இளம் தலைமுறையினர்களுக்கு எல்லையில்லை, ஏனெனில் அவர்கள் வாழவிரும்புகிறார்கள்.
- by தமிழில்-தீஷா
- 03 June 2020
பதினெட்டு வயதில், சமீரா மக்மல்பஃப் (புகழ்பெற்ற ஈரானியத் திரைப்பட இயக்குனர் மொஹ்ஸீன் மக்மல்பஃபின் மகள்) தொண்ணூறுகளில் மிகச்சிறந்த திரைப்பட அறிமுகங்களில் ஒன்றான ”ஆப்பிள்” என்ற திரைப்படத்தை இயக்கியவர், இரண்டு இளம் சிறுமிகள் தனது பெற்றோர்களாலயே வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் கண்ணில் படுகிற அயல் மனிதர்களுடன் என்னவிதமான உரையாடலை முன்னெடுக்கிறார்கள் என்பதையும் வைத்து கிட்டத்தட்ட டாக்யூ ட்ராமா போன்று எடுக்கப்பட்ட படமே சமீரா மக்மல்பஃபின் முதல் படமான “ஆப்பிள்”.
இந்தக் கதை யாருடையதாக இருக்கிறதோ, அதற்குச் சம்பந்தப்பட்ட மனிதர்களையே நடிக்கவைத்து, அதன்மூலம் அம்மக்கள் காலங்காலமாகக் கடைப்பிடித்து வருகிற மத அடிப்படைவாத நம்பிக்கைகளின் ஆபத்துகள், பெண்கள் மீது செலுத்தப்படுகிற அடக்குமுறை, குடும்பத்திற்கும் அப்பெண்களுக்குமிடையேயான பிணைப்புகள் என இவையனைத்தையும் ஆவணப்படத்திற்கும் புனைகதைக்கும் இடையிலான ஒரு மெல்லிய கோட்டின் தடத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு ஒரு ஒத்திசைவான நியோரியலிச ஆய்வை மேற்கொண்டுள்ளார் இந்த இளம் திரைப்படப் படைப்பாளி சமீரா.
தனது இரண்டாவது திரைப்படமான ‘பிளாக்போர்ட்ஸ்(Blackboards)’ 2000-ஆவது ஆண்டு நடந்த கான் திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி பரிசு வென்றிருக்கிறது, சமீரா மத்திய கிழக்கு உலகில் நிலவி வரும் பற்றாக்குறை மற்றும் புறக்கணிப்பு பற்றிய தனது கதைக்களன்களுடன் கவிதைப்பூர்வமான காட்சிமொழியோடும், ஆய்வைத் தொடர்ந்து செய்துவருகிறார்.
எங்கெங்கெல்லாம் அடக்குமுறைகளும் துன்புறுத்தல்களும் இருக்கின்றனவோ, அங்கிருந்துதான் உண்மையான கலை பிறக்கிறது. தன் நாட்டில் நடக்கிற பிரச்சினைகளையும், மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களையும் எல்லோருக்கும் கொண்டுசெல்ல சினிமாவைக் காட்டிலும் மிகச்சிறந்த உபகரணம் வேறு இல்லை என்பதை உணர்ந்துதான் சமீரா மக்மல்பஃப் போன்றோர் திரைப்படங்கள் எடுத்தனர். குழந்தைகளுக்கும், கல்வியறிவற்றர்களுக்கும் எண்ணையும் எழுத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டும், அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, ஒரு கரும்பலகையை முதுகில் சுமந்தபடி மலை முகடுகளில் அலைந்து திரியும் கதாநாயகனும், அவனிடம் எதிர்ப்படும் மக்களிடையே நடக்கிற சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் இதன் கதைக்களம்.
