டைட்டன் - சமூகக் கட்டமைப்பிற்கு அப்பால் மனிதநேயம் இருக்கிறதா?
- by அகிலன்-லோகநாதன்
- 29 November 2021
-அகிலன் லோகநாதன்
2021 ற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படும் "பால்ம் டி'ஓர்" என்ற விருதை 'டைட்டன்'-திரைப்படத்திற்காக இயக்குநர் ஜூலியா டுகோர்னாவ்(Julia Ducournau) பெற்றுள்ளார். அலெக்ஸியாவாக அகதே ரூசெல் நடித்திருக்கிறார். துல்லியமான முக பாவனைகள் அவளுடைய கோபம் வன்மம் பயம் அன்பு யாவற்றையும் வெளிப்படுத்துகிறது. வின்சென்ட் லிண்டன் ஆக வின்ஸென்ட் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் உடல்- திகில்( Body Horror) என்ற துணை வகைப்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மனித உடல்களை மையப்படுத்தி மிக கொடூரமான மற்றும் ஆபாசம் நிறைந்த திரைப்படங்களாக விமர்சிக்க பட்ட நிலையில் அதனுடைய தாக்கம் மக்களை கவர்ந்துள்ளது. மனித உடல்களின் வழியாக சமூக விசாரணை செய்வதும் சமூகத்தின் எதிர்மறையான மனநிலையை பிரதிபலிப்பதும் இதன் அடிப்படையாக இருக்கின்றன. மன பிறழ்வுகள், மன சிதைவு போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகளை உடல் வழியாக உணர இயலும்.
இயக்குனர் டேவிட் லின்ச் 1978 ஆம் ஆண்டு இயக்கிய 'EraserHead' இதன் வகைப்பாட்டில் முக்கிய திரைப்படமாகும். மேரி ஷெல்லியின் ' ப்ரான்கஸ்டைன்' உடல்- திகில் இலக்கியத்தில் முக்கிய உதாரணமாகும். கோதிக் இலக்கியத்திலிருந்து துணை வகைப்படாக உடல்- திகில் உருவாகியுள்ளது. Shivers, Rabid போன்ற படங்களை இயக்கிய David Cronenberg கனடா இயக்குனர் உடல்- திகில் துணை வகைமைக்கு துவக்கமாக இருந்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் ஆபத்தானதாகவும், அச்சுறுத்தலாகவும் விமர்சிக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளான போதிலும் அதற்குண்டான சமூக பிரதிபலிப்பும் மக்களின் கவனத்தின் மூலமும் கவனத்தை பெற்றுள்ளன.
அலெக்ஸா குளிக்கும் பொழுது அச்சுறுத்தலாக காரிலிருந்து ஒருவித சத்தம் கேட்கையில் அவள் நிர்வாணமாக காருக்குள் சென்று அதனுடன் உடலுறவு கொள்கிறாள். அதை இன்பமான முறையில் ஏற்றுக்கொள்கிறாள். இயந்திரமும் தானும் உடலுறவு கொள்ளும் கனவு போன்ற காட்சியை அலெக்ஸா கற்பனை செய்கிறாள். அதற்கான காரணத்தை திரைப்படத்தின் மூலம் பெற இயலும். கார் மீதான அவளுடைய இயந்திர காதல் மனிதர்களிடம் இல்லை என்பதாக புரிந்து கொள்ள இயலும்.
அலெக்ஸாவும் அவளுடைய நெருக்கமான தோழி ஜஸ்டினும் முதல்முறையாக உடலுறவு செய்ய துவங்குகிறார்கள. ஆனால் ஜஸ்டினையும் காயப்படுத்தும் வகையிலேயே அது முடிகிறது. அவளுடைய மனித உணர்வற்ற காமம் அவளையும் ஏற்றுக் கொள்ள முடியாததாக அமைகிறது. அலெக்ஸா கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை உணரும் தருணத்தில் அவளுடைய யோனியில் இருந்து மோட்டார் எண்ணெய் வடிகிறது.
