பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் - மார்க்சீயத் திரைப்பட அழகியல்

பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் படத்தில் வரும் ஒரு காட்சி இன்றைக்கு ஈராக்கிலுள்ள நிலைமைக்கு மிகப் பொருத்தமானது. ஓரு குறிப்பிட்ட தருணத்தில் எதிர்ப்பியக்கத் தலைவரான மெஹதியிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்கிறார்: உங்களது அல்ஜீரிய எதிர்ப்பியக்கமான எப்.எல்.என். மிகப் பெரும் ஆயுத வல்லமை கொண்ட பிரெஞ்சு இராணுவத்தைத் தோற்கடிக்க முடியும் எனக் கருதுகிறீர்களா? அதற்கு மெஹதி பதில் சொல்வார் : முடியாது. ஆனால் வரலாற்றின் நியதியை நீண்ட காலத்திற்கு பிரெஞ்சு ராணுவம் பின்தள்ள முடியாது. ஈராக் நிலையும்; அல்ஜீரிய நிலைமையும் பல விதங்களில் வேறுபாடு கொண்டதாயினும், மெஹதியின் இந்தக் குறிப்பிட்ட அபிப்பிராயம் ஈராக்குக்கும்; பொறுத்தமானதாகும். இறுதியில், ஈராக்கிலாயினும் அல்லது வலியும் தியாகமும் கொண்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நாடுகளில் எங்கிலும், தமது இறையாண்மைக்காகப் போராடுகிறவர்கள் அனைவரும் வெற்றி பெற்றே தீருவார்கள். நீண்ட நோக்கில் ஈராக் வெற்றி பெரும். ஒரு சுதந்திர நாடாக ஆகும். ஏனெனில் இது இயல்பாகவே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஈராக்கிலிருந்து வெளியாகியிருக்கும் அபுகாரிப் சித்திரவதைகள், அமெரிக்காவின் யுத்தம் எத்துணை நீதியற்றதும் சட்டமீறலானதும் என்பதனைத் தெரிவிக்கிறது. ஞாபகம் வையுங்கள் : வெளிப்படையாக நமக்குத் தெரிய வந்திருக்கும் சித்திரவதைகள்; பற்றித்தான் நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஜில்லோ பொன்டேகார்வோ

1992 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்தே பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் படத்தை நான் தேடிக் கொண்டிருந்;தேன். அம்மாதத்தில் இலண்டன் சேனல் நான்கு தொலைக்காட்சியில் அப்படத்தின் இயக்குனர் இத்தாலியக் கலைஞர் பொன்டெ கார்வோ பற்றிய ஒரு விவரணப் படத்தை தாரிக் அலி வழங்கியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் கீழையியல் நூலாசிரியர் பாலஸ்தீனக் கலாச்சார அறிஞர் எட்வர்ட் சைத்தும், கம்போடியப் படுகொலைகள் பற்றிய கில்லிங் பீல்ட்ஸ் படத்தினை வழங்கிய இங்கிலாந்து அரசியல் திரைப்படத் தயாரிப்பாளர் டேவிட் பட்ணமும் இருபதாம் நூற்றாண்டு சினிமாவில் பொன்டே கார்வோவின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றியிருந்தனர். டேவிட் பட்னம், பொன்டோ கார்வோ இயக்க மாவோவின் நீண்டபயணம் குறித்து ஒரு திரைப்படம் உருவாக்கத் தான் திட்டமிட்டிருந்ததை அந்த உரையாடலில் பகிர்ந்து கொண்டார். ஆதற்காக பொன்ட காரவோவின் பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் படத்தினையும் ஹாலிவுட் முதலாளிகளுக்கத் திரையிட்டுக் காட்டினார். படம் திரையில் ஓடத் துவங்கிய உடனேயே இருட்கையிலிருந்து எழுந்து கொண்ட ஹாலிவுட் பட முதலாளிகள், மவோவின் நீண்டபயணம் படத் திட்டத்திற்குக் தம்மால் நிதியளிக்க மறுத்துவிட்டார்கள் என்பதனையும் அவர் தெரிவித்தார். பிற்பாடாக பொன்டே கார்வோவின் படங்களில் இசையும் அரசியலும் பற்றிய இரண்டு கட்டுரைகளை எட்வர்ட் சைத்தும், இசை அமைப்பாளரான எனியோ மோரிக் கோனும் எழுதி வாசிக்க நேர்ந்தது.

பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் திரைப்படம் ஒருவருக்கு இரண்டு மாபெரும் சிந்தனையாளர்களை ஞாபகப்படுத்த முடியும். ஓருவர் புரட்சிகர வன்முறை குறித்த கோட்பாட்டாளரான பிரான்ஸ் பனான் மற்றவர் அவரது பூமியின் சபிக்கப்பட்ட மக்கள் நூலுக்கு முன்னுரை எழுதிய இருத்தலியல் மார்க்சியரான ழான் பால் சார்த்தர். பூமியின் சபிக்கப்பட்ட மக்கள் புத்தகம் மூன்றாம் உலக அரசியலின், போராளிகளின் புரட்சிகர வன்முறையின் தார்மீகத்தைப் பேசிய, புரட்சிகர கிளாசிக் எனப் போற்றப்படும் நூல். 1992 ஆம் ஆண்டிலிருந்து நான் தேடிக் கொண்டிருந்த பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் படத்தை மூன்று ஆண்டுகளின் பின், 1995 ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் நான் முதன் முதலாகப் பார்த்தேன். பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் திரைக்கதை நண்பர் அஜயன் பாலாவின் மொழிபெயர்;ப்பில் தமிழில் நூல் வடிவம் (பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் : ஆழி பதிப்பகம் : 2010) பெற்றிருந்தாலும் கூட, இன்றுவரையிலும் தமிழில் எதுவும் இப்படம் பற்றி விரிவாக எழுதப்பட்டதாக எனக்கு நிச்சயமில்லை.