திரைப்படம் துவங்கியதும், படத்தின் பெயரான ‘பிளாக்போர்டுகள்’ என்பது எப்படித் திரையில் தோன்றுகிறது என்பதை, படத்தின் துவக்கக் காட்சிகளில் காண்கிறோம்: பல மனிதர்கள் இணைந்து ஒரு குழுவாக, தனது முதுகில் கரும்பலகைகளைக் கட்டிக்கொண்டு மலையேற்றமான பாதையில் முன்னோக்கிச் செல்கின்றனர். கல்வியின் எடையைச் சுமையாய் சுமந்துகொண்டிருப்பது போல, அவர்கள் அந்த எழுத்துப் பலகைகளை முதுகில் சுமந்தவாறு, குர்திஷ் மாணவர்களைத் தேடிச் செல்கின்றனர். ஈரான் மற்றும் ஈராக் பகுதிகளுக்கிடையில் கல்வியற்றவர்களாக இருக்கிற அம்மக்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கனவுடன் அந்தத் தூசி நிறைந்த பாதயில் ஆசிரியர் குழு பயணிக்கிறது. பயணத்தின் பாதையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் பிரிந்து தனக்கான மாணவர்களைத் தேடிச்செல்கின்றனர். ஆகாய விமானங்களின் சப்தங்கள் கேட்டாலே, மேலேயிருந்து எப்போது குண்டுமழை பொழியுமோ என்ற பயத்துடனே அம்மக்களும், ஆசிரியர்களும் தன் பாதையில் செல்கின்றனர். குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து அதனால் தான் கற்ற கல்விக்குப் பயன் தேடிக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலோடு செல்கிற ஆசிரியர் அடைந்த பயன் என்ன? என்பதே மீதிக்கதை.
தொழில்முறை நடிகர்கள் அல்லாதவரைத் தன் படங்களில் பயன்படுத்துவது, போரின் பேரழிவு தரும் பாதிப்புகள் மற்றும் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான எல்லைகள், தேசிய அரசுகள் குறித்தும் சமீரா மக்மல்பஃபுடன் அந்தோனி காஃப்மேன் நிகழ்த்திய உரையாடல்:
நீங்கள் பெரும்பாலும், உங்கள் திரைப்படங்களில் தொழில்முறையற்ற நடிகர்களைப் பயன்படுத்துகிறீர்கள். சாதாரண மனிதர்கள் போன்று தோன்றுகிறவர்கள்தான் உங்கள் படங்களில் நடிக்கிறார்கள். அத்தகைய மனிதர்களை எப்படி அடையாளங்கண்டு பிடிக்கிறீர்கள். மற்றும் அவர்களுடன் படப்பிடிப்பில் வேலை செய்கிற அனுபவம் எப்படியிருந்தது?
சமீரா: படத்தில் ஒரு தொழில்முறை நடிகை மட்டுமே இருக்கிறார். நானும் ஆரம்பத்தில், ஈரானின் மிகவும் அனுபவம் வாய்ந்த தொழில்முறை நடிகர்களில் ஒருவரைத்தான் படப்பிடிப்பிற்காக அழைத்துச்சென்றேன். ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராகத் தோன்றுகிறார், மற்றவர்களிலிருந்து தனித்துத் தெரிகிறார், மற்றவர்களோடு ஒட்டாமல் சற்று மிகைப்படுத்தப்பட்டவர் போலப் பட்டது. எனவே, அவர் வெளியேறினார். ஒன்று அல்லது இரண்டு பேரைத் தவிர, படத்தில் நடித்த மற்ற அனைவருமே உள்ளூர் மக்கள்தான், மேலும் அவர்கள் குர்தீஷ் மொழி பேசினார்கள், ஆனால் அதேவேளையில் அவர்கள் பாரசீக (பெர்சியன்) மொழியையும் புரிந்துகொள்கிறார்கள், எனவே, அவர்களுடன் நான் பாரசீக மொழியிலேயே உரையாட முடியும், என் கருத்தை அந்த மொழியிலேயே சொல்லிப் புரியவைக்க முடியும், மேலும், எனது உள்ளூர் உதவியாளரிடமும் இதுகுறித்துச் சரிபார்த்துக்கொள்ள முயன்றேன். சிறிது நேரத்திற்குப் பிறகு, இதை நான் பயன்படுத்திக்கொண்டேன், ஏனென்றால், இது பாரசீக மொழியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. இது ஒரே நேரத்தில் கடினமாகவும் எளிதாகவும் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், அம்மக்களுக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாத காரணத்தினால், இது கடினமாக இருந்தது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்பொழுது, அம்மக்களின் சில மத நடைமுறைச் சடங்குகளுக்காக விடுமுறை எடுத்துக்கொள்ள அவர்கள் விரும்பினர், ஆனால் நான் அதற்கு இசைந்துகொடுக்கவில்லை, இல்லை, அது சாத்தியமில்லை என்று நான் அவர்களிடம் சொல்லிவிட்டேன். அதே நேரத்தில் இது மிகவும் எளிதானதும் கூட, ஏனெனில் இந்த நடைமுறை அவ்வளவு சிக்கலான செயல்முறை அல்ல. அம்மக்களின் முகங்களில் அந்த நிலப்பரப்பின் அறிகுறிகள் இருந்ததால் இந்தக் கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்தேன்; உங்கள் கதாபாத்திரங்களை நீங்கள் விரும்பினால், அவர்கள் அதை உணரமுடியும். நீங்கள் அதை உணரும்பொழுது, அதை இயக்குவதும் எளிது. இதுவொரு சவாலாகத்தான் இருந்தது., ஆனால் சாத்தியமற்றது அல்ல.
