படமல்ல நிஜம்


ஒவ்வொரு நாட்டின் பூர்வக்குடிகளையும் கொன்றொழித்து அவர்கள் உடைமைகளையும் கொள்ளையிட கிளம்பிய கொலம்பஸின் கப்பல் இன்னும் நிற்கவே இல்லை. எல்லைகளனைத்தையும் தாண்டி இப்போது மூன்றாம் உலகநாடுகளின் குருதிக்கடலில் நீந்தித் திளைக்கின்ற அந்த நாசகார கப்பல் முழுக்க, ஆயுதங்கள், மூலதனம், அறிவாளிகள், கொள்ளையர்கள், ஒற்றர்கள் மற்றும் மாறுவேடம் தரித்த அடியாட்கள். அடியாட்கள் தமிழ்சினிமாவில் வருகிறவர்களைப் போல கைலியும் முண்டா பனியனும் அணிந்து கழுத்தில் கர்ச்சீப்பும் புஜத்தில் தாயத்தும் கட்டிக்கொண்டு அலையமாட்டர்கள். பார்த்தால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி நேர்த்தியான உள்ளூர் அலங்காரங்களோடு கோர்ப்பசெவ், எல்ட்சின் போலவோ ஏன் நமது மன்மோகன்சிங் அல்லது சிதம்பரம் போலவோ இருப்பார்கள். இவர்கள் தான் தத்தமது நாட்டின் குரல்வளையை அறுத்து கொலம்பஸ் குடிக்க ரத்தம் தருகிறார்கள். உண்மையில் இவர்கள் ஒருபெயரில் திரிபவர்களல்ல. ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களுமல்ல. உள்ளூரில் ஒவ்வொரு சந்திலும் நமது அரசியல் தலைவர்களாக இவர்கள் பரவிக் கிடக்கின்றனர். மேலோட்டத்தில் பார்த்தால் ஒருவருக்கொருவர் பகைகொண்டு வெறுப்பதுபோல் தெரிந்தாலும் இவர்கள் அனைவருமே கொலம்பஸின் கொள்ளைக்கு உடந்தை. அவன் எச்சில், இரத்தம் உண்டு பிழைத்திருக்கும் சுயமரியாதையற்றவர்கள். மெயின் வில்லனின் மனதில் இடம் பிடிக்க இவர்களுக்குள் நடக்கும் போட்டியை நாம் ஆளுங்கட்சி – எதிர்கட்சி மோதலாக ரசித்துக்கொண்டிருகிறோம். ஆகவே இனி நமக்கு ஆளுங்கட்சி, ஆளாத கட்சி என்ற பாகுபாடு தேவையில்லை. அவர்கள் எல்லாருமே ஒரே அணியின் நலனுக்காக பேசுவதைக்கொண்டு எதிரெதிராய் நின்று ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வோமாக.

இந்த ஆட்டத்தில் ஓர் எளிய இந்தியர் அல்லது பச்சைத்தமிழர் வாழ்க்கை எப்படி பயணம் வைத்தாடப்படுகிறது என்பதற்கு பொருத்தமான உதாரணம் சாலைப் பணியாளர்கள்தான். இலாகா இல்லாத மந்திரியாக எந்த வேலையுமில்லாமல் வெட்டியாய் கிடப்பவரும் கூட தன் சம்பளத்தில், சலுகையில், லஞ்சத்தில் ஒரு பைசாவைவும் குறைத்துக்கொள்ளாத இந்தக்காலத்தில், உழைப்பவனுக்கு கூலி தருகிற போது மட்டும் உலகப் பொருளாதாரத்தையே அலசுவார்கள். சிக்கனம் சீரமைப்பு என்பார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பெருக்கி, மனித உழைப்பை மலிவாக்கி எந்தளவுக்கு குறைவான கூலியில் உழைப்பைச் சுரண்டுகிறார்களோ அந்தளவிற்குதான் ஒரு நிர்வாகத்தின் திறமையையும் சாதுர்யத்தையும் மதிப்பிடுகிற பொருளாதாரப் புலிகளும் எலிகளும் மலிந்த நாடு.