பிரெஞ்சு ஏகாதிபத்தியக் காலனியாதிக்கத்தின் கீழ் 130 ஆண்டுகள் வதைபட்ட அல்ஜீரியா, 1962 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விடுதலை பெறுகிறது. பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் திரைப்;படம் 1950களின் பிற்பகுதியிலிருந்து 1960களின் முதல் மாதங்கள் வரையிலான விடுதலைப் போராட்ட அனுபவங்களை தனது களமாக எடுத்துக் கொள்கிறது. படத்தின் முதல் காட்சி பிரெஞ்சு ராணுவம் அல்ஜீரிய விடுதலைப் போராளிகளின் இருப்பிடத்தை காண்பிக்கச் சொல்லி ஒரு முதியவரை சித்திரவதை செய்வதுடன் துவங்குகிறது. இறுதிக் காட்சி எக்காளப்பறை முழங்க காற்றில் குதித்துக் குதித்துக் களியாடும் அல்ஜீரிய இளம் பெண்களின் நடனமும் கோலாகலமும் பரவ முடிகிறது. விடுதலைக்கு முன்பாக இரண்டு வருடங்கள் இருக்கவே படம் முடிகிறது. போராட்டம் தொடர்கிறது.

இந்தோ சீனாவில் வியட்நாமில் பிரெஞ்சுக் காலனியாதிக்கத்திற் கெதிராகக் கிளர்ந்த வியட்நாம் கொரில்லாக்களை எதிர்கொள்வதில் பயிற்சி பெற்ற பிரெஞ்சு ராணுவ அதிகாரி மாத்யூஸ் அல்ஜீரியாவுக்கு விடுதலை அமைப்பை ஒடுக்குவதற்காக வந்து சேர்கிறார். அவருக்குத் தரப்பட்ட வேலை விடுதலை இயக்கத்தின் தலைமையை வேரோடு அறுத்தெறிவது. எதிர்நிலையில் படத்தின் முக்கியமான நபராக வருகிறவன் அலி. படிப்பற்றவன். வேலையற்ற தொழிலாளி. கலகக்காரன் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறுமுறை சிறை சென்று நிறைய ஆண்டுகள் சிறையில் கழித்தவன். சிறையில் ஏற்பட்ட அரசியல் தொடர்பால் விடுதலைப் போராட்டத்துக்குள் இழுத்து வரப்பட்டவன்.

தலைமைக் குழுவில் ஒருவன் ஒரு சிறுவன். விடுதலைப் போராட்ட முன்னணியின் மத்தியக் குழுவுக்கும் பல்வேறு அடிமட்டத் தோழர்களுக்கும் பாலமாக இருக்கும் பிஞ்சு. 10-12 வயதே இருக்கும் குழந்தை. 1940களில் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுக் கட்சி தடைசெய்யப்பட்ட போது தலைமறைவு இயக்கத் தோழர்களுக்கு செய்தி சொல்பவர்களாகச் செயல்பட்ட கூரியர் போன்றவன். தேசீய விடுதலை அமைப்பைச் சேர்ந்த மூன்று மத்தியக்குழுத் தோழர்கள் அவர்களது மனைவிமார்கள் மகள்கள் போன்ற இவர்களே திரைப்படத்தின் கதைமாந்தர்கள்.

பிரெஞ்சுக் காலனிய அரசாங்கத்திற்கு உதவி செய்கிற உளவாளியாகச் செயல்படுகிற தன் சொந்த மனிதர்களையும் சுட்டுக் கொல்கிறான் அலி. பிரெஞ்சு ராணுவத்துடன் ஒப்பிட ஆயுதவலிமை தனக்கில்லையென அவதானிக்கிறது விடுதலை அமைப்பு. விபச்சாரத்தையும் குடியையும் போதை மருந்துப் பழக்கத்தையும் அல்ஜீரிய மக்களிடையில் தடை செய்கிறது விடுதலை அமைப்பு. அங்கங்கே தனித்தனியே ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். திடீரென்று காய்கறி வாங்க வரும் பர்தா போட்ட பெண் தருகிற துப்பாக்கியால் பிரெஞ்சுக் காவலதிகாரிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். நீச்சலுக்குப் போவதாகச் சொல்லும் சிறுவன் அருகிலிருந்த குப்பைத் தொட்டியிலிருந்து துப்பாக்கியை எடுத்து ராணுவதிகாரியைச் சுட்டுவிட்டு சாவகாசமாக தப்பிப் போகிறான்.