தொடர் கொலைகளை செய்யும் அலெக்ஸா வின் பார்வையில் இருந்து புரிந்து கொள்வது அவளுக்கு கடந்த காலங்களில் மனிதர்களால் ஏற்பட்ட வடுக்களாக இருக்கலாம். ஏனெனில் முதல் காட்சியில் அவளுக்கு விபத்து ஏற்பட்டதும் மருத்துவமனையில் அவளுடைய தந்தையை முறைத்தபடி அமர்ந்திருப்பாள். அது அவளுடைய தந்தை மட்டுமல்லாது மொத்த மனிதர்களின் மீதான கோபத்தையும் உண்டாக்கி கொள்வதாக அமையலாம். மனிதர்களால் தான் அமுக்கப்படுவதும் அதனால் ஏற்படும் மனநிலை பாதிப்புகளையும் இக் கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது. மேலும் அவளுக்கு பொருத்தப்படும் டைட்டானியம் உலோகமானது அவளுடைய வாழ்க்கையையும் அவளுடைய கனவுகளையும் இயந்திரமாகவே மாற்றிக் கொண்டுள்ளது. அவள் அவளுடைய உடலை உலோகமாகவே கற்பனை செய்து கொண்டிருக்கிறாள்.
இதன் காரணமாகவே அலெக்ஸா தன்னுடைய தந்தை மற்றும் தாயினுடைய அறையை பூட்டி வீட்டிற்குள் தீ வைக்கிறாள். காவல்துறையால் தேடும் தொடர் கொலையாளியாக அறியப்படும் பொழுது சிறுவயதில் காணாமல் போன ஒரு ஆணின் உடலாக தன்னை மாற்றிக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறாள். சாமர்த்தியமாக மார்பை துணியால் கட்டி தலை முடியை வெட்டிய பிறகு முக அமைப்பை மட்டும் பெண்மை உடையாதாகிறது. தன்னுடைய மூக்கை உடைக்க முயலும்போது தான் உடலின் வலியை நெருக்கமாக அறிய தொடங்குகிறாள்.
பத்து வருடங்களுக்கு முன்பு ஏழு வயதில் காணாமல் போயிருந்த அட்ரியன் லெக்ராண்ட் ஆக காவல்துறையில் அலெக்ஸா சரணடைகிறாள். அட்ரியனின் தந்தை வின்சென்ட் தனது மகனாக அங்கீகரித்து டிஎன்ஏ பரிசோதனையை மறுத்து அலெக்ஸாவை அழைத்து செல்கிறார். நீண்ட கால காத்திருப்பு மற்றும் பிரிவினால் ஏற்பட்ட அன்பின் மீதான மிகுதியும் தன்னை தேடி வந்த மகனை பரிசோதிக்க தேவையில்லை என்கிறார்.
அட்ரியன் கிடைத்து விட்டதாக எண்ணி வின்சென்ட்டின் மனைவி அலெக்ஸாவை பார்க்க வருகிறார். அலெக்ஸா தன்னுடைய அறையில் இருக்கும் பொழுது அவள் அட்ரியன் இல்லை என்பதை காண்கிறாள். துணியால் கட்டப்பட்ட தன் மார்பையும் வயிறையும் சொரிந்து கொள்கிறாள். இறுக்கத்தால் ஏற்பட்ட அரிப்பு அவளை மேலும் மேலும் சொரிந்து கொள்ளச் செய்கிறது. வின்சென்ட் தன்னை கண்டுபிடுத்துவிடக் கூடாது என்ற படபடப்பு ம் மட்டுமல்லாமல் தான் பெண் என்பதையும் சேர்ந்தே உணரத் தொடங்குகிறாள். வின்சென்ட்டின் மனைவி அலெக்ஸாவை எதிர்பாரத விதமாக வின்சென்டை அருகிலிருந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறாள். துணையில்லாமல் வாழும் மனிதருக்கு யாராக இருப்பினும் துணையாக இருக்கும் அவசியத்தை உணர முடிகின்றது. அலெக்ஸா தப்பிக்க முயற்சித்து கொண்டிருந்த வேளையில் வின்சென்டின் தன் மகனாக எண்ணி தன்மீது காட்டும் அன்பை உணரத் தொடங்குகிறாள். பலவகைகளில் தப்பிக்க நினைத்தும் வின்சென்ட் தன் மீது காட்டும் அன்பும், அரவணைப்பும் மட்டுமல்லாது அவள்மீது கொண்ட நம்பிக்கையால் அவள் அங்கேயே இருக்க தீர்மானிக்கிறாள்.
