பூட்டானிலிருந்து யாத்ரீகர்களும் மந்திரவாதிகளும் கோப்பையும்

திரைப்பட ரசனை என்பது அதன் கருத்து, வடிவம், சொல்லும் தன்மை என்று வெவ்வேறு வகையில் அறியப்படுகிற பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கிறது. நல்ல கதையமைப்பு மட்டுமே சிறந்த படைப்பாளியாக்கிவிடுமா என்ன? மனதை அள்ளும் ஒவ்வொரு பிரேமும் சில சமயங்களில் அவையே உயர்ந்தவை என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும். சில சமயம் சிறுகதையின் முடிவுபோல படத்தின் முடிவு ரசனையை இன்னொரு தளத்திற்குக் கொண்டுசென்று விடும். திரைப்படத்தின் அம்சங்கள் நிறைந்திருகின்றன. ஒவ்வொரு பிரேமைத்தாண்டி இன்னொரு பிரேமிற்குள் நுழைகிற எத்தளத்திலும் அதன் அழகு இருக்கிறது. அதன் ஒழுங்கமைப்பையோ ஒழுங்கமைப்பு இல்லாதன்மையோ எடிட்டிங் என்ற கோர்வைக்குள் பல ரகசிய இயக்கங்களை உருவாக்குகிறது. அவற்றை உணர்விக்க வைக்கிறது. உணர்வை அனுபவங்களாக மாற்றிக்கொள்ள முடிகிறது. அந்த அனுபவங்கள் அலைக்கழிந்து தேடுதலாய் அமைந்து விடுகின்றன. ஓர் அனுபவம் அற்புதம் என்று மெய் சிலிர்க்க வைக்கிறது. உடனடி பாராட்டும், உணர்வித்தலும் தள்ளிப்போக மனதில் வைத்து மதிப்பீடு செய்துகொள்வதும், அதன் மூலம் மனித ஆன்மத் தேடலைக் கைக்கொள்வதும் பின்பு சாதாரணமாகிப் போகிறது. இந்தச் சாதாரணம் கவிதைப் படிமமாய் நிற்கிறது சில படங்களால்.


பூட்டான் போன்ற சிறு நாடுகளிலிருந்து வரும் படங்கள் நம் தமிழ்ப்படங்களை முன்னிறுத்தி தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகின்றன. இளம் தலைமுறையிலிருந்து வந்திருகிற இயக்குநர் நோர்புவின் இரண்டு படங்கள் நூறு வருட தமிழ் சினிமாவைக் கேள்விக்குள்ளாக்குகிறது. நிதானமும் அழகும் திரைப்பட மொழியும் உயர்ந்த படங்களை உருவாக்கும் சாத்தியங்களைக் காட்டுகின்றன. நோர்புவின் இந்த நேர்த்தியான அழகிற்குக் காரணம் அவரின் முந்தைய ஈடுபாடுகங்தான். கவிஞகர்களும் யோகிகளும் கலந்த குடும்பம் அவருடையது. புத்த மடங்களும் புத்த மதம் சார்ந்த வெவ்வேறு வகையான நிறுவனங்களும் அவரின் குடும்பத்தோடு சமந்தப்பட்டவை. பத்தொன்பது வயது புத்தபிட்சுவாக இருந்தபோது முதல் திரைப்பட அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இந்தியாவில் ரெய்மண்ட் ஸ்டெயினர் குழந்தைகள் திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது அவரிடம் புகைப்படம் மற்றும் கேமிரா சார்ந்த பாலப் படத்தைக் கற்றார். தொண்ணுரில் பெர்னாடோ பெர்ட்லூசியின் ‘வீட்டில் புத்தா’வின் தயாரிப்பு அவருக்குத் தந்த அனுபவங்கள் தனது நாட்டுத் திரைப்படத்தை இயக்கம் உந்துதல்களை அளித்திருக்கிறது. ‘த கப்’ என்ற படத்தைத் தொடர்ந்து அவர் ‘டிராவலர்ஸ் அன்ட் மாஜிசியன்ஸ்’ என்ற படத்தை இயக்கி சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.

புத்த படத்தில் வேலையில் இருக்கும் டான்ட்சுப்பிற்கு தினமும் எதிர்ப்பார்க்கும் கடிதங்கள் அங்கிருந்து அவன் இன்னும் வளமையான நாட்டிற்குச் செல்லும் கனவுகளைக் கொண்டிருக்கின்றன. மடாலயத்தின் ஒழுங்கு, இயற்கைச் சூழல் என்பதெல்லாம் அவனை ஆகர்ஷிப்பதில்லை. அவனின் ஆசை அமெரிக்காவிற்குப் போவது. ஆப்பிள் பொறுக்கும் வேலையாக இருந்தாலும் அதை அமெரிக்காவில் செய்து நிறைய பணத்தைக் கண்களால் பார்த்து ஆனந்திக்கிற கனவுகள் அவனை அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. வரும் ஒரு கடிதத்தை நம்பி புறப்பட்டுவிடுகிறான். அவசர கதிப் பயணம். பேருந்திற்காகக் காத்திருக்கிறான். வந்து சேராத பேருந்தால் காத்திருப்பவர்கள் அறிமுகமாகிறார்கள். ஆப்பிள் விற்பவன், சாமியார், தாள் தயாரிப்பதை வேலையாகச் செய்பவனும் அவனது இளம் மகள் சோனமும்.