தெருவில் சென்ற கிழவன் பிரெஞ்சுக் குடியேற்றக்காரர்களால் குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறான். சிறுவர்கள் குடிகாரர்களையும் விபச்சாரத்தை செய்யும் மாமாவையும் நையப் புடைக்கிறார்கள். அன்றாட வாழ்வும் முழுவாழ்வும், தெருக்கள், கடைவீதிகள், அலுவலகங்கள், வீதிகள் தழுவி பிரெஞ்சுக்காரர்களுக்கும் அல்ஜீரிய மக்களின் விடுதலை வேட்கைக்கும் இடையில் இருக்கும் பதட்டம் படத்தின் காட்சிகளாகிறது. பிரெஞ்சுக்காரர்களுக்கான விடுதியொன்றில் குடித்துவிட்டுத் திட்டமிட்ட வகையில் வெடிகுண்டுப் பொதியை எடுத்துக் கொண்டு போய், அல்ஜீரிய மக்கள் குடியிருப்புக்குள் மத்தியில் வைத்து விட்டுப் போகிறார்கள் பிரெஞ்சுக் குடியேற்றவாதிகள், காலனியாதிக்கவாதிகள். அல்ஜீரிய மக்களின் குடியிருப்புகள் வெடித்துச் சிதறுகிறது.
மழை பெய்து சுவர் கரைந்த கறைநிலைத்த சுவர்கள். செத்துக் கொண்டிருக்கும் முதியவர். பிஞ்சுக் குழந்தையின் உடல். எங்கும் சாவின் ஓலம் கோபம் கொந்தளிக்கிறது. கூட்டம் ஆர்ப்பரித்து எழுகிறது. நீதி வேண்டி ஊர்வலமாக அணிதிரள்கிறது. அலி தலைமையேற்று நடத்திச் செல்கிறான். ஓடிவரும் சிறுவன் தலைமைக்குழு ஊர்வலத்தை நிறுத்தச் சொல்வதாகச் சொல்கிறான். இப்படிப் போனால் முழு மக்கள் கூட்டமும் கொல்லப்படும் என்கிறான். வுpடுதலை இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜப்பாரின் தலைமையில் அங்கு வரும் தலைமைக்குழு பழிவாங்கும் பொறுப்பை தாம் ஏற்கிறோம் என்கிறது. கூட்டம் கலைகிறது. திட்டம் தீட்டப்படுகிறது. அல்ஜீரியப் பெண்களின் நீண்ட கறுத்த தலைமுடி வெட்டப்படுகிறது. பர்தாக்கள் வீசப்படுகிறது. அவர்களது கறுத்த முடிக்கு வெள்ளைச் சாயமேற்றப்படுகிறது. பிரெஞ்சுப் பெண்களாக அவர்கள் வடிவமெடுக்கிறார்கள். மூன்று இடங்களில் வெடிகுண்டு வைக்கவேண்டும். பால் விற்பனை நிலையம். நடனவிடுதி. அல்ஜியர்ஸ் விமான நிலையம். இராணுவம் பெண்களை சோதனை போடுவதில்லை. பிரெஞ்சுப் பெண்களாயிருந்தால் கொஞ்ச நஞ்ச சந்தேகம் கூட இல்லை. பிரெஞ்சுக் கபே, நடனமண்டபம், விமான நிலையம் போன்றவற்றில் குண்டு வைக்க வேண்டும் என்பது முழுமையான திட்டம். பெண்களின் பிளாஸ்டிக் கைப்பைகளில் நேரத்திற்கு வெடிக்கும் குண்டுகள் கொண்டு போகப்பட்டு, பயணிகள், நடனக்காரர்கள், குழந்தைகள், முதியவர்கள், காதலர்கள், உணவருந்துபவர்களின் கால்களுக்கிடையில் வெடிகுண்டுப் பொதிகள் புதைக்கப்படுகிறது.

இந்தக் காட்சிகள் ஒரு தேர்ந்த கலைஞனின் மேதைமையில் உருவான காட்சிகள். சுயமரியாதையும் விடுதலை வேட்கையும் கொண்ட மனிதர்களின் ஆத்ம உத்வேகத்தை வெஞ்சினத்தை, மானுடத்தை ஜீவனுடன் மறுபடைப்பு செய்திருக்கிறது இக்காட்சிகள். இதுமட்டுமே தான் வாழ்வின் உண்மையா? இல்லை. நிச்சயமாக இல்லை. வெடிகுண்டு வைத்துப்போகும் இடங்களில் இருக்கிற மனிதர்களின் முகங்களில் இருக்கின்ற சந்தோசத்தை, ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைகளின் கடைவாய் எச்சிலை, நடனமாடும் காதலர்களின் அணைப்பை, சாவின் பயமற்று சுவடுகளே தெரியாமல் தம் தமது உணர்வுகளில் மூழ்கியிருக்கும் மனிதர்களை, அவர்கள் பிரெஞ்சுக்காரர்களே ஆயினும், மிகமிக மெதுவாக காமெரா பதிவு செய்கிறது. அடக்கு முறைக்கு எதிரான மனிதனின் எதிர்ப்புணர்வை பதிவு செய்யும் கலைஞன், அதனோடேயிருந்த வரலாற்றின் துக்கத்தையும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறான். வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறுகிறது. குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் உள்பட மனித உடல்கள் சிதறுகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் நடுங்குகிறது. மக்கள் எழுச்சியை அடக்க விடுதலை அமைப்பை வேரோடு அழித்தொழிக்க இந்தோசீனாவில் ஒடுக்குமுறை அனுபவம் பெற்ற மாத்யூஸ் வருகிறார். மாத்யூஸின் பாத்திரம் மிக உறுதியான செதுக்கியெடுக்கப்பட்ட ஒரு பாத்திரம். அவருக்கு தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு என்ன என்று தெரிகிறது. அரசியல் அவருக்கு இரண்டாம் பட்சம். ராணுவத்தின் நோக்கம் வெற்றிதான் என்கிறார். முடிவுகளை நிதானமாக திட்டமிட்டு எடுக்கிறார். பிரெஞ்சுக் காலனியாதிக்கம் தேவையா இல்லையா என்ற கேள்விகளுக்கு அவர் போவதில்லை. பிரெஞ்சு காலனியாதிக்கம் நிலைபெற வேண்டியதைப் பாதுகாப்பதே தன் வேலை என்று அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறார்.

