FAUVISTS இயக்கத்தால் ஏற்பட்ட தாக்கம் ஆகும். 1910-ல் பெர்லினுக்குக் குடிபெயர்ந்த இவ்வியக்கம் 1913-ல் ஜெர்மன் அரசால் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது.
கித்தான் வாகனத்தில் கலைஞனின் சவாரி
EXPRESSIONISM
1905-லிருந்து 1930-க்கு இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனியில் களம் கொண்டிருந்த கலை இயக்கம் இது. இவ்வகைக் கலைஞர்கள் வெளி உருத் தோற்றத்துக்கு முக்கியத்துவம் தராமல் மன உள உணர்வுகளுக்கு அதிக இடம் கொடுத்து அவற்றைப் படைப்பாக்கினார்கள். இவ்வகைப் படைப்புகள் பெரும்பாலும் தனிமனித உணர்வுகளுக்கு இடம் அளிப்பதாகவும், உணர்வுப் பூர்வமான அணுகுமுறை கொண்டதாகவும், அமைந்திருந்தன. வீரியம் மிகுந்த தூரிகைக் கீற்றுகளும் கலப்பில்லாத ஒளிர்விடும் தூய வண்ணங்கள் கொண்டதாகவும் ஓவியங்கள் தீட்டப்பட்டன. இயற்கையின் வண்ண அமைப்பை இவர்கள் பின்பற்றவில்லை. இவர்கள் முப்பரிமாண அணுகுமுறையில் இருந்து விலகினார்கள்.
வான்கோ (VANGOGH) இவ்வகைக் கலைஞர்கள் பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். இவ்வியக்கத்தில் மிளிர்ந்தவர்களில் BACKMAN, KOKOSCHKA, MUNCH, ROUALT போன்ற ஓவியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
FUTURISM
இத்தாலியில் உள்ள மிலன் நகரில் சில அறிவுஜீவிகளால் 1909-இல் தொடங்கப்பட்டது இவ்வியக்கம். Fllippo Marinelt: என்ற இத்தாலியக் கவிஞர் இதற்குக் காரணமாக இருந்தார். இவர்கள் இத்தாலியைக் கடந்த காலக் கலாசாரத்திலிருந்து விடுவித்து நிகழ்காலத்துக்குக் கொணரவிரும்பினர். நவீன சாதனங்களாகிய இயந்திரங்கள், போக்குவரத்து தகவல் பரிமாற்றம் ஆகியவை இவர்களை மிகவும் ஈர்த்தன. எனவே தங்களது சிற்பங்களிலும் ஓவியங்களிலும் வீரியம் மிகுந்த கோடுகளையும் வளைந்த உருவங்களையும் உபயோகித்து வேகம் மிக்க ஒரு உணர்வை உண்டாக்க முயன்றனர். இந்த இயக்கம் சார்ந்தவரின் முக்கிய நிலைப்பாடு வேகத்தையும், அசைவுகளையும், சலனங்களையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. ஓவியத்தில் ஒரு உருவத்தை அடுத்தடுத்து வரைந்து (சற்றே இடம் மாற்றி, பெண் மாடிப்படியில் இறங்கி வருவது, நாயை சங்கிலியில் கட்டி அழைத்துச்செல்லல், அப்போது அந்த சங்கிலியின் அசைவு. இவை உதாரணங்கள்) இதை சாத்தியப்படுத்தினார்கள். இந்த உத்தி ஒரு புதிய பரிமாணத்தைத் தோற்றுவித்தது.
BARBARA BLOOM
இந்த ஓவியருக்கு பெண்ணிய ஓவியராக அங்கீகாரம் கிடைத்ததே தற்செயலான நிகழ்வுதான் எனக் கூறலாம். எப்போதும் இவரது படைப்புகல் பூடகத்தன்மை கொண்டவையாகவே இருக்கும். ஏனெனில் பெண்ணியம் பேசும் படைப்புக்களில் தீவிரமாக அழுத்தத்துடன் கூடிய போர்க்குணம் கொண்ட அணுகுமுறை தேவை இல்லை என்பது இவர் கருத்து. ‘THE REIGN OF NORCISSIM’ என்பது இவரது ஒரு படத்தின் தலைப்பு. (1989) தமிழில் இதை ‘சுய உடலை மோகித்தலின் ஆட்சி’ என்று சொல்லலாம்.