டான்ட் சுப்பரின் திமிறிக் கொண்டிருக்கும் எண்ணங்களும், அலைபாய்தலும் அறிந்த புத்த சாமியார் கதை சொல்கிறார். அது இரண்டு சகோதரர்கள் குறித்தது. ஒருவனின் எண்ணங்களும் செயலும் கூர்மையானவையாக அமைந்திருகின்றன. மந்திரவாதியாகிற எண்ணமும் அவனுக்கிருக்கிறது. அவனின் சகோதரனுக்கு மந்திரத்தில் ஆர்வம் இல்லை. கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையால் அடர்ந்த காட்டுக்குள் செல்கிறான். ஒரு கிழவனையும் இளம் பெண் ஒருத்தியையும் சந்திக்கிறான். அப்பெண்ணை அடையும் முயற்சியில் ஈடுபடுகிறான். கிழவனைக் கொன்றுவிடுவது அவசியமாகிறது. விஷ மூலிகைகளைக் கொடுத்துவிட முயல்கிறான். பிறகு பயந்து அடர்ந்தக் காட்டிலிருந்து வெளிவர முயன்று பயத்தல் அலறுகிறான்.
அடர்ந்த காட்டின் அழகும், இயல்பான பாலியல் உணர்வுகளும், அவளை அடைவதற்காக அவனின் போராட்டங்களும் மந்திரவாதியாக ஆக விரும்பாதவனின் உலகமாக மாறிவிடுகிறது. ஆனால் மந்திரம் கற்றுக் கொள்ளும் இன்னொரு சகோதரனுக்கு வாழ்க்கை இயல்பாக இருக்கிறது.

புத்த சாமியார் இக்கதையை பல்வேறு பிரிவுகளாகச் சொல்கிறார். பேருந்து கிடைக்காத போது லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்கிற போதும், இரவு நேரத்தில் தீ மூட்டி ஏகாந்தத்தை அனுபவிக்கிறபோதும், நடந்து கொண்டே பயணப்பாதையைக் கடக்கிற போதும், ஓய்வெடுக்கிறபோதும் என்ற வகையில், சோனம் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவள். அவளின் இளமை அழகு டான்ட் சுப்பை கவருகிறது. புத்த சாமியாரின் கதையும் சோனாவின் அழகும் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.
மலைப் பகுதியின் அபரிமிதமான அழகும், அதன் இன்னொரு புறமாய் அடர்ந்த காட்டின் விசித்திரங்களும் இப்படத்தை வசீகரமாக்குகின்றன. வாழ்க்கையின் நிலையில்லாதத் தன்மையின் மத்தியில் நிலையான இயற்கை ஆறுதலும், நிம்மதியும் தரும் கணங்களை அனுபவப்படுத்துகிறது ஒவ்வொரு காட்சியும். ஜென் கவிதைகள் தரும் பூடகமாகவும், படிமங்களாகவும் இப்படம் அமைந்திருக்கிறது.

நோர்புவின் முதல் படமான ‘த கப்’ (கோப்பை) வெளிவந்தபோது ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. பூடானிலிருந்து முதல் படம் என்ற அளவில் புத்த மடாலயங்களை மையமாகக் கொண்ட கட்டுடைத்தலாகவும் அமைந்துவிட்டிருந்தது. துறவும் தத்துவமும் மட்டுமல்ல குதூகலமும், வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாக்குகிறவை மடாலயங்கள் என்ற கருத்து சுலபமாக நிலைகொள்ள ஆரம்பித்தது. வணிகமும், சீரழிவும் சாதாரனமாகிப்போன வல்லரசு நாடுகளின் திரைப்படங்களுக்கு சவால் விடுகிற வகையிலும் ‘த கப்’ அமைந்திருந்தது. மடாலயமோ மத நிறுவனங்களோ நவீன வாழ்க்கையின் பாதிப்புகளை உள்வாங்கிக் கொள்ளாமல் தனித்து மடங்களாகவே இயங்க முடியாது என்பதைச் சாட்சியாக்கியது. 1998 ஆம் ஆண்டின் உலக கோப்பைக்கான கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தபோது உலகம் ஒரு வகைக் காய்ச்சலால் பீடித்திருந்தது. செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும், பொதுவாக ரசிகர்களின் பகிர்வில் உலகக் கோப்பை பற்றினச் செய்திகளும் சாதாரனமாகியிருந்த காலம். தர்மசாலாவில் இருக்கும் புத்த மடாலயத்திற்கு இரண்டு திபெத்திய அகதிகள் வந்து சேர்கிறார்கள். இவர்கள் உலகக் கோப்பையைத் தொலைக்காட்சியில் பார்த்துவிடுகிற தீர்மானத்துடன் பக்கத்து கிராமத்திற்கு தொலைகாட்சி பார்க்க செய்கிற செயல்கள் திருப்தியளிக்கவில்லை. தொலைகாட்சிப் பெட்டியொன்றை வாடகைக்கு எடுத்துவர வைப்புத் தொகைக்கட்ட சிரமப்பட வேண்டியிருக்கிறது. உலகக் கோப்பை ஜுரம் மற்ற புத்த துறவிகளுக்கும் பரவவே மடாலயத்தின் மரபு ரீதியான சம்பிரதாயங்கள் உடைந்து நொறுங்கும் சந்தர்ப்பங்களை மெளனமாக ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தியாவின் அருகாமையிலிருந்து இவ்வளவு நேர்த்தியான படம் என்ற அளவில் இந்திய சினிமாவிற்கான சவாலாகவும், இந்திய சினிமாவின் வெற்றுத் தூண்கள் நொறுங்கும் சந்தர்ப்பங்களை வெளிகாட்டுகிற தருணங்களாகவும் நோர்புவின் படங்களின் வருகை அமைந்திருகிறது.

நன்றி: திரை மாத இதழ்
(இக்கட்டுரை ஆவணப்படுத்தும் நோக்குடன் பதிவிடப்படுகிறதே அன்றி வேறு எந்த வியாபார நோக்கமும் அல்ல)