கொரில்லா அமைப்பின் செயல் முறை பற்றிய திட்ட வட்டமான அபிப்பிராயம் அவருக்கு இருக்கிறது. கொரில்லா அமைப்பை முறியடிப்பது ராணுவரீதியில் இயலாது என்கிறார். வெடிகுண்டு வைப்பு தந்திரோபாயத்திலிருந்து அரசியல் ரீதியான மக்கள் இயக்கங்களைப் பற்றிச் சிந்திக்கிறது விடுதலை இயக்கம். அல்ஜீரியா தழுவிய ஏழு நாட்கள் முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது. அந்த நாட்களில் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளிலும் போராளிகள் ஈடுபடக் கூடாது என்பது இயக்கத்தின் அறிவுறுத்தல். அல்ஜீரிய மக்களின் விடுதலைப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்குச் செல்ல வேண்டும் என்பதுவே அவர்களது நோக்கம். ஏழுநாள் தொடர்ந்து வேலை நிறுத்தம். அல்ஜீரியா ஸ்தம்பிக்கிறது. மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். வாகனங்கள் ஓடாது நிற்க தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கிறது.
மாத்யூஸின் ராணுவம் வீடுகளை உடைத்துக்கொண்டு குடியிருப்புகளுக்குள் நுழைகிறது. ஒன்றிரண்டு அடிமட்டத் தொண்டர்கள் பிடிபடுகிறார்கள். சித்திரவதை மூலம் பெறப்பட்ட அவர்களிடமிருந்தான தகவலின் அடிப்படையில் அடுத்த மட்டத் தோழர்கள் பிடிபடுகிறார்கள். கால்கள் உடைக்கப்படுகிறது. கட்டப்பட்டு தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கப்படுகிறார்கள். காது நரம்பில் எலக்ட்ரிக் ஷாக் வைக்கப்படுகிறது. தண்ணீர் நிரம்பிய வாளியில் மூச்சுமுட்டப் போராளிகளின் முகம் புதைக்கப்படுகிறது. பிரெஞ்சு ராணுவத்தினர் நிதானமாகப் புகைத்துக் கொண்டு, நியமமாகச் சித்திரவதைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களைப் பொறுத்து அது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டபூர்வமான தொழில் நடத்தை. சித்திரவதைக் கூடத்தில் ஓலம் நிறைகிறது. சுவரோடு சேர்த்து தோழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இக்காட்சிகள்; அருகாமைக் காட்சிகளாக மிகத் தெளிவாக விரிவாக சித்தரிக்கப்படுகிறது.

சித்திரவதைகளைத் தொடர்ந்து தோழர்களின் மறைவிடம் கண்டுபிடிக்கப் படுகிறது. சிறையில் மாத்யூஸின் அலுவலகச் சுவற்றில் ஒரு வரைவு இருக்கிறது. ஆல்ஜீரிய விடுதலை இயக்கத்தின் முக்கோணவடிவ ஸ்தபான வடிவத்தின் படம் அது. 1-2-3 எண்கள் தலைமையைச் சார்ந்தவர்கள். 2-3 எண்ணுள்ள நபர்களுக்கு ஒன்று எண் மட்டுமே தெரியும். 2-3 இருவர்க்கிடையிலும் தொடர்பிருக்காது. அதைப் போலவே கீழ்மட்டத்தவர்களுக்குள்ளும் தமக்குள் தொடர்புகள் இருக்காது. மேல் மட்டத்தவரில் சிலரைப் பிடித்து சித்திரவதை செய்வதன் மூலம், அந்தத் தகவல்களின் அடிப்படையில், அடுத்தடுத்த கட்டத்திலுள்ள ஒவ்வொருவராகப் பிடித்து, இறுதியில் முழு விடுதலை அமைப்பினரையும்; பிடித்து அழிக்கலாம். தலைமைக் குழுவில் நான்கு பேரில் ஒருவரான மெஹ்தி பிடிபடுகிறார். பிரெஞ்சப் பத்திரிக்கையாளர் ஒருவர்; மெஹ்தியிடம் கேட்கிறது : நீங்கள் பெண்களின் கைப்பைகளில் கொண்டு சென்று, வெடிகுண்டுகள் வைக்கும் பயங்கரவாதச் செயல் மூலம் அப்பாவி மக்களைக் கொள்கிறீர்களே, இது எந்த வகையில் விடுதலைக்கு உதவக்கூடியது? மெஹ்தி; சொல்கிறார் : இப்படிச் செய்வதனை விடவும் விமானம் மூலம் நப்பாம் குண்டுகளை வீசி மக்களை அழிப்பது சுலபம்தான்;. நப்பாம் குண்டுகளை எங்களுக்குத் தாருங்கள். கைப்பைகளை உங்களுக்குத் தருகிறோம். அப்போது தெரியும் யார் பயங்கரவாதிகளென்று? மெஹ்தி சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்படுகிறது. தனது சட்டையைக் கிழிந்து முறுக்கி அதன் மூலம் அவர் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து செய்து கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. மாத்யூஸ், விசாரணையில் சித்திரவதை என்பதுதான் எமது நியாயம் என்று பத்திரிக்கையாளர்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அதனோடு மெஹ்தியின் கௌரவமான மரணத்திற்கும் அவர் மரியாதை செய்கிறார்.