இந்தப் பின்புலத்தோடு சாலைப்பணியாளர் பணி நியமனம், அவர்களது பணித்தன்மை, வேலைநேரம் மற்றும் ஊதியநிலைமை இணைந்திருக்கிறது. ஆனால் ஏதுமில்லாத இடத்தில் இதுவாகிலும் கிடைத்ததே என்று பத்தாயிரம் குடும்பங்கள் ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழைந்தது.

தானுண்டு, தன் வேலையுண்டு என்று யாரும் இருந்து விடமுடியாது. அது பேராசை. நீங்கள் தரித்துக் கொண்டிருக்கும் தற்காப்புக் கவசங்களைத் துளையிட்டு, கிழித்து, உங்கள் உடல் உயிரை வம்புக்கிழுத்து வதைக்கும் புதிய நெறி உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களின் ஒப்பாரியைக் கேட்டு துயிலெழுவதை வழக்கமாக்கிக்கொள்ளுமாறு அப்புதிய நெறி தனக்கிட்ட ஆணையை நிறைவேற்றுவதில் அளவில்லா ஈடுபாடு கொண்டிருக்கும் நமது முதலவர் ஜெயலலிதா, அந்தச் சாலைப்பணியாளர்களின் வேலையைப் பறித்தார். சாலைப்பணியாளர் வேலை என்பது அதிகாரமும் சொகுசும் மிக்கது போலவும் அவர்களுக்கு சம்பளமாகவும் சலுகையாகவும் கோடிக்கணக்கில் கொட்டியழ வேண்டியிருப்பதைப் போன்றும், ஊடுருவி விட்ட திமுகவினரைக் களையெடுத்து அரசு நிர்வாகத்தை தூய்மைப் படுத்தும் ஒரு தேசநலன் சார்ந்த நடவடிக்கை போன்றும், ஊடகங்களால் இப்பிரச்சனை உதாசீனப்படுத்தப்பட்டது. ஆனால் சாலைகளையும் சாலை பராமரிப்புப் பணிகளையும் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே சாலைப்பணியாளர்களின் வேலை பறிக்கப்பட்டது என்ற உண்மை அம்பலமானது.

Image result for இரவுகள் உடையும்

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏற்றுக்கொண்டு அடங்கிவிடாமல் போராட்டத்தைத் தொடர்கின்றர் சாலைப்பணியாளர்கள். எதற்காக போராட்டம் நடந்தாலும் ‘இவங்களுக்கு வேறு வேலையில்லை’ என்று கமெண்ட் அடிக்கும் விட்டேத்தி மகாஜனங்களும், தமது வக்கரித்த எண்ணங்களை செயல்படுத்தும் களமாக போராடுகின்றவர்களைப் பார்க்கிற போலீஸாரும் நிறைந்திருக்கும் தமிழகத்தில், வினோதமும் நூதனமுமான பல்வேறு வடிவங்களில் இடையறாத போராட்டம். 
மக்கள் மன்றத்தையும் நீதி மன்றத்தையும் அந்த எளிய மனிதர்களின் போர்க் குரல் உலுக்கியது. பறித்த வேலையை திருப்பிக் கொடுக்காமல் மக்களைச் சந்திக்க முடியாது என்கிற நெருக்கடியை ஆட்சியாளர்களுக்கு உருவாக்கியது. வேலையைப் பறித்துவிட்டு ஆயிரம் வியாக்கியானங்களைச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் பணிய வேண்டியதாயிற்று. இப்போது சாலைப்பணியாளர்களுக்கு திரும்ப வேலை கிடைத்துவிட்டது.

ஓர் ஆட்சி வேலை வழங்குக்கிறது; இன்னொரு ஆட்சி அதைப் பறிக்கிறது. பிறகு பாதிக்கப் பட்டவர்களின் போராட்ட வீச்சுக்கு பயந்து வேலையைத் திரும்பத்தருகிறது. ஆனால் இந்த முக்கோண நிகழ்வுக்குள் எல்லாமே அடங்கிவிடுமா? வேலை தான் கிடைத்து விட்டதே பிறகென்ன வேண்டும் என்ற ஆசுவாசம் கொண்டு விட முடியுமா? இடைப்பட்ட இந்த மூன்றாண்டுகளில் அந்த ஊழியர்களும் அவர்கள் குடும்பங்களும் அனுபவித்த துயரங்கள், மன உளைச்சல்கள், உயிரிழப்புகளுக்கு யார் பொறுப் பேற்றுக்கொள்வது? தந்தையை இழந்த அனாதையான குழந்தைகளுக்கு எத்தனை ஜி.ஓ போட்டு அவர்களின் தந்தையைத் திருப்பித் தரமுடியும்? எங்கும் எழுப்பப்படாத இந்த கேள்விகளைத்தான் ‘இரவுகள் உடையும்’ ஆவணப்படம் எழுப்புகிறது.