உரையாடலை எவ்வாறு எழுதினீர்கள்?
நீங்கள் சிறுவர்களை எங்கே கண்டுபிடித்தீர்கள்? அவர்கள் உண்மையிலேயே நாடுகளுக்கிடையில் பொருட்களைக் கடத்துகிறார்களா?
சமீரா: ஆம், நான் அவர்கள் அனைவரையுமே ஒரே கிராமத்திற்குள்ளிருந்துதான் தேர்ந்தெடுத்தேன். அது அவர்களின் உண்மையான வாழ்க்கைமுறை. கடத்தல் அவர்கள் விஷயத்தில் உண்மையானது, தப்பியோடுதல், வறுமை, அறியாமை இதெல்லாமே அவர்கள் வாழ்க்கையின் உண்மை நிலைகள். ஆனால், நான் அதைக் காட்சிப்படுத்திய விதம், படம்பிடித்த விதம், அவர்களது வாழ்க்கையை வெளிப்படுத்திய விதம், யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் உள்ளது. இது நிறைய உருவகங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அதே நேரத்தில், இதில் நான் யதார்த்தத்தைப் பற்றித்தான் பேசுகிறேன்.
படத்தில் உருவகத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான உறவைப் பற்றிப் பேசமுடியுமா?
சமீரா: திரைப்படத்தின் முதல் பிம்பம் மிகவும் சர்ரியல் தன்மையுடன் துவங்குகிறது, ஆனால் நீங்கள் படத்திற்குள் செல்லும்பொழுது, தப்பியோடுதல் எனும் யதார்த்தத்தை நீங்கள் உணரமுடியும். மேலும் நான் இந்தப் பிம்பத்தை மிகவும் நேசிக்கிறேன், மேலும் இந்த பிம்பமே தனக்குள் வெவ்வேறு விதமான அர்த்தங்களையும் கொண்டுசெல்ல முடியும் என்று நினைக்கிறேன். இது சமூக, தத்துவ மற்றும் கவிதாபூர்வமான பொருளையும் வெளிப்படுத்தமுடியும் – இன்னும் பல உருவகங்கள் உள்ளன, இன்னும், அதில் நீங்கள் அவற்றின் உண்மை நிலைக்குச் செல்லலாம்.
எனது அடுத்த படத்தின் கதைக்களத்தினைத் தேடிக்கொண்டிருந்தபொழுது, இந்தப் படத்திற்கான யோசனை என் தந்தையின் மனதிலிருந்து வந்தது. அவர் எழுதியவற்றிலிருந்து, என்னிடம் மூன்று அல்லது நான்கு பக்கங்களைக் கொடுத்தார், பின்னர் அது குறித்து யோசிக்க வேண்டிய நேரம் வந்தது. ஆனால், அவ்வளவு எளிதாக அதைக்குறித்து கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நான் இங்கே கான்ஸில் உட்கார்ந்துகொண்டு, குர்திஸ்தானில் வாழும் மக்களைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்? எனவே, நான் அந்த இடத்திற்கே சென்று, அந்தக் கதையோடும், அங்கு வாழும் மக்களோடும் ஈடுபட வேண்டியிருந்தது. எனவே, அங்குதான் நான் படத்தில் நடிப்பதற்கான நடிகர்களைத் தேர்ந்தெடுத்தேன், படப்பிடிப்பிற்கான இடங்களையும் கண்டுபிடித்தேன், அதே நேரத்தில் நிலைமையின் யதார்த்தத்தையும் உள்ளேவர அனுமதித்தேன். நான் இந்தக் கதையைக் கொல்ல விரும்பவில்லை, உயிரற்ற விஷயமாக அதைக் கேமராவின் முன்னால் படம்பிடிக்கவும் விரும்பவில்லை. யதார்த்தத்தைக் கற்பனைக்குள் வர அனுமதித்தேன். உருவகங்கள் கலைஞனின் கற்பனையிலிருந்தும், ஒருவருக்கொருவர் அன்பை உருவாக்கும் வாழ்க்கையின் யதார்த்தத்திலிருந்தும் பிறக்கின்றன என்று நம்புகிறேன்.