படத்தின் இறுதிக் காட்சிக்கு வருகிறோம். படத்தின் ஆரம்பத்தில் சித்திரவதைக்கு உள்ளான பெரியவரால் அழைத்துவரப்படும் ராணுவம் மிஞ்சியிருக்கும் தோழர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறது. சரணடையும்படி வேண்டுகோள் விடுக்கப் படுகிறது. அலியும் சிறுவனும், பெண் தோழர்கள் சிலரும் மறைந்து கொண்டிருக்கும் அறை பிரெஞ்சு ராணுவத்தினரால் சூழப்படுகிறது. சரணடைய கால அவகாசம் தரப்படுகிறது. போராளிகள் எவரும் சரணடைய விரும்பவில்லை. கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்தக் கட்டிடம் வெடித்துச் சிதறுகிறது. வானம் அண்டைக் குடியிருப்புகளில் வாழும் மக்களின் கூக்குரலில் நிறைகிறது. முன்னொரு போதில் இதே மாதிரியிலான சந்தரப்பத்தில,; மற்றொரு மத்தியக் குழுத் தோழரான ஜப்பார், எம்மாதிரியான செய்தியும் வெளியே சொல்லப்படாமல் வெடித்துச் சிதறும் சாவு அர்த்தமற்றது எனக் கைது செய்யப்படுகிறார். மாத்யூஸின் திட்டப்படி விடுதலை அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் கொல்லப்படுகிறார்கள். அல்லது கைது செய்யப்படுகிறார்கள். பாரீஸிலிருந்து வந்த மேலதிகாரி விடைபெறுகிறார். மாத்யூஸ் பின்பொருநாள் தான் பாரீஸில் அவரைச் சந்திப்பதாகச் சொல்கிறார்.

படத்தின் இடையில் மாத்யூஸ், அல்ஜீரியா மக்களின் போராட்டம் பற்றியும் இங்கு நிகழும் கொலைகள் பற்றியும் பாரிஸில் ஏதேனும் எதிர்வினை உண்டா? என பத்திரிக்கையாளர்களை நோக்கிக் கேட்கிறார். வழக்கம்போல சார்த்தர் கட்டுரை எழுதியிருக்கிறார் என்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். ஏன் சாரத்தர்கள் எப்போதும் நமக்கு எதிர்ப் பக்கத்திலேயெ இருக்கிறார்கள்? எனக் கேட்கும் மாத்யூஸ்; தொடர்ந்து எதிரியை விடக் கொஞ்சம் குறைவாக நான் சார்த்தரை வெறுக்கிறேன் என்கிறார்.

அல்ஜீரியா விடுதலைப் போராட்டத்துக்காக ஸார்த்தர் மட்டுமல்ல பெனான் மட்டுமல்ல, முழு அல்ஜீரிய மக்களும் கடல் அலை போல் மறுபடி திரண்டெழுந்தார்கள். அழிந்து விட்டதாக நினைத்த அல்ஜீரிய விடுதலை இயக்கம் மறுபடி உயிர் கொண்டெழுந்தது. இரண்டு வருடங்கள் தொடர்ந்து மக்கள் எழுச்சிகள் அலையடித்தன. விடுதலை வேட்கை வெல்ல முடியாதது என்பதை வரலாறு உணர்த்தியது. விடுதலைப் பதாகை எங்கும் வீசியடித்தது. காற்றில் விசிறி விசிறி நடனமாடியபடி எக்காள முழக்கமிட்டபடி ஆடிவந்தாள் ஒரு இளம் பெண். 1966 ஜூலை அலஜீரியா விடுதலை பெற்றது. பொன்டே கார்வோ சினிமாத்திரையில் ஒரு போராட்ட காவியத்தை உயிர் பெற்றெழச் செய்தான்.

கோட்பாட்டு வடிவில் மார்க்சீயத் திரைப்பட அழகியலை, அவன் வாழும் சூழல்தான் ஒரு மனிதனைத் தீர்மானிக்கிறது என்பதில் துவங்கி, மனிதனது தான் விரும்பியபடி அல்ல, மாறாக அவன் வாழ நேர்ந்த சுழலின் நிலைமைகளைப் பொறுத்து சமூகத்தை மாற்றுகிறான் எனும் கார்ல் மார்க்சிலிருந்து துவங்கி, சோவியத் காலகட்டத்தின் சோசலிச யதார்த்தவாதம், இத்தாலிய நவ யதார்த்தவாதம், இலத்தீனமெரிக்காவின் வன்முறையின் அழகியல், மூன்றாவது சினிமாக் கோட்பாடு, இந்திய நிலைமைகளில் சமாந்தர சினிமா என ஒரு விரிந்து பயணத்தை நாம் மேற்கொள்ள முடியும். என்றாலும், நடைமுறையில், பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் எனும் ஒரோயொரு படத்தினை முன்வைத்தும் மார்க்சீயத் திரைப்பட அழகியல் தொடர்பாகச் சில முன்வரைவுகளுக்கு வருதலும் எம்மால் முடியும்.

