சென்னைத் திரைப்பட விழா வூட்லேண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கட்டுடன் நேர்காணல்

இருட்டறையில் திரைப்படத்தை பார்ப்பதைப் பின்னர் வெளிச்சத்தில் அதைப் பற்றிய விவாதிக்கும்போதுதான் நிறைய கலாச்சார, அரசியல் மாற்றங்கள் நிகழும். அதைத்தான் உலகம் முழுக்க திரைப்பட விழாக்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளில் இப்படியான விவாதங்கள் நிகழ ஒருவித கட்டமைப்பு தேவைப்படுகிறது. திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் மிகுந்த ஏழ்மையில் இருப்பவர்களும், திரைப்படங்களை மிக அதிகமாக நேசிக்கும் வர்க்க வேருபாடட்ட நபர்களும் ஓரிடத்தில் சந்திக்க வேண்டும். அந்த இடம் விவாதக் களமாக மாற வேண்டும். அப்படி ஒரு வெளியாக சென்னை வூட்லேண்ட்ஸ் திரையரங்கம் இருந்து வருகிறது. சென்னைத் திரைப்பட விழா நடக்கும் காலங்களில் வூட்லேண்ட்ஸ் திரையரங்கமே விழாக்குழுவினரின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக இந்த திரையரங்கை சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு கொடுத்து வருகிறார் அதன் உரிமையாளர் வெங்கட். பேசாமொழி இணைய இதழுக்காக அவருடன் உரையாடியதில் இருந்து.

வூட்லேண்ட்ஸ் திரையரங்கம் பற்றி?

1945லேயே எங்களுக்கான ஒரு தியேட்டர் உட்லேண்ட்ஸ் என்ற பெயரிலேயே மைசூரில் இருந்தது. 1945லிருந்தே சினிமா சம்பந்தமான தொழிலிலேயே இருக்கிறோம். சென்னையில் 1986லிருந்து திரையரங்க வியாபாரத்தை ஆரம்பித்தோம். சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை 2003ஆம் ஆண்டு பைலட் தியேட்டரில் திரையிட ஆரம்பித்தார்கள். பின்னர் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டில் ஆனந்த் தியேட்டரில் திரையிட்டார்கள். ஆனந்த் தியேட்டர் மூடப்பட்டவுடன் உட்லேண்ட்ஸ் திரையரங்கத்தில் திரையிடுகிறார்கள். அந்த வருடத்திலிருந்து தொடர்ந்து நாங்கள் ஒன்பது வருடங்களாக திரைப்பட விழாவிற்காக உட்லேண்ட்ஸ் திரையரங்கத்தை கொடுத்து வருகிறோம். திரைப்பட விழாவிற்கான சூழலைக் கொடுப்பதற்காக இரண்டு தியேட்டர்களையுமே (உட்லேண்ட்ஸ் மற்றும் சிம்பொனி) கொடுத்துவிடுகிறோம். இதனால் பொதுமக்கள் உள்ளே இருக்கமாட்டார்கள். உலக சினிமா பார்ப்பவர்கள் மட்டுமே இருப்பார்கள். சினிமா பற்றி மட்டுமே பேசுவார்கள். இது அவர்களுக்கு உன்னதமான மனநிலையைத் தரும்.