தொடர் உடல்பாவனைகளால் வின்சென்ட் அது தன்னுடைய மகன் அல்ல என்பதை உணர்கிறார். நேரிடையாக அலெக்ஸாவின் மார்பகங்களை காணும் வின்சென்ட் நீ யாராக இருந்தாலும் நீ என் மகன் தான் என்கிறார். அவள் தன்மீது அன்பு காட்டினால் போதுமானது என வின்சென்ட் நினைப்பது அலெக்ஸா புரிந்து கொள்ளத்துவங்குகிறாள். இத்திரைப்படத்தின் இயக்குனர் தைப்பற்றி கூறுகிறபோது, "மற்றவர்களுக்கு அன்பை வழங்குவதற்கு சமூக கட்டமைப்பு, பாலினம் என எந்தவகை வேறுபாடும் முரண்களாக அமையத்தேவையில்லை. சமூகத்தில் எந்தவகை உறவிலான அன்பும் அது அன்பாக மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த இயலும்" என்கிறார். இந்த திரைப்படமும் அதையே பிரதிபலிக்கிறது.
தீயணைப்பு பணியில் வின்சென்ட் அலெக்ஸாவையும் அழைத்து செல்கிறாள். அங்கு தன் மகனை காப்பாற்ற ஒரு தாய் கதறி அழுகிறாள். அதே சமயத்தில் மயங்கி உயிருக்கு போராடுகிறாள். வேறு பணியில் இருக்கும் வின்சென்ட் அலெக்ஸாவை அவளுக்கு உதவி செய்ய கூறுகிறார். அவர் சொல்ல சொல்ல அலெக்ஸா அந்த பெண்மணியை காப்பாற்ற போராடுகிறாள். பலவகையான போராட்டங்களுக்கு பிறகு காப்பாற்றப்படும் உயிரின் வலியையும் மதிப்பையும் உணர்கிறாள்.
முதலாவதாக ஆண்களின் காமத்தின் மீதான வெறுப்பும் கோபமும், சமூகத்தின் உள் கட்டமைப்பில் பதிந்திருக்கும் ஆண்களின் காமவெறியும் பாலினத்தின் பெயரால் நடைபெறும் வன்முறையும் அவளுடைய மனநிலையை கொலைகள் செய்ய தூண்டியிருக்கின்றன என புரிந்து கொள்ள இயலும். உள்மனதில் அமுக்கப்பட்டிருக்கும் காமம் மற்றும் பாலினத்தின் தடைகளை ஒட்டுமொத்த சமூக பிரதிபலிப்பாக அலெக்ஸா வெளிப்படுத்துகிறாள்.
கண்ணாடி பந்துபோல் உருவகம் செய்துள்ள அவளது வயிற்றிலிருந்து அவளுடைய குழந்தையை பெற்றெடுக்க வின்சென்ட் உதவுகிறார். அட்ரியன் இருந்த போது தந்தை என அழைத்த அலெக்ஸா, தன்னை அறிந்த பிறகும் குறையாத அன்பை வெளிப்படுத்தும் வின்சென்டின் மீது அன்பு கொள்கிறாள். அவள் வின்செட்டுடன் உறவு கொள்ள முயற்சிக்கிறாள். ஆனால் தான் மகனாக கருதும் அட்ரியன் இல்லை என்றாலும் மகனாக கருதிய அலெக்ஸாவுடன் உடலுறவு கொள்ள மறுத்து ஒதுங்கி விடுகிறார்.