உதாரணத்திற்கு: நூற்றுக்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த ஆண்கள் தங்கள் நாட்டிற்குச் செல்ல விரும்புகிறார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். இது கற்பனை மற்றும் உண்மை. இது உண்மைதான், ஏனென்றால், சில முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இறப்பதற்காகத் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். இது உண்மையானது. ஆனால், வயதானவர்களாக இருப்பது கற்பனைதான். அல்லது அதில் ஒருவர் மட்டும் பெண்ணாக இருப்பது கற்பனை. அல்லது இந்தக் கரும்பலகைகளைச் சுமந்துசெல்வது யதார்த்தம் மற்றும் கற்பனையின் கலவையாகும். ஏனென்றால், இது சாத்தியம், நீங்கள் அகதியாக இருந்தாலோ, நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தாலோ, உங்கள் கரும்பலகைகளை முதுகில் சுமந்தபடி மாணவர்களைத் தேடுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்? அவர்கள் தெருவில் அலைகிற வியாபாரிகள் போல, ”வாருங்கள், வந்து ஏதாவது கற்றுக்கொள்ள முயற்சியுங்கள்” என்று கூப்பாடு போடுவார்கள், இத்தகைய சூழ்நிலையில் எல்லோரும் ஏழைகள்தான், எனவே யாரும் எதையும் கற்றுக்கொள்ள முன்வரமாட்டார்கள். இது கற்பனை, ஆனால் இது உண்மையாகவும் இருக்கக்கூடும். அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ள எந்தக் குழந்தைகளையும் ஆசிரியர் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஏன்?
சமீரா: நான் ஒரு திரைப்படத்தை உருவாக்கும்பொழுது, நான் ஒரு அறிக்கையை வெளியிட முயற்சிக்கவில்லை; நான் ஒரு கேள்வியைப் பற்றி நினைக்கிறேன், அது ஏன் என்று கண்டுபிடிக்க அங்கு செல்கிறேன். இந்தச் சூழ்நிலையில், இது போரின் மோசமான பின்விளைவுகள். இந்தப் புதிய தலைமுறையினர் அதனால் பாதிக்கப்படுகின்றனர், பழைய அதாவது முந்தைய தலைமுறையினர் இன்னும் அதனால் அவதிப்பட்டு வருகின்றனர், ஆனால், இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுத்தர தலைமுறையினர், கடந்தகால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கற்பிக்க முயற்சிக்கின்றனர், ஆனால் அது சாத்தியமற்றது, எனவே அவர்களும் போரின் விளைவுகளை அனுபவிக்கின்றனர். ஏன்? ஏனெனில் அவர்களுக்குக் கற்றுக்கொள்ள நேரமில்லை. குழந்தைகள் தன் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள, வாழ்வாதாரத்தைப் பிடித்துக்கொள்ள, ஒவ்வொரு நாளும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பொருட்களைக் கடத்த வேண்டும். அவர்கள் உயிருடன் இருக்க மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை கல்வி என்பது பயனற்றது என்று அவர்கள் உணர்கிறார்கள். வயதானவர்களுக்கோ, தான் கற்க வேண்டிய காலம் என்பது முடிந்துவிட்டது, இனிமேல் படித்து என்னவாகிப்போகிறது! என்று நினைக்கிறார்கள். எனவே, அந்த வயதானவர்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று, தங்கள் சொந்த மண்ணில் இறப்பதையே விரும்புகிறார்கள். ஆதலால், அவர்களுக்குக் கல்வியும் பயனற்றதாகவே தெரிகிறது.