வேலை பறிபோன அதிர்ச்சியில் இறந்தவர்கள், மனநிலை பிறழ்ந்து சுடுகாட்டில் உழன்றலைகிறவர்கள், நின்று போன திருமணங்கள், குடும்பத்தைக் காப்பாற்ற தீப்பெட்டி ஆப்பீசிலும், செங்கற்சூளையிலும் அடைக்கலம் தேடிய பெண்கள், எதுவும் பேசத் தோன்றாமல் கையில் கட்டியிருக்கும் கயிற்றின் பிரிந்த நூலை திருகிக்கொண்டு மௌனத்தில் உறைந்த விதவை, பொங்கிவரும் கண்ணீரை அடக்கமாட்டாமல் தலைகவிழ்ந்தபடி உண்ணாவிரதமிருக்கும் பெண்கள் என்று பார்வையாளனை பதட்டம் கொள்ளவைக்கும் காட்சிகளாலானது இப்படம். உலகமும் தெரியாமல், உலகமயமும் தெரியாமல் கிடக்கும் அந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையில் உலகமயமும், அதன் பிரிக்கமுடியாத பெருங்கேடுகளில் ஒன்றான தனியார்மயமும் நிகழ்த்திய வெறியாட்டத்தையும், அதை எதிர்த்து அவ்வூழியர்கள் நடத்திய போராட்டங்கள் அனைத்தையும் பேருழைப்பால் இப்படம் கோர்வைப்படுத்தியிருகிறது. நீதி மன்றத்தில் வழக்காடிய விவரங்கள், தனியார் மயமாகக்கப்பட்டதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள். போதிய பராமரிப்பின்றி ஏற்ப்பட்ட விபத்துகள், மோசமடைந்த சாலைகள், மாநிலத்தில் பல பகுதிகளிலும் பரவியிருக்கும் பணியாளர்களின் பேட்டிக்குள் என்று ஓர் ஆவணப்படத்தின் கட்டமைப்புக்குள் இருக்க வேண்டிய நுட்பமான பதிவுகள் எதையும் படம் தவறவிடவில்லை.

C:\Users\Arun M\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.MSO\4C5B1962.tmp

‘பொலிவியா’வின் கொச்சபம்பா நகரமக்கள் குடிநீர் விநியோக தனியார்மயத்தை எதிர்த்து உயிரையும் கொடுத்து போராடி வென்றிருக்கிறார்கள். அதைப் போலவே தனியார்மயத்தினால் பணியிழந்த சாலைப் பணியாளர்களும் போராடி வெற்றி கண்டுள்ளனர். இந்த வெற்றியின் துயரம் மிகுந்த சாட்சியமாக, ‘இரவுகள் உடையும்’ ஆவணப்படம் அமைத்திருக்கிறது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள், போலீஸ், சட்டம், நீதி எல்லாமே ஒரே அலைவரிசையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும், அவை ஒன்றுக்கொன்று இசைவானவைதான் என்கிற நுண்ணரசியலையும்கூட படம் கவனத்திற்குட்படுத்துகிறது.