பேட்டில் ஆப் அல்ஜியர்ஸின் கதைத் தேர்வு நிலையிலிருந்து, அதனது உருவாக்கம், அதனது உருவாக்கத்தில் படைப்பாளிகள் முன்தீர்மானித்த விடயங்கள், அவர்கள் கடந்துசென்ற தடங்கல்கள், இறுதி இலக்கை அடைந்த விதம் என அனைத்தும் இப்போது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. பேட்டில் ஆப் அல்ஜியர்சின் ஆதரமான யாசுப் சாதியின் போராட்டக் குறிப்புக்கள் நூல், பிராங்கோ சலினாஸின் முழுமையான திரைக்கதை மற்றும் வசன வடிவ நூல், என்னியோ மோரிக்கோனின் பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் இசை ஆல்பம், ஜில்லோ பொன்டே கார்வோவின் திரையாக்க அனுபவங்கள் குறித்த நேர்முகங்களின் தொகை நூல், பொன்டே கார்வோவுடனான எட்வர்ட் சைத்தின் அனுபவங்கள் குறித்த கட்டுரை, பொன்டோ கார்வோவின் வாழ்க்கை வரலாறு, இந்தியானா பதிப்பகம் வெளியிட்ட பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் படத்திற்கான கல்வித்துறை வழிகாட்டு நூல், இதனோடு அவரது திரைப்படங்களில் வெளிப்படும் காலனியாதிக்க வன்முறை முதல் பயங்கரவாதம் வரையிலான பிரச்சினைகள் குறித்த ஆய்வு என பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் எனும் ஒரு தனிப்பட்ட ஒரு திரைப்படம் குறித்து எழுதப்பட்டிருக்கிற நூல்கள் இன்று குவிந்து கிடக்கிறது.

அமெரி;க்காவிலிருந்து கிரிட்டேரியன் நிறுவனமும், இங்கிலாந்தின் அர்ஜன்டோ நிறுவனமும் வெளியிட்ட பேட்டில் ஆப் அல்ஜீரியா சிறப்பு ஒளித்தட்டுத் தொகுப்புக்களும் இப்பொழுது கிடைக்கின்றன. 2006 ஆம் ஆண்டு பொன்டே கார்வோ மவைதற்கு முன்பாக, 2004 ஆம் ஆண்டில் வெளியான கிரிட்டேரியன் தொகுப்பில், 2003 ஆம் ஆண்டில் அவரிடம் எடுக்கப்பட்ட நேர்முகம் இருக்கிறது. அது போலவே, 2008 ஆம் ஆண்டு யாசப் சாதியுடன் எடுக்கப்பட்ட நேர்முகம் அர்ஜன்டோ தொகுப்பில் இருக்கிறது. இந்த ஆவணப்படங்களில் கதைத் தேர்வும் முடிவும் குறித்த விவரங்களை இருவரும் பதிகிறார்கள். பிரான்ஸ் பெனானது எழுத்தினாலும், அல்ஜீரிய விடுதலைப் போராட்;டத்தினாலும் பாதிப்புற்ற பொன்டே கார்வோவும் சலினாசும் முதலில் ஒரு பிரெஞ்சு பாராசூட் படைவீரனின் பார்வையிலும் அல்லது ஒரு புகைப்படக் கலைஞனின் பார்வையிலும் - பொன்டே கார்வோ பத்திரிக்கையாளராக இருந்த காலத்தில், செய்திகளை விடவும் அது குறித்த புகைப்படங்களில் ஆர்வம் கொண்டவராகத் தன்னைப் பதிவு செய்கிறார் - இந்தப் போராட்டத்தைச் சொல்லுவதாகத் திரைக்கதையை அமைத்திருந்தனர். முதன்மைக் கதாபாத்திரமாக ஹாலிவுட் நடிகர் பால் நியூமனையும் சலினாஸ் மனதில் கருதியிருந்தார். சமகாலத்தில்தான் தனது நினைவுக் குறிப்புக்களை எடுத்துக் கொண்டு, அதனைத் திரைப்படமாக்க வேண்டும் எனும் யாசப் சாதி இத்தாலி வருகிறார். பால்நியூமன் என்ற வெள்ளையருக்கும் ஆப்ரிக்க விடுதலைப் போராட்டமான அல்ஜீரிய விடுதலைக்கும் என்ன சம்பந்தம் எனும் முக்கியமான கேள்வியை யாசப் கேட்கிறார். நினைவுக் குறிப்புக்களைப் படித்துப் பார்த்துவிட்டு இதனை வைத்துக் கொண்டு திரைப்படமெல்லாம் செய்ய முடியாது எனச் சொல்லிவிடுகிறார் பொன்டே கார்வோ. மூவருக்கும் இடையிலான நீண்ட விவாதத்தின் பின்பு, உண்மைக்கு விசுவாசமாக இருப்பது எனும் நோக்கில் சலினாஸ் தனது பழைய திட்டத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு புதிதாகத் திரைக்கதையை எழுதுகிறார். ஐரோப்பியப் பட முதலாளிகள் அரபுக்காரர்கள் குறித்த திரைப்படத்துக்குத் தாங்கள் நிதியளிக்க முடியாது என மறுத்துவிடுகிறார்கள். பொன்டே கார்வோவும் சலினாசும் தமது சொந்தப் பட நிறுவனத்தைத் துவங்குகிறார்கள். அன்றைய மதிப்பில் படத்தின் பட்ஜெட் 800,000 டாலர்கள். புரட்சிகர அல்ஜீரிய அரசு அவர்களது பட ஆக்கத்துக்கு தன்னால் இயன்ற அளவில் உதவுகிறது. படம் வெளியாகி இத்தாலியிலும் உலகெங்கிலும் மகத்தான வெற்றி பெறுகிறது. சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் பரிந்துரை பெறுகிறது. இதனைப் பார்த்து மார்லன் பிராண்டோ நடிக்க கெய்மாடா படத்தினைத் தயாரிக்க யுனைடெட் ஸ்டூடியோ பொன்டேதா கார்வோவை அழைக்கிறது. படம் மெய்மைக்கு நேர்மையாக இருக்க வேண்டுமானால் எவரின் பார்வையில் அத்திரைப்படம் சொல்லப்பட வேண்டும் எனும் முக்கியமான கேள்வியை திரைக்கதையின் உருவாக்கக் கட்டத்தில் படைப்பாளிகள் தீர்த்துக் கொள்கிறார்கள்.
இரண்டாவது பிரச்சினை, இந்தத் திரைப்படத்தினைச் சொல்வதற்கான வடிவம் என்ன? வரலாற்று ரீதியான, நிறையத் தொலைக் காட்சிப் பிம்பங்களால், புகைப்பட பிம்பங்களால் ஆவணப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வுகளைச் சொல்வதற்கான வடிவம் என்ன? இது உணர்ச்சிகரமான கதையால் அமைந்த படமா அல்லது ஆவணப்படத்தன்மை கொண்ட படமா? இதனைத் தீர்மானிப்பதற்கு முன்னால் அல்ஜீரியாவுக்கப் பயணம் செய்யும் பொன்டே கோர்வோவும், சலினாசும் யாசப்பின் உதவியுடன், வரலாறு நிகழ்ந்த இடங்களுக்குச் செல்கிறார்கள், புரட்சியில் பங்கு பற்றிய புரட்சியாளர்களையும் வெகுமக்களையும் சந்திக்கிறார்கள். நிறைய பத்திரிக்கை நறுக்குகளையும் பிரெஞ்சு ராணுவத்தினர் தரப்பில் எழுதப்பட்டவைகளையும் சேகரித்துக் கொள்கிறார்கள். அல்ஜீரிய விடுதலைப் போராளி ஒரு புறமும், மறுபுறம் பிரெஞ்சு பாராசூட் துருப்புகளின் தளபதி மாத்யூஸ_ம் இருக்கத் திரைக்கதை வடிவம் பெறுகிறது. நிகழ்வுகளின் திகதிகள் காட்சியமைப்புகளில் கறாராக இடம்பெறுகிறது. திரைப்படத்தில் யாசப், ஜப்பார் எனும் விடுதலை இயக்கத் தலைமைக்குழப் போராளியின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். பொன்டே கார்வோவின் விருப்பம் எப்போதுமே தொழில்முறையில் இல்லாத மனிதர்களே நடிகர்கள். மாத்யூஸ் பாத்திரத்தை மட்டுமே பிரெஞ்சு நாடக நடிகரான மார்டின் ஏற்கிறார். அல்ஜீரிய வெகுமக்களே படத்தின் கதாநாயகர்களாக ஆகிறார்கள். என்றாலும், கதாபாத்திரங்களின் பொறுத்தமான உடல் தோற்றங்களில் அதி அக்கறை கொண்ட பொன்டே கார்வோவின் தேர்வுகள் அதற்கு அமையவே இறுதியெய்துகின்றன.