இதில் ஓவியர் ஒரு கண்ணாடியின் முன் நிர்வாணமாக நிற்கிறார். அதில் தெரியும் தன் பிம்பத்தில் லயித்து, மோகித்து எல்லாம் மறந்த நிலையில் உள்ளார். அவரைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருள்களிலும் ஏதாவது ஒரு வகையில் அவர் பிரதிபலிக்கும் விதமாக ஓவியம் உள்ளது. இதில் ஒருவித ஏளனமும் உள்ளது. இவருடைய உருவத்தின் இருபுறமும் கிரேக்க வடிவத் தூண்கள். அதன் மேல் இவரது முகம் சிலை ரூபமாக, நகை அலங்காரங்களுடன் காணப்படுகிறது. விரவியுள்ள மேசை.
நாற்காலிகள் எல்லாம் 16ஆம் லூயி மன்னன் உபயோகித்தது போன்றவை. மேஜையின் மீது விரிப்பு. அதன்மீது ஓவியரின் கையெழுத்து இடப்பட்ட காகிதங்கள், அவரது ஜாதக குறிப்புக் காகிதம், பல்லின் X-Ray படம் போன்றவை பரப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள சாக்லேட் பெட்டியின் மீதும் கூட இவரது முகத்தின் பக்கவாட்டுத்தோற்றம் கருமை நிறத்தில் உளது. ஓவியரின் இந்தப் படைப்பின் மூலம் இவரது எண்ண வெளிப்பாடு நன்கு விளங்குகிறது.
BARBARA KRUGES
இவரும் தனது பெண்ணிய எண்ணங்களை எழுத்து வடிவம், புகைப்படம், அச்சுகலை (TYPOGRAPHY) இவை கலந்த உத்தி கொண்டு வெளிக்கொணர்கிறார். இவை ‘நிறுவுதல்’ உத்தியில் (INSTALATION) அமைந்துள்ளன.
பெரிய அரங்கில் மேல் கூரை, சுற்றுச் சுவர், தரை என்று எங்கும் பூதாகரமான, கண்களைப் பறிக்கும் வண்ணங்கள் கொண்டு காண்பவர் அதனுள் புதையும்படி தன் படைப்புகளை ஓவியர் அமைக்கிறார். ரஷ்ய புரட்சியின் போது புரட்சிக்காரர்கள் பயன்படுத்திய AGITROP எனும் சுவரொட்டி உத்தியால் கவரப்பட்டு அதையே தனது வெளிப்பாட்டுத் தளமாகக் கொண்டுள்ளார் இவர்.
IDA APPLEBROG
பொதுவாக ‘இடா’வின் படைப்புக்கரு பெரும்பாலும் பெண் நோயாளிகளின் மீது ஆண் மருத்துவர்களின் அக்கறையின்மை பற்றியதாக இருக்கும். மேலும் மருத்துவத்துறையில் ஆணாதிக்கம் என்பது பற்றியும் பேசும். ‘EMITIC FIELDS’ என்னும் தலைப்புடைய ஓவியம் இவரால் 1989-ல் தீட்டப்பட்டது. ’அருவறுப்பால் வாந்தி வரவழைக்கும் தளம்’ எனப் பொருள் கொள்ளலாம்.
ஓவியத் தளம் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். ஒரு பகுதி பெண் நோயாளிகளின் பல நிலைகளை உருவகப்படுத்தும். மற்றொரு பகுதியில் சிவப்பு பின்புலத்தில் ‘நீ நோயாளி, நான் முழுமனிதன்’ என்னும் வாக்கியம் திரும்பத் திரும்ப எழுதப்பட்டிருக்கும். ஓவியர் எப்போதும் கூறுவது, பெண் நோயாளியால் தன்னை ஒரு முழுமையானவன் என்று நிரூபிக்க முடிவதில்லை. அன்றியும் நோயையும் தாண்டி ஒரு பெண் முழுமை பெற்றவள் என்று ஆண் மருத்துவர் கருதுவதில்லை. தாங்கள் மட்டுமே முழுமையானவர் என்ற கருத்தோடும் நோயாளியின் நோய்ப்பகுதி மட்டுமே தங்களது எல்லை என்பதான இயந்திரத்தன்மை உடையவர்களாக ஆண்கள் உள்ளனர் என்பதுதான்.
நன்றி: கணையாழி, பிப்ரவரி 2000