வின்சென்ட் கதாபாத்திரம் அன்பிற்கான வேண்டுதலை புரிய வைக்கிறது. தீயணைப்பு துறையின் அதிகாரியாக இருப்பினும் மனைவியின் பிரிவு மகனின் இழப்பு என தன்னுடைய சோகத்தை கலைக்கவும் உடல் வலிமையை நிலைநிறுத்தவும் முயற்சித்தபடி இருக்கிறார். தன்னுடன் நெருக்கமாக உறவை பகிர்ந்து கொள்ள ஒர் உறவு வேண்டும் என்ற மனநிலையே அவரிடத்தில் பெற முடிகிறது. இறுதியில் அலெக்ஸா பெற்றெடுக்கும் குழந்தைக்கு 'நான் இருக்கிறேன்' என்று பலமுறை திரும்பத்திரும்ப அந்த குழந்தையிடம் கூறுவது மற்றவரை உறவாக ஏற்பது மட்டுமல்லாமல் தான் ஒரு துணையாக மாறுவதும் இயல்பில் அன்பாக உணரமுடிகிறது.
மனிதர்களிடமிருந்து விலகி டைட்டன் உலோகம் போன்று இரக்கமற்று வாழும் பெண்மணியால் கற்பனையாக உலோகங்களால் கவரப்படுகிறாள். காந்தம் போல மனிதர்களை விலக்கியும் இயந்திரங்களுடன் பிணைந்தும் வாழ துவங்குகிறாள். ஜூலியா இந்த கதையை உருவாக்க காரணமாக இருக்கும் "சமூகக் கட்டமைப்பிற்கு அப்பால் மனிதநேயம் இருக்கிறதா?" என்ற கேள்வியை எழுப்புகிறார். அவருடைய கேள்வி வேறுபாடுகளின் காரணங்களுக்காக மனிதநேயத்தை வெளிப்படையாக அந்நிய படுத்தும் மனிதர்களுக்கான கேள்வியாக உள்வாங்கிக் கொள்ள இயலும். எந்தவொரு கட்டமைப்பும் எந்த பிரதிநிதித்துவத்தை அடைய முயலுகிறது என்பது மிக முக்கியமான கருதுகோள்களாக பார்க்க வேண்டும். அன்பு பிறக்கும் இடமும் மனிதநேயத்தை தொடும் உணர்வுமே என்னுடைய படங்கள் பேசும் பொருளாக கூறுகிறார் இத்திரைப்படத்தின் இயக்குனர் ஜூலியா .
இத்திரைப்படத்தின் வழியாக உண்மையில், ஆண்களின் பார்வை பெண்களை அங்கீகரிக்கும் கோணங்களில் அமைகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. திரைப்படத்தின் ஆரம்பத்தில் நடைபெறும் அழகிகளின் நடனம் என்பது ஆண்களின் கட்டமைப்பில் ஒதுக்கப்பட்டு, குதூகலமான மனநிலையில் மட்டுமே பயன்படுத்தப்படும் பொருளாக பார்க்க முடிகிறது. ஒழுக்க வகைகளை அடிமை படுத்துவதற்கான காரணமாக அந்நியப் படுத்தும் பெண்களின் இயல்பான வாழ்க்கையை பாதிக்கும் மனநிலையை கேள்விக்கு உட்படுத்துகிறது.
மேலும், அலெக்ஸா வின் நெஞ்சில் டேட்டோவாக வரைந்திருக்கும், "Love is a Dog from Hell" என்ற வரி அன்பின் ஒடுங்கி போயுள்ள நிலையை கூறுகிறது. சிந்தனையை கேள்விகளாக கேட்டு தூண்டும் வகையிலான திரைப்படமாக அமைகிறது. இறுதியாக, அலெக்ஸா கர்ப்பிணியாக இருக்கையில் தன் வயிற்றை துணியால் கட்டிக்கொண்டு வாழ்வது பெண்ணின் இயல்பாகவே வெளிப்படுத்த முடியாத சமூகத்திற்காக மாற்றப்பட்டு அமுக்கப்பட்ட மனநிலையை வெளிக்காட்டுகிறது. தன்னுடைய கரு தற்போதைய வாழ்வியல் சூழ்நிலைக்கு பொருந்தாது என அதை அழிக்க நினைத்து வயிற்றை கையால் குத்தி ஏற்ப்பட்ட வடுவானது அவள் பெற்றெடுக்கும் குழந்தையின் உருவிலும் தெரிகிறது.