படம் மெய்மைக்கு அருகில் வர வேண்டும் என்பது முன்கூட்டிய திட்டம். பொன்டோ கார்வோவின் விருப்பமான கறுப்புவெள்ளை படத்தின் நிற வடிவம். படம் நியூஸ்ரீல்களின் கச்சாவான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறார் கார்வோ. அழுத்தமான கறுப்பு வெள்ளையைத் தவிர்க்க வேண்டும் என்பதும், அன்றாடத்தைப் பிம்பங்களில் கொண்ட வர வேண்டும் என்பதும் அவரது முடிவு. நிலைத்த காமெராக் கோணம் என்பதனை விடவும், கைகளில் கொண்டு திரியும் ஹேன்ட் ஹெல்ட் காமெரா பாணியை அவர் தேர்ந்து கொள்கிறார். போராட்ட்த்தையும் அதில் ஈடுபட்ட மனிதர்களையும் தொடர்ந்து சென்று பதிவுசெய்வது அவரது இலக்கு. நியூஸ்ரீல் எபக்டை, அன்றாடத் தன்மையை, கச்சாத் தன்மையை எவ்வாறு கொணர்வது? கறுப்பு வெலள்ளையில் படம் பிடித்த பின்னால், அதனது நெகட்டிவ்விலிருந்து பிறிதொரு பிரதியை உருவாக்கி, அந்த நெகட்டிவை மறுபடியும் படம்பிடித்தல் என்பதன் வழி நியூஸ்லீலின் கச்சாத்தன்மையை அவர் சாதிக்கிறார். அடர்ந்த கறுப்புவெள்ளை என்பது மங்கி நிகழ்வின் மெய்மையை இந்த முறையினால் அவர் சாதிக்கிறார். திரைக்கதை,கதைமாந்தர்,திரைவடிவம் என்பதனோடு திரைமாந்தருடன் இசையின் ஊடாட்டம் குறித்த அவரது அதீத அக்கறையும் படத்தை ஒரு முழுமையான அனுபவமாக ஆக்குகிறது.

அடுத்து கதாபாத்திரங்களுக்கு இடையிலான இயங்கியல் குறித்த பிரச்சினை. இப்படத்தில் இது ஒடுக்குமுறையாளனுக்கும் ஒடுக்கப்படுபவனுக்கும் இடையிலான இயங்கியல், காலனியாதிக்கவாதிக்கும் காலனிய அடிமைக்கும் இடையிலான இயங்கியல். ஆதிக்க வன்முறைக்கும் புரட்சிகர வன்முறைக்கும் இடையிலான இயங்கியல். அமைப்புக்கும் தனிநபருக்கும் இடையிலான இயங்கியல். போராளியான அலியும், பிரெஞ்சு ராணுவ அதிகாரியான மாத்யூசும் அவர்களின் மீது சுமத்தப்பட்ட சூழலின்-அமைப்பின்-வரலாற்றின் பிரதிநிதிகள். என்றாலும் இயல்பில் அவர்கள் மனிதர்கள். இன்னொரு மட்டத்தில் அல்ஜீரிய வெகுமக்களைக் கொல்லும் பிரெஞ்சு அதிகாரவர்க்கத்தவரின் வன்முறை மற்றும் பிரெஞ்சு அதிகாரவரக்கத்தவரையும் படையினரையும் பிரெஞ்சு வெகுமக்களையும் கொல்லும் போராளிகளின் வன்முறை. இவர்கள் அனைவருமே மனிதர்கள். வேறு வேறு விதமான வரலாற்று அனுபவங்களில் நின்று இவர்கள் இருவருமே தத்தமது செயலுக்கான காரண காரியத்தை வழங்குபவர்கள். இவர்களைச் சித்திரிக்க வேண்டும் என்றால் இரண்டு தரப்பினரதும் மூளைக்குள் ஆழமாகச் செல்ல வேண்டும் என்கிறார்கள் சலினாசும் பொன்டே கார்வோவும். மத்யூஸ்-போராளிகள் தலைவரான மெஹ்தி தோன்றும் காட்சி உரையாடல் இதற்கான அற்புதமான சான்று. இந்தப் பார்வையை திரைப்படத்தின் இயங்கியலாக நாம் கொள்ள முடியும்.

பேட்டில் ஆப் அல்ஜியர்ஸில் அலியின் மரணத்திற்கும் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அரப்பணிப்பிற்கும், கெய்மாடாவில் தோலரசின் மரணத்திற்கும் வீரத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் நாம் தலை வணங்குகிறோம். வில்லியம் வாக்கரின் படுகொலை ஒரு சேர நமக்கு சந்தோஷத்தையும், மனதின் விளிம்பில் துயரத்தையும் விட்டுச் செல்கிறது. மாத்யூஸ் போராளித் தலைவன் மெஹ்தியின் மரணத்திற்குத் தலை வணங்குகிறான். அவனே அலியை-சிறுவனை-பெண் போராளிகளை உயிரோடு வெடிவைத்துத் தகர்க்கிறான். அலியும் மெஹ்தியும் தோலரசும் போலவே வாக்கரும் மாத்யூஸ_ம் தனிமனிதர்கள். அதே வேளை இவர்கள் எதிரெதிர் அமைப்பின் பிரதிநிதிகள். முன்னவர்கள் வீழ்ந்துபட்டே தீர வேண்டிய உலகின் பிரதிநிதிகள். பின்னவர்கள் வென்றே தீர வேண்டிய எதிர்கால உலகின் பிரதிநிதிகள். அடிப்படையில் மனிதர்களான இவர்களுக்கிடையிலான முரண் அமைப்பு சார்ந்த முரண். இந்த முரணைத் திரையில் படைப்பதுதான் மார்க்சீயத் திரைப்பட அழகியல்.

இறுதியாகச் சில கேள்விகள் மிஞ்சி நிற்கின்றன. பிரெஞ்சு ராணுவத் தளபதியான மாத்யூஸின் பாத்திரப் படைப்பு குறித்த தனது ஆட்சேபங்களை எட்வர்ட் சைத் பதிவு செய்கிறார். மாத்யூஸ_ன் சித்தரிப்பு அதிக மனிதத்தன்மையுடன் இருக்கிறது. அது அப்படி இருப்பது சாத்தியமா என்று அவர் கேட்கிறார். மறுபடியும் இந்தக் கேள்வி இப்படியாகவும் கேட்கப்படலாம் : ஆப்ரிக்கராலோ அல்லது பாலஸ்தீனத்தவராலோ பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் திரைப்படம் எடுக்கப்படுமானால் அப்போது பேட்டில்ஸ் ஆப் அல்ஜியர்ஸ் எவ்வாறனதாக இருக்கும்? மார்க்சீயத் திரைப்பட அழகியல் இந்தக் கேள்வியையும் நிச்சயமாக உரத்துக் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும். இத்தகையை இன்னும் பல கேள்விகளுக்குமான அடிப்படையாக இருக்கக் கூடிய திரைப்பிரதியாக நிச்சயமாக பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் திரைப்படம் உலகத் திரைப்பட வரலாற்றில் நின்று நிலைத்திருக்கும்.

---------------------------------------------------------------------------------------------------
குறிப்பு : லீனா மணிமகலையின் செங்கடல் திரைப்படம் குறித்த எனது கட்டுரை அடுத்த இதழ் பேசாமொழியில் வெளியாகும்.