படம் நிறைய எல்லைகளைக் கையாள்கிறது. மிக வெளிப்படையாக ஈரானுக்கும், ஈராக்கிற்கும் இடையிலான எல்லை, ஆனால் குர்துகள் குறிப்பிட்ட எல்லைகள் இல்லாத மக்கள். எல்லைகள் குறித்த உங்கள் அணுகுமுறை என்ன?
சமீரா: இதைப் பற்றி நான் வெளிப்படுத்த விரும்பியதை, படத்திலேயே வெளிப்படுத்தியிருப்பதாக நினைக்கிறேன். அந்த மக்களின் நிலைமை மிகவும் கடினமானது. அவர்கள் அகதிகள், ஆனால் அவர்களும் சுதந்திரமானவர்கள். இந்தப் படத்தின் இயக்குனராக, அந்தக் கதாபாத்திரங்களுக்கு எந்த வரம்புகளையும், அவர்களுக்கு எந்த எல்லைகளையும் நிர்ணயிக்கவில்லை. இளம் தலைமுறையினர்களுக்கு எல்லையில்லை, ஏனெனில் அவர்கள் வாழவிரும்புகிறார்கள். அவர்கள் மீன்களின் பெரிய பள்ளி போன்றவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது; அவர்கள் ஒரு பெரிய கடலில் வாழ்கிறார்கள், அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள், ஆனால் இறக்கும் நேரம் வரும்பொழுது, அவர்கள் திடீரென்று தனது பிறந்த இடத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள். எனக்கு எல்லைகளில் நம்பிக்கையில்லை. அவை வேடிக்கையானவை. இருப்பினும் இது வேதனையானது, ஏனெனில் இந்த தேசியவாதத்தை நீங்கள் உணர்கிறீர்கள்.
படத்தின் படப்பிடிப்பை முடிக்க எவ்வளவு காலம் செலவிட்டீர்கள்?
சமீரா: மூன்று மாதங்கள். ஒரு மாதம் ஆராய்ச்சி, இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு மற்றும் ஒரு மாதம் படத்தொகுப்பு செய்வதற்காக. படத்தொகுப்பைப் பொறுத்தவரை, என் தந்தைதான் முதலில் படத்தொகுப்பு செய்தார். ஆனால், அவர் எனது எடிட்டிங் மூலம் செல்லவேண்டியிருந்தது. ஆனால், பின்னர் கிரியேட்டிவான எடிட்டிங்கில், நிச்சயமாக, அவர் சில மாற்றங்களைச் செய்தார். பின்னர் எங்களுக்குள் வெவ்வேறு கருத்துகள் இருந்தன. நாங்கள் இந்தக் கருத்துமுரண்பாட்டில் சமரசத்திற்கு வரவில்லையெனில், எனது யோசனையே முதன்மையாகக்கொண்டு சென்றோம். உதாரணத்திற்கு, சில உரையாடல்கள் அல்லது காட்சிகளை அவர் விரும்பவில்லை, ஆனால் நான் அவற்றை நம்பினேன். அவை என் இதயத்திலிருந்து வந்தவை. நான் அதை வைக்கவில்லை என்றால், மொத்தப் படத்திலும் ஏதோவொன்று குறைந்தது போலத்தோன்றும்.
உங்கள் தந்தையுடனான உங்கள் தொழில்சார்ந்த பணியின் உறவுநிலை என்பது சரியாக என்ன?
சமீரா: ஒரு தயாரிப்பாளராக, நிச்சயமாக, அவர் எனக்குப் பணம் கொடுத்து உதவியதால்தான், நான் படத்தை எடுக்க முடிந்தது. பின்னர், அவர் எனக்குக் கதை சார்ந்த பல யோசனைகளையும் தருவார், நான் அவற்றிலிருந்து தேவையானவற்றைத் தேர்வு செய்வேன். பின்னர், நான் எனது சொந்தப் பாணியில் திரைப்படத்தை உருவாக்கினேன். சினிமாவில் இருப்பதுபோல், இதுவொரு கலவையாகும். இது வெவ்வேறு ஆற்றல்களைக் கொண்ட கலை.
சமீரா மக்மல்பஃப் பேட்டி
அந்தோனி காஃப்மேன்
தமிழில்: தீஷா
நன்றி:Indiewire