படமாக்கலுக்கான தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாத ஒரு சின்னஞ்சிறு நகரமான சாத்தூரிலிருந்து வெளியான இப்படத்தில், தேர்ந்த கலைஞர்களின் செய்நேர்த்தி இருக்கிறதா, இல்லையா என்கிற மயிர் பிளக்கும் விவாதங்கள் இப்போது தேவையில்லை. அதேநேரத்தில் ‘ரூரல் கோட்டா’ என்ற அடிப்படையிலான இந்தப்படத்தை சலுகை மனப்பான்மையோடு யாரும் பார்க்கவேண்டிய அவசியமுமில்லை. தான் வாழும் சமூகத்தின் ஒரு சமகால நடப்பின்மை சமூகப் போருப்புள்ளதொரு கலைஞனின் செயல்பாட்டில் இருக்கும் நேர்மையும் எளிமையும்தான் இங்கே கவனப்படுத்த வேண்டியதாயிருக்கிறது. அதிகாரத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து எளிய மக்கள் போராடும்போது அவர்கள் தரப்பு நியாயத்தை யாவருக்கும் எடுத்துச் செல்வதும், அந்த நியாயத்தை ஆதரிக்குமாறு மற்றவர்களின் மனசாட்சியைத் தட்டிஎழுப்புவதும்தான் ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்பதன் மெய்யான பொருள். அந்த மட்டில் படத்தின் இயக்குனர் மாதவராஜும், இணைந்து பணியாற்றிய காமராஜூம், பிரியா கார்த்தியும் அவர்கள் குழுவினரும் வெற்றி கண்டுள்ளனர்.

திரைப்படம் எடுக்கும் வாய்ப்பைத் தேடித் தருகிற துருப்புச் சீட்டாக ஆவணப்படங்களையும், குறும்படங்களையும் அவர்கள் கருதவில்லை. தங்கள் நம்பும் கொள்கைகளை பரந்த மக்கள் திரளுக்கு கொண்டு செல்லும் சாதனமாகவே திரை வடிவத்தையும் கருதிக் கொண்டிருக்கும் அவர்கள் தமது உழைப்பின் அனுபவத்தினூடாக புதிய எல்லைகளைத் தொடுவர்ரகள் என்ற நம்பிக்கையைத் தருகின்றனர்.

இப்படியானதொரு படத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சாத்தூர் கிளை தயாரித்திருக்கிறது என்ற தகவலால் பதட்டமடைந்த ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் படம் வெளியாவதற்குள் அதை முடக்கிவிட வேண்டுமென்று துடித்தனர். கருத்துச்சுதந்திரத்தை பறிப்பதில் ஆட்சியாளர்களிடம் வித்தியாசம் ஏதுமில்லை. சினிமா என்கிற காட்சி ஊடகம் மக்கள் மீது செலுத்தும் தாக்கத்தையும் விளைவுகளையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் என்பதால் அவர்கள் மக்கள் விரோதக் கருத்துக்களை அம்பலப்படுத்தும் படங்கள் என்றால் அஞ்சுகின்றனர். அதனால் தான் ‘நதியின் மரண’த்தைத் திரையிடக்கூடாதென்று தடுத்தனர். ஆனால் திட்டமிட்டபடி இரவுகள் உடையும் ஆவணப்பட வெளியீட்டு விழா 30.03.2006 அன்று விருதுநகரில் நடந்து விட்டது. படத்தின் குறுந்தகடுகள் பறக்கும் தட்டுக்களைப் போல மாநிலமெங்கும் சுழன்றோடி இனி மக்களை சென்றடைய வேண்டும்.

மைகேல் மூர் தயாரித்த ‘பாரன் ஹீட் 9/11’ என்ற ஆவணப்படம் ஜார்ஜ் புஷ்ஷை அம்பலப்படுத்தியதென்றால், ஆனந்த் பட்வர்த்தின் ‘போரும் அமைதியும்’ பா.ஜ.க.வின் போர் வெறியை அம்பலப்படுத்தியதென்றால் ‘இரவுகள் உடையும்’ படம் உலகமயத்தையும் அதன் மீதான ஆட்சியாளர்களின் விசுவாசத்தையும் அம்பலப்படுத்துகிறது. இப்படத்தை தெருத்தெருவாக திரையிட்டு மக்களை உஷார்படுத்த வேண்டிய காலமிது.

என்னென்றால் சோத்திதுப்பார்க்க சத்துணவு ஊழியர்கள், டாஸ்மார்க் ஊழியர்கள் என்று இன்னும் ஆட்சியாளர்களிடம் ஏராளமான வெள்ளெலிகள் உள்ளன. ஒருவேளை அது எல்லோர் கழுத்திலும் விழப்போகும் வெட்டுக்கு ஒத்திகையாகவும் இருக்கக் கூடும். கவனம். கவனம்.. கவனம்...     

நன்